எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Sunday, July 29, 2018

புதியவன் எடுத்துரைக்கும் சமூகவிஞ்ஞானம் - எழுத்தாளர் போப்பு –


புதியவன் எடுத்துரைக்கும் சமூகவிஞ்ஞானம்
-      எழுத்தாளர் போப்பு

சமூகவிஞ்ஞானம் என்ற சொல்லோ அந்த தத்துவமோ ஒருவருக்கு அறிமுகம் ஆகாமல் இருக்கலாம். நடைமுறை எதார்த்தத்தில் அது அங்கீகாரம் பெற்று விட்டது. வெளிப்படையான அடிமை முறை இல்லை என்பதும், மனிதர்கள் யாவரும் சமமானவர்களே என்று கருதுவதுதான் நாகரீகம் என்று ஒப்பக்கொள்ளப்பட்டிருப்பதுமே சமூகவிஞ்ஞானக் கோட்பாட்டிற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் ஆகும்.
          மனிதன் முழுமையான நாகரீகம் பெற்ற மனிதனாக ஆவதற்கு இன்னும் வெகு தூரம் போக வேண்டியிருக்கிறது. இன்றைக்கும் பெரும்பகுதி மக்களை பன்னாட்டு வணிக நிறுவனங்களும் அவர்களது ஊடகங்களுமே வழிநடத்துகின்றன. அவர்கள் முன் வைக்கும் கருத்துக்களையே முழு உண்மையென பெரும்பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அத்தகைய நம்பிக்கையில் இருந்து விடுபட்டு எதையும் பகுத்தறிந்து பார்ப்பது எப்படி? நம் அன்றாட வாழ்க்கையுடன் சமூகவிஞ்ஞானத் தத்துவத்தை எவ்வாறு பொறுத்திப் பார்ப்பது? என்பதை ஒரு சகஜமான உரையாடலாக எடுத்துரைக்கிறார் புதியவன். பல்வேறு இதழ்களில் அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புநீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்என்ற நூல். கட்டுரைகளை வாசித்துச் செல்லும்போதே சற்றே இளைப்பாற அங்கங்கே நாட்டுப்புற பாட்டு பாணியிலான கவிதைகளையும் இந்நூலில் இணைத்துள்ளார்.
          இந்த உலகம் தோன்றிய நாள் முதலே தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. மாறாதது எதுவும் இல்லை. சமூக அமைப்பு முறையும், உற்பத்தி முறையும், சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்துபவர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். சமூக நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் அதன் வரலாற்று இயங்கியல் பின்னணியுடன் காணும்போது மட்டுமே பக்கச் சாய்வின்றி தெளிவாக வரையறை செய்ய முடியும்என்பதே மார்க்சியத்தின் அடிப்படை அம்சம் ஆகும். சமூகத்தை அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதே சமூகவிஞ்ஞானம். மார்க்ஸ் தனது தோழர் எங்கல்ஸுடன் இணைந்து ஆராய்ந்து பல்லாயிரம் பக்க நூல்களாக எழுதியதுடன் அவ்விருவரும் களப்போராளிகளாகவும் இருந்தனர். மார்க்ஸியமானது வெறும் பிரசங்கத் தத்துவமல்ல. அது ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னைச் சமூகத்துடன் உரசிப் பார்த்தபடியே இருப்பது.
          தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் என அழைத்துக்கொள்ள விரும்பாதவர்கள், மார்க்ஸிய இயக்கங்களுடன் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாதவர்கள்கூட எதையும் மார்க்ஸிய வரலாற்று இயங்கியல் கண்ணோட்டத்துடன் அணுகும் முறையைத் தம்மை அறியாமலே கற்றிருக்கின்றனர். அதேபோது தம் வாழ்நாள் முழுவதையும் மார்க்ஸியத்திற்கு ஒப்புக்கொடுத்தவர்களிடமும் துளியும் மார்க்ஸிய அணுகுமுறை இல்லாதிருப்பதைக் காணமுடியும். இத்தகைய முரண்பாடு ஆச்சரியகரமான ஒன்றல்ல. மாறாக மார்க்ஸியராக அடையாளப்படுத்த விரும்பாத ஒருவருக்குள் மார்க்ஸியம் ஊடோடி இருப்பதே மார்க்ஸியத்திற்கு பெருமை ஆகும்.
          அத்தகையப் பெருமை உணர்வுகொண்ட புதியவன், தான் வாசித்து உணர்ந்த தத்துவத்தை, தனக்கு உண்மையாகத் தோன்றும் தத்துவத்தை நம் வாழ்வனுபவங்களின் ஊடாக நமக்கு அறிமுகம் செய்விக்கிறார். அத்தத்துவத்தைப் பின்பற்றுவதால் நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் என்று அழைப்பு விடுகிறார். வள்ளுவன் சொன்னசிறு கை அலாவிய கூழ்என்பதை, ஒரு குழந்தை உண்பதற்கு மேற்கொள்ளும் முயற்சியை விஞ்ஞானி ஆவதற்கான முயற்சியுடன் ஒப்பிட்டு, அழகுபடுத்தி தன் கருத்தின்பால் இலகுவாக ஈர்க்கிறார் புதியவன். தான் சொல்ல விழையும் கருத்தை எளிமையாகப் பிரித்து வகைப்படுத்துகிறார். அவர் சொல்லும்போது இயல்பாகவே தோன்றும் கேள்விகளையும் நம் சார்பாக அவரே எழுப்பி விடை சொல்லும் பாணியில் தன் கருத்தைத் தர்க்கரீதியாக நிறுவுகிறார்.
          இரண்டு எதிரெதிர் சக்திகளுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது மார்க்சியத் தத்துவத்தில் ஒரு முக்கியமான அம்சம். அதனை விளக்க புதியவன் ஒரு பறையிசைக் கலைஞனின் வாழ்க்கை நிகழ்வைக் கதையாக எடுத்துக் கூறுகிறார். ஆதிக்கச் சாதியினருக்கு எதிராக அக்கலைஞன் எழுப்பும் பறையொலியை பகைமுரண் என்றும் அக்கலைஞன் தன் மனைவியை அடிப்பதை நட்புமுரண் என்றும் வகைப்படுத்தி எளிதில் புரியச் செய்துவிடுகிறார்.
          இளம் வயதிலேயே பதினொரு பிள்ளைகளை ஈன்றெடுக்கும் துன்பத்திற்கு ஆளாகிய மும்தாஜ் பதினோராவது பிள்ளையைப் பெற முடியாமலேயே இறந்துபோனாள். அந்தப்புரமெங்கும் அழகிகளை நிரப்பிவைத்துக் கொண்டிருந்த ஷாஜகான், இறந்துபோன மும்தாஜுக்குக் கட்டிய கல்லறையைக் காதலின் சின்னம் என்கிறது ஆளும் வர்க்கக் கருத்தியல். அந்தத் தாஜ்மகாலைக் கட்டுவதற்கு ஷாஜகான் இரத்தம் சிந்தினானா, வேர்வையை வழித்தானா, பட்டினிக் கிடந்தானா. அடிமைகளை ஏவியிருப்பான், மக்கள் தலைமீது வரிகளை ஏற்றியிருப்பான் என்பதற்கும் மேலாக அவன் என்னதான் செய்துவிட்டான்.
          ஆனால் நம் புதியவன் சொல்லும் பாட்டாளி வர்க்கத்தின் உண்மையானக் காதல் கதையைக் கேளுங்கள். மலைப்பாதையில் நீர் சுமந்து வரும்போது கால் தவறி உருண்டு இறந்த தன் காதல் மனைவி பாகுனியின் இறப்பைத் தாங்க முடியாத மான்ஜி ஒற்றை ஆளாக மலையைப் பிளந்து பாதை சமைக்கிறான். முதலில் அவனது முயற்சியைக் கண்டு கேலி பேசிய சக கிராம வாசிகள்கூட அப்பாதை உருவாக்கத்தில் துணை நிற்கின்றனர். மலைவாசிகளுக்குக் காலகாலத்திற்குமான பாதை உருவாகிறது.
          தத்துவம் குறித்து பேசுகிற நூலில் சட் சட்டென்று காட்சிகள் மாறி வாசகனை வெவ்வேறு தளங்களுக்கு இட்டுச்சென்று வாசகன் சுயமாக பயணிக்க வழிகாட்டுகிறார் புதியவன்.
          காதலைக் குறித்துப் பேசும் இன்னொரு கட்டுரையில் எதிர்பாலினத்தைச் சேர்ந்த இருவர் மணிக்கணக்காகக் கடலை போடுங்கள். உங்களை நட்பான தளத்திற்கு உயர்த்திக் கொள்ளுங்கள். காதலில் கூடுதல் என்பது உயிரினப் பெருக்கத்திற்கான ஒன்று என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களது காதலின் விளைவு சமூக மாற்றத்திற்கானதாக இருக்க வேண்டும் என்று இறுதியில் அழுத்தம் திருத்தமாக முடிக்கிறார்.
          தனது சமூக அக்கறையை நெருடலில்லாமல் நம்முடையதாக்கவதில் இருக்கிறது புதியவன் எழுத்தின் வெற்றி.
          இடது சாரி சிந்தனை உடைய புதிய படைப்பாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முகம் பதிப்பகத்தின் தரமான தயாரிப்பாகியநீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம்என்ற இந்த நூல் சமூக அக்கறை உடையவர்கள் வாசிக்க வேண்டிய ஒன்று.
விலைரூ80/-
பக்கம் - 126
...

அறிமுகம்


No comments:

அதிகம் படித்தவை