மூதாதையராக சிரித்த மகள்
கண்ணாடி
எம்மை பிம்பம் செய்தது
கதை பேசியபடி கண்டிருந்தோம்
செல்ல மகளும் நானும்
என் எழுத்து பற்றிய கதையிலும்
பாட்டி பாட்டன் பற்றிய கதையிலும்
சிலாகித்துப் போனாள் செல்ல மகள்
அறம் செய்வதையே விரும்பிய
அவ்வையின் நரைத்த முடிகள்
இருட்டில் வெள்ளி மழையாக பொழிந்திருக்கும்
அத்தகு நரைமுடி உன் பாட்டிக்கும் உண்டு
மனமே மனிதரின் ஆறறிவென்ற
தொல்காப்பியரின் கண்கள்
முல்லை நில கொடிகளின் முல்லைப்பூ ஒத்தன
உன் பாட்டனின் கண்களும் முல்லைப்பூ கண்களே
தெய்வங்களுக்கெல்லாம் முதல் தெய்வம்
அகர முதல எழுத்துக்களே என்றுரைத்த
வள்ளுவரின் நெற்றியொளி அரை நிலவின் ஒளி ஒத்தன
உன் பாட்டனின் நெற்றியும் அரைநிலவு கவர்ந்தனவே
கடவுளை மற மனிதனை நினையென்ற
பகுத்தறிவு பெரியாரின் உரையாடும் உதடுகள்
மின்னலின் அசைவுகளை ஒத்திருப்பவை
உன் பாட்டனின் உதடுகளும் அத்திறம் வாய்ந்தவை
வர்ண சாதி இந்து மடமைக்கு சாவு மணியடித்த
அம்பேத்கர் தாத்தனின் உள்ளங்கைகள்
சூரியனின் முழு வெப்பம் சுமந்தவை
உன் பாட்டனின் கரங்களும் அநீதிகளை எரித்தவை
பொதுவுடைமை சமூகத்தின் திசைகாட்டிய
காரல் மார்க்ஸ் தாத்தனின் முகத்தோற்றம்
வெண்பஞ்சு மேகமாய் திரண்டிருக்கும்
உன் பாட்டனுக்கும் நெடுந்தாடி
வெண்பஞ்சாய் நிறைந்திருக்கும்
மனிதகுலத்தின் தத்துவ மேதை காரல் மார்க்ஸை
தன் கலையறிவில் பெற்றுத்தந்த ஜென்னி மார்க்ஸ் உள்ளத்திலும் பேரழகி
தங்க நிற கொன்றை மலரின் அடுக்கான பண்பழகி
உன் பாட்டிக்கும் பண்புகள் ஜென்னி மலர் ஒத்திசைக்கும்
மனிதகுலம் முழுமைக்கும் பேரன்பு மிளிர்ந்திருக்கும்
கண்ணாடி முன் உடனமர்ந்து
வியந்தபடி சிலிர்த்திருந்தாள்
இல்லாத பாட்டி பாட்டனை
இட்டு கட்டி நான் இசைக்க
வியக்க வியக்க கண்டிருந்தாள்
பாட்டியும் பாட்டனுமாக நான் வருவேன்
உறுதியும் மகிழ்வுமாய் சொல்லிச் சிரித்தாள்
அய்யோ மகளே!
உனக்கு தாடியும் முதுமையும் முளைப்பதா?
அய்யோ அப்பனே!
என் செயல்களில் வெளிவரும் பாட்டி பாட்டனுக்கு
தாடியும் வயதும் தேவையில்லையே
கண்ணாடி பார்த்து வியந்தேன்
இட்டுகட்டிய பாட்டி பாட்டன்கள்
மகள் உருவில் சிரிக்கின்றார்கள்
நாங்கள் கண்ணாடி பார்த்தபடி
கனவெல்லாம் சிரித்திருந்தோம்
No comments:
Post a Comment