எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Tuesday, July 9, 2019

கடவுள் வரலாறு


கடவுள் வரலாறு
புதியவன்
கடவுளைத் தேடுதல்
கடவுளால் உலகம் படைக்கப்பட்டது. உலக உயிரினங்களுக்கு வாழ்க்கை அருளப்படுவதும், காக்கப்படுவதும், அழிக்கப்படுவதும் கடவுள் செய்த விதி வழியாகவே நிகழ்கின்றன. கடவுள் ஒருவரே, அவரை அடைகின்ற வழிமுறைகள்தான் வெவ்வேறு. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கடவுள், பல்வேறு கடவுள்களுக்கு பல்வேறு வழிமுறைகள். ஒவ்வொரு நெறிமுறையும் ஒவ்வொரு மதமாகும். ஆண் கடவுளே  ஒவ்வொரு மதத்திற்கும் தலைமை கடவுளாக இருக்கிறார். பெண் கடவுள் ஒன்றுகூட மதத்தின் தலைமை கடவுளாக இருக்கவில்லையே ஏன்?
“மதங்கள் அனைத்தின் தலைமைக் கடவுள்களும் ஆண்கள் தான். பெண்ணியச் சிந்தனை என்ற பெயரில் சிலர் இப்போது கடவுளைப் பெண்ணின் உருவாகக் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். இதெல்லாம் பெண்ணினத்தைக் காப்பாற்ற அல்ல மாறாக மதத்தைக் காப்பாற்றவே உதவக்கூடும். கடவுள் மட்டுமல்ல தலைமைப் புரோகிதர்களும் எல்லா மதங்களிலும் ஆண்கள் தான்.” (ஓவியா.2014)
ஆண் கடவுள்கள் மதத்தின் அடையாளங்களாக நீடித்தபோதும், இயற்கையில் அடையாளங்களை ஆண் கடவுள்களால் கைப்பற்ற முடியவில்லையே ஏன்? நிலம், கடல், வனம், நதிகளின் பெயர்கள் ஆகியன தாய்மையின் அடையாளங்களாகவே இன்றும் சுட்டப்படுகின்றன. இவைகளுக்கு ஆண்மையின் அடையாளங்கள் ஏன் பொருத்தப்படவில்லை.  கண்ணகி என்ற கற்புக் கடவுளை கொற்றவை, கானமர் செல்வி, காளி, துர்கை என்ற பல பெயர்களில் வழிபட்டார்கள் என்பதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்களே, அந்த பெண் கடவுளர்களுக்கு கணவன்மார்களாக யார் இருந்தார்கள்? (சுரேஷ்,சௌ.2016:125,135.)
பொதுவாக, உலகைப் படைத்ததாக சொல்லப்படுகின்ற கடவுள், இந்த உலகில் எப்போது, எதற்காக, எப்படி உருவானார்? கடவுள் பிறந்து வளர்ந்த கதைதான் என்ன? கடவுள் பற்றிய சுவாரசியமான, குழப்பமான, முரண்பாடான பல்வேறு கதைகளைக் கடந்து, பொதுவான சில உண்மைகளை உணர்வதற்காக இக்கட்டுரை முயல்கின்றது. அறிவியல் தத்துவம் விளக்கும் சமூக வரலாறிலிருந்து கடவுளின் ஜாதகத்தை எழுத முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.   
கற்பனை வளமிக்க படைப்பாக்க சிந்தனை அறிவுப் பூர்வமான அணுகுமுறையை விட முக்கியம் என மொழிந்த ஐன்ஸ்டீனின் பொன்மொழியை ஓரளவிற்கு பின்பற்ற முயல்கிறேன். எனவே, கடவுளைத்தேடி அறிவியல் தத்துவ விளக்குடன் காலம் கடந்த கற்பனை பாதையில் பயணித்த, காதலிலிருந்து கடவுள்வரை என்ற கலை இலக்கிய அனுபவத்திலிருந்து இக்கட்டுரையின் விவரிப்புகளை அமைக்க முயல்கிறேன். (புதியவன்.2016:29-37) சமூக வரலாற்றில் கடவுளின் வழிபாடுகள் நான்கு நிலையில் கட்டமைந்துள்ளன.
1.இயற்கை வழிபாடு
2.தாய் தெய்வ வழிபாடு
3.தந்தை தெய்வ வழிபாடு
4.பத்தினி வழிபாடு
இயற்கையை வழிபடுதல்
கடவுள் தோன்றாத பழைய உலகின் எல்லை, மனித சமூகம் தோன்றாத ஓர் உலகமாக இருந்தது. உண்பதற்கும் வாழ்வதற்கும் பாதுகாப்பிற்கும் எந்த வசதிகளும் செய்யப்படாத நிலைமைகளே சூழ்ந்திருந்தன. இயற்கை ஆடையின்றி இயங்கிக்கொண்டிருந்தது. திட்டமிட்டு செய்யப்பட்டவையாக எந்தப் பொருள்களும் இல்லை. செயற்கையின் அடையாளமாக சிறு கோமணம்கூட கிடையாது. செயற்கையற்ற அந்தப் பழங்கால உலகின் பிரமாண்டங்களாகப் பலவித உயிரினங்கள் திரிந்துகொண்டிருந்தன.
மலை, காடு, நதி, கடல் என அனைத்தும் பல்வேறு தனித்துவங்களுடைய உயிரினங்களைச் சுமந்துகொண்டிருந்தன. உயிரினங்களுள் உயிரினமாக மனித மூதாதையர்களும் திரிந்துகொண்டிருந்தனர்.
நாங்கள் மனித மூதாதையர்களின் வாழ்க்கையைக் கவனிக்கத் தொடங்கினோம். நவீன கால மனித உலகின் எந்தப் பண்புகளையும் அவர்களிடம் காண முடியவில்லை. இயற்கையின் தான்தோன்றித்தனமான அசைவுகளுக்கு ஏற்றபடி வாழ்ந்து கொண்டிருந்தனர். இயற்கையைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்துகின்ற ஆயுதமாக மனித மூளை உருமாறவில்லை. எண்ணங்களைச் சிந்தித்து பகுத்தறிந்து செயல்படுகின்ற மனித அறிவு தோன்றியிருக்கவில்லை.
மனித அறிவு தோன்றாததால் அறியாமைகளும் தோன்றவில்லை. அறிவு பற்றியும் அறியாமை பற்றியும் எந்தக் கேள்விகளும் இல்லை. பதில்களும் இல்லை. கேள்வி பதில் இல்லாததால் உரையாடல் இல்லை. உரையாடல் இல்லாததால் கருத்துக்கள் இல்லை. கருத்துக்கள் இல்லாததால் கதைகள், கலைகள், துறைகள், மொழிகள் எவையும் இல்லை.
கொடூரமான வழ்க்கைப் போரில் வேட்டை மிருகங்களுக்கு இரையாகினர். உணவிற்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் மறைந்து மறைந்து வாழ்ந்தனர். வேட்டை மிருகங்கள் உண்டு முடித்த எஞ்சிய இறைச்சிகளையும் தாவர உணவுகளையும் உண்டு வாழ்ந்தனர்.
அவர்களது வாழ்க்கை மனித சமூகமாக உருப்பெறத் தொடங்காத வாழ்க்கை.
இயற்கை அவர்களைப் பலவீனமான உயிரினங்களின் வரிசையில் இடம்பெறச் செய்திருந்தது. அவர்களது வாழ்க்கையில் கடவுள் பற்றிய எந்த நம்பிக்கைகளையும் செயல்பாடுகளையும் காண முடியவில்லை. மற்ற உயிரினங்களைப்போல இயல்பாக வாழ்ந்துகொண்டிருந்தனர்.
“மனித இனத்துடன் நெருங்கியுள்ள குரங்கு இனங்களின் மூளையிலும்கூட கடவுள் பகுதி இல்லை. மனிதர்களின் மூளையில் கடவுள் பகுதி தோன்றி மூன்று மில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்கலாம். அதற்கு முன்பு கடவுள் பற்றிய எண்ணங்கள் இல்லை.” –(ஷாலினி.2018)
மனித மூதாதையர்கள் எண்ணற்ற தலைமுறைகளைக் கடந்து மனிதர்களாக உருமாறியிருந்தார்கள். வாழ்க்கைப் போரில் பிழைப்பதற்கான ஓட்டத்தில் மனித மூதாதையரின் மூளை, மனித மூளையாகப் பக்குவப்பட்டிருந்தது. எண்ணங்களைச் சிந்தனை செய்துப் பகுத்தறியப் பழகியிருந்தனர்.
இயற்கைக்குக் கட்டுப்படுபவர்களாக அல்லாமல் கருவிகளால் இயற்கையைக் கட்டுப்படுத்தத் தொடங்கியிருந்தனர். கற்கள், கட்டைகள், குச்சிகள், எலும்புகள் போன்றவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தும் உயிரினமாக மாறியிருந்தனர். இயற்கையைப் பற்றிய கண்டுபிடிப்புகளின் தொடக்கமே கருவிகளின் தொடக்கமாக அமைந்தன. கருவிகள் மனிதர்களின் தனித்துவமாக உருவாகியிருந்தன. கருவிகளைப் பயன்படுத்துகின்ற மனித உழைப்பு அவர்களின் வாழ்வை முந்தைய நிலையிலிருந்து படிப்படியாக எளிமைப்படுத்தத் தொடங்கியிருந்தது.
இயற்கைப் பொருட்களை கருவியாகப் பயன்படுத்துகின்ற நிலையிலிருந்து இயற்கையில் அல்லாத புதியக் கருவிகளை உருவாக்கத் தொடங்கினர். பழைய செயலிலிருந்து புதிய அறிவும், பழைய அறிவிலிருந்து புதிய செயலும் என்ற முறையில், மனித உழைப்பு வலிமை பெற்றுக் கொண்டிருந்தது.
மனிதனால் கருவியைச் செய்ய முடியுமாதலால் அதை எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு அவனுக்கு இருந்தாக வேண்டும். அதைத் திறம்படப் பயன்படுத்துவதற்கு முன், உற்பத்தி செய்யப்படப் போகும் பொருளைப் பற்றிய ஒரு கருத்து அல்லது படிமம் அவனது உணர்வில் தோன்றியாக வேண்டும். (ஜார்ஜ் தாம்ஸன்.2014:25)
வாழ்வதற்காக இயற்கை மீது திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்ட மனிதர்கள் தம்மைப் பற்றியும் இயற்கையின் சவால்களைப் பற்றியும் புரிந்துகொள்ள முயன்றனர். ஏராளமான கேள்விகள் உருவெடுத்தன, பதில்கள் உருவாகவில்லை. அச்சங்கள் உருவெடுத்தன, அறிதல் உருவாகவில்லை. வாழ்க்கை பற்றிய மனிதர்களது சிற்றறிவு, அறியாமைப் பெருங்கடலை உருவாக்கிக்கொண்டு மிதந்தது. மழை, இடி, மின்னல், நிழல், எதிரொலி, கனவு போன்றவைப் பற்றிய உண்மைகள் அறிவிற்கு எட்டாதவையாக இருந்தன.
அறிவிற்கு எட்ட முடியாத கேள்விகளுக்கு கற்பனைகளால் விடைகளைப் படைத்தனர். அறியாமைகள் மனித கற்பனைகளால் நிரம்பிக்கொண்டிருந்தன. அந்தக் கற்பனைகளில் ஆதிக் கடவுள் உருவாகத் தொடங்கியது. இயற்கை மீது மனிதர்கள் மாற்றங்களைத் திட்டமிட்டுப் படைப்பதைப்போல, இயற்கையும் மனிதரும் திட்டமிட்டப் படைப்பாக உருவாகினர் என்பதாகக் கருதத் தொடங்கினர். இந்தத் திட்டமிட்டப் படைப்பு யாரால் நிகழ்ந்தது என்ற கேள்விக்கு கற்பனையாற்றலால் பதிலை உருவாக்கினர். அந்தப் பதில் அனைத்தும் கடந்துள்ள கடவுள் என்பதாக உருப்பெற்றது. தமது அச்சத்திற்கும், அறியாமைக்கும், மரியாதைக்கும், உரிய பொருட்கள் மீது கடவுள்  என்ற கருத்தை இணைத்து உணரத் தொடங்கினர். மழை, இடி, மரம், காடு, சூரியன், விண்மின், நிலா, விலங்கு, பறவை, இறந்தவர் பற்றிய நினைவுகள் போன்ற அனைத்தும் கடவுள்களாக உணரப்பட்டன. இந்தக் கடவுள்களில் பாலினக் குறியீடுகளே கட்டமையவில்லை. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இங்கு கடவுளாக இல்லை. மனித உருவங்களுடன் கடவுள் இன்னும் இணைக்கப்படவில்லை. இயல்பான இயற்கை பொருட்களே கடவுளாக வணங்கப்படுகின்றன. அணங்கு, சூர், நாகம், கார், காள், இருள் போன்ற பெயர்களே கடவுளாக அறியப்படுகின்றன. கடவுளை மனித உருவத்தில் காண்பதற்கு பல தலைமுறைகளைக் கடந்து பயணிக்க வேண்டியுள்ளது.

பெண்களைத் கடவுளாக வழிபடுதல்
மனித உருவங்களில் நாங்கள் கவனித்த முதல் கடவுள்களாகப் பெண் உருவங்களேத் திகழ்ந்தன. இயற்கை கடவுள்கள் அனைத்தும் பெண்ணின் அடையாளங்களை ஏற்றிருந்தன.
இருட்டையும் கருப்பையும் உணர்த்திக்கொண்டிருந்த கார், காள் போன்ற கடவுள்கள் காரி, காளி என்பதாக உருமாறியிருந்தன. மழை, நாகம், வனம் போன்றன மாரியாத்தா, நாகம்மா, வனதேவதை என்ற பெயர்களைப் பெற்றிருந்தன. கொற்றவை, இருளி, சூழி, எசக்கி போன்று எண்ணற்றப் பெண் கடவுள்கள் உருப்பெற்றிருந்தன. இந்தக் கடவுள்கள் தோன்றிய காலம் தாய்த் தலைமை சமூகமாகும். இந்தக் கடவுள்களுக்கு கணவர் உறவுடைய எந்த ஆண் கடவுள்களும் இருந்திருக்கவில்லை.
தாய் தலைமை சமூக மனிதர்கள் ஒன்றிணைந்து சிந்தித்துச் செயல்படுகின்ற சமூகமாக வாழத் தொடங்கியிருந்தனர். மனித இனமாகப் படிமலர்ந்த வெற்றியைத் தனிமனிதர்களாகத் திரிந்து நிலைநாட்ட முடியாது என்ற முடிவிற்கு வந்திருந்தனர்.
வாழ்க்கை சவால்களை எதிர்கொள்கின்ற அவர்களது செயல்கள் திட்டமிட்ட உழைப்பில் ஈடுபடுவதன் அடிப்படையில் உருப்பெற்றிருந்தன. சகமனிதர்களாக ஒன்றிணைந்து பல மூளைகளால் சிந்தித்து  செயல்படுகின்ற வாழ்க்கையே பாதுகாப்பானது என்ற முறையில் மனித சமூகமாகப் பக்குவப்பட்டிருந்தனர். அதிக மூளைகளின் தேவை மனிதக் கூட்டம் அதிகரிப்பதற்கான அவசியத்தை உருவாக்கியது. மனிதர்கள் பெருகுவதற்கான அவசியத்திலிருந்து இனப்பெருக்கக் கடவுள் உருவாக்கப்பட்டிருந்தது. இனப்பெருக்கத்திற்கு பாலுறவு நடவடிக்கையே காரணம் என்ற உண்மை கண்டறியப்படாத காலமது. சகமனிதர்களை விரிவுபடுத்தி, பாதுகாப்பை வலிமைப்படுத்த வேண்டி, இனப்பெருக்கத்திற்கான கடவுளை வழிபட்டனர்.
புதிய மனிதர்களைப் பெற்றெடுப்பவள் பெண். பெண் பூப்பெய்துகிறாள். பிறகு தாயாகிறாள். பூப்பெய்தாத எந்தப் பெண்ணும் தாயாகுவதில்லை. எனவே பெண்ணின் பூப்பெய்தலை இனப்பெருக்கக் கடவுளின் அறிவிப்பாக உணர்ந்தனர்.
“மாதவிலக்கு இரத்தம், பிரசவக் காலக் கழிவுகள் ஆகியன பெண்ணிடம் உள்ள உயிர்ச் சக்தியின் வெளித் தோற்றங்கள் என்று கருதப்படுகின்றன. தொல்பழங்காலக் கருத்துப்படி மாதவிலக்கு என்பது குழந்தைப் பேற்றிற்கு  ஒப்பான செயலாகும்.” (தேவிபிரசாத் சட்டோபாத்யாயா. 2010:396)
 பெண் பூப்பெய்துவிட்டால், இனப்பெருக்கக் கடவுள் இவளுக்கு குழந்தை பெறும் தகுதியைத் தந்துவிட்டதாக மகிழ்ந்தார்கள். தமிழகத்தில் பூப்பெய்திய பெண்களைக் கொண்டாடுதலும் வளைகாப்புச் சடங்குகளும் தொல் சமூகத்தில் தாய்மையைக் கொண்டாடத் தொடங்கியதன் எச்சங்களாக உணர முடியும் என்பது எமது கருதுகோள்.
தாய்மை அடைவதற்காக பெண்மை கொண்டாடப்பட்டது. குழந்தைகளைப் பெற்றுத் தருகின்ற தாயைக் கடவுளுக்கு நிகராகக் கொண்டாடினார்கள். இனப்பெருக்கத் தெய்வம் உட்பட இயற்கை கடவுள்கள் அனைத்தையும் தாய் உருவங்களுடன் இணைத்தனர். எண்ணற்றத் தாய்க் கடவுள்கள் உருவாகின. கருவுற்று புடைத்த வயிறுடன் காட்சிதரும் இனப்பெருக்கக் கடவுளை இன்றும் காண முடிகின்றது.
“இது கொழுத்துப் பருத்த இடை, விம்மி வளர்ந்த மார்பகங்களுடடைய நிர்வாணமான கர்ப்பினிப் பெண்ணுடையது. இது கலைப் பொருளாக இருந்திருக்க முடியாது. ஏனென்றால் இச்சிலை மீது செம்மண் பூசப்பட்டிருக்கிறது. எனவே இது ஒரு சடங்கோடு தொடர்பு உள்ளதாக இருந்திருக்க வேண்டும்.  இப்பெண் வளமைத்தேவதை ஆவாள்.” (தேவிபிரசாத் சட்டோபாத்யாயா. 2010. 393-395)
நாங்கள் ஆராய்ந்தவரை அந்தத் தலைமுறை மனிதர்களிடம் தாயும், தாய்மையால் பெறப்பட்ட பிள்ளைகளும் முதன்மை உறவுகளாக இருந்தன. தந்தை, கணவர், மனைவி போன்ற உறவுகளே மனிதர்களிடம் தோன்றியிருக்கவில்லை.
யார் யாருடன் பாலுறவில் ஈடுபடக் கூடாது என்ற எந்த வரையறையும் இல்லாதநிலை, தாய்தலைமைச் சமூகத்தில்தான் மாறியிருக்கிறது. தாய்க்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பாலுறவானது,  இனப்பெருக்கக் கடவுளை அவமதிக்கின்ற நடவடிக்கையாகத் தாய்த் தலைமைச் சமூகம் கருதத் தொடங்கியது. தாயும் பிள்ளைகளும் பாலுறவு உரிமையில் ஈடுபடுகின்ற முறை தடைசெய்யப்பட்டது. இந்தத் தடையே பாலுறவு வரலாற்றில் தோன்றிய முதல் வரைமுறை.
இனப்பெருக்கக் கடவுளின் இரத்தப்போக்கால் உருப்பெற்ற பிள்ளைகள் தனது உடற்பசிக்கு தாயுடலைப் புணர்தல் என்பது இனப்பெருக்கக் கடவுளைப் புணர்வதற்கு நிகராகனதாகவும், அநாகரிகம் என்ற கருத்து நிலைபாட்டிற்கும் மனிதகுலம் தகவமைந்திருக்க வேண்டும். இதன் விளைவாகவே பாலுறவு வரைமுறை தோன்றியிருக்க முடியும் என்பது எமது கருதுகோள்.
தாய் தனது குழந்தைகளையும் கூட்டத்தையும் தலைமை உணர்வுடன் வழிநடத்தினாள். அந்தத் தலைமையில் அதிகாரம், ஆக்கிரமிப்பு, சுயநலம், லாபம் போன்ற எந்தப் பண்புகளும் உருவாகியிருக்கவில்லை. அதாவது தாயின் தலைமைப் பண்பானது இயற்கையின் இயல்பாகவே விளங்கியது. அவள் தனது கூட்டத்தைப் பாதுகாத்து வழிநடத்த, காடு சார்ந்தப் பொருட்களைச் சேகரிக்கின்ற தொழிலை வலிமையாகக் கையாண்டாள். வேட்டையாடுதல், மந்தை வளர்ப்பு, விவசாயம் போன்ற தொழில்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தன. காடு சார்ந்த பொருட்களைச் சேகரித்துப் பகிர்கின்ற தாயினது நடவடிக்கையே கூட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற தலைமைப் பண்பாக விளங்கியது.
தாய்க் கடவுள்கள் படிப்படியாகக் குடிசையில் தங்கவைக்கப்பட்டன. காடு சார்ந்தப் பொருட்களைச் சேகரித்தும், வேட்டைக்காக ஓடித்திரிந்தும் வாழ்கின்ற மனிதர்கள் கடவுள்களுக்கு கோயில் அமைக்கவில்லை. ஓரிடத்தில் தங்குகின்ற வாய்ப்பு அவர்களுக்கு இல்லாததால் குடிசையமைத்து வாழவில்லை. அவர்களது கடவுள்களும் ஓரிடத்தில் தங்கும் அடையாளமின்றி வெட்டவெளியில் அமைந்திருந்தன. மனிதர்களிடம் சிறிது சிறிதாக மந்தைத் தொழிலும் விவசாயமும் வளர்ச்சியடையத் தொடங்கின. இதனால் ஓரிடத்தில் குடிசையமைத்து வாழப் பழகினர். குடிசைகளை மையமாக அமைத்து கால்நடைகளை மேய்த்தனர், விவசாயம் செய்தனர். தங்களைப்போல கடவுள்களுக்கும் குடிசையமைக்கத் தொடங்கினர். வெட்ட வெளியில் நின்ற கடவுள்கள் படிப்படியாகக் குடிசைகளில் அமரப் பழகின.
ஒவ்வொரு பெண்ணும் கருவுறும் ஆற்றலை ஏற்பதற்கு முன்னர் இனப்பெருக்கக் கடவுளால் பூப்பெய்துகிறாள். பூப்பெய்திய ஒவ்வொரு பெண்களும் மனிதக் கூட்டத்தை அதிகரிக்க புதிய குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர். பிள்ளைகளின் கூட்டத்தைப் பாராமரிக்கும் பொறுப்புடன், தாய் தலைமையேற்று பாதுகாத்தாள். மனிதக் கூட்டம் தாய்த் தலைமைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தன. இத்தகைய சமூகத் தேவையின் முக்கியத்துவத்திலிருந்து தாய்மை கொண்டாடப்பட்டிருக்கிறது. தாய்மையைக் கொண்டாடுகின்ற மனித சமூகத்தால் தாய்க் கடவுள்கள் உருவாகின.
 இயற்கைக் கடவுள்கள் அனைத்திலும் பெண்மையின் அடையாளங்கள் இணைக்கப்பட்டன. இயற்கைக் கடவுள்கள் எண்ணற்ற தாய்க் கடவுள்களாக உருப்பெற்றன. காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகமும், வேட்டை நாகரிகமும் தாய்க் கடவுள்களின் உலகமாகத் திகழ்ந்தன.

ஆண்களைக் கடவுளாக வழிபடுதல்
கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்திலிருந்து கடவுள்களை ஆண் உருவத்தில் அறிய முடிந்தது. எங்கள் வேகத்தை நிதானித்து மக்களைக் கவனிக்கத் தொடங்கினோம். கற்கருவிகள் மரக்கருவிகள் அனைத்தும் மாறியிருந்தன. உலோகங்களால் கருவிகளைச் செய்து பயன்படுத்தத் தொடங்கியிருந்தார்கள். மந்தைத் தொழிலும் விவசாயமும் வளர்ச்சி பெற்றிருந்தன. இந்தத் தொழில்களின் வளர்ச்சி காடுசார்ந்த பொருள் சேகரிப்பின் அவசியத்தைக் குறைத்திருந்தது. தேவைக்கு அதிகமான பொருட்கள் சொத்துக்களாக உருவாகத் தொடங்கின.
சொத்துக்களைத் தாய் பராமரித்தாள். ஆனால், சொத்துக்களை ஆண்கள் உருவாக்கியிருந்தார்கள். ஆண்களின் அதிகபட்ச உழைப்பிலிருந்து சொத்துக்கள் உருவாகின. பெண்களின் இயல்பான உழைப்பு குறைந்தபட்சமாக இருந்தது. ரத்தப்போக்கு காலங்களிலும், கர்பக் காலங்களிலும் பெண்களுக்குச் சமூக ஓய்வு கிடைத்தன. அவள் உழைப்பிலிருந்து தற்சமயம் ஓய்வு பெற்று பராமரித்துக்கொள்ள உரிமை பெற்றிருந்தாள். ஆண்களுக்கு இத்தகைய ஓய்வுகள் இயற்கையாகவே கிடைக்கவில்லை. எனவே சமூகச் சொத்துக்களில் அதிக உழைப்பு ஆண்களுடையதாக இருந்தன. ஆனால் சொத்தின் உடைமை தாயிடமிருந்தது.
சமூகச் சொத்துக்களின் அதிகரிப்பும் பாலுறவு உரிமைகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களும் தந்தையதிகாரச் சமூகம் உருவெடுக்க வழியமைத்தன. வரைமுறையற்ற பாலுறவு உரிமையைக் கடந்து தாய் பிள்ளை மீதான பாலுறவு உரிமை தடை, உடன் பிறந்தவர் முதல் தூரத்து சகோதர சகோதரிகள் வரையிலான பாலுறவு உரிமை தடை போன்ற தடைகளைக் கடந்து, இருவேறு கூட்டத்து மனிதர்கள் பாலுறவு உரிமைகளில் ஈடுபடத் தொடங்கினர். இரு வேறு கூட்டத்து மனிதர்களுடனான பாலுறவு உரிமையால் ஒரு சமூகத்தின் சொத்துக்களை மறு சமூகத்தின் மனிதர்கள் உரிமை கொண்டாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றார்கள். தாயின் தலைமைப்பண்பு இரு கூட்டத்தாரையும் ஒரே சமூகமாக அரவணைத்தது. உழைப்பின் அளவை மதிப்பிடாமல் சொத்துக்களைத் தாய் பராமரித்தாள். அவள் நடவடிக்கைகள் சமூகத் தேவைகளை மட்டுமே கருதிக்கொண்டிருந்தன. ஆனால் சமூகத் தேவையைக் காட்டிலும் உழைப்பின் அளவையே ஆண்கள் உயர்வாகக் கருதினர். சமூகச் சொத்துக்கள் மீதான புதிய மனிதர்களின் உரிமையை ஆண்கள் ஏற்கவில்லை. தாயின் தலைமையை வெறுக்கத் தொடங்கினர். சொத்தின் வலிமையிலிருந்து சமூகத் தலைமையைப் பெற ஆண்கள் முயற்சித்தனர்.
ஆண்களின் முயற்சிக்கு இரண்டு கண்டுபிடிப்புகள் வழியமைத்தன.
1.சமூகச் சொத்துக்கள் ஆண்களின் அதிகபட்ச உழைப்பால் உருவாகின்றன. பெண்களின் சமூக உழைப்பு குறைந்தபட்சமாக உள்ளது. ஏனெனில் ரத்தப் போக்கு காலத்திலும் கற்பக் காலத்திலும் உழைப்பில் ஈடுபட முடிவதில்லை. ஆகவே ஆண்களே சமூகச் சொத்துக்களுக்குத் தலைமையேற்க வேண்டும்.
2.மனிதர்களைப் பெற்றெடுக்கும் பெண்கள் இனப்பெருக்க தெய்வத்தின் அருளால் குழந்தைகளைப் பெறுவது இல்லை. மாறாக ஆணுடனான பாலுறவு உரிமையால் மட்டுமே குழந்தைகளைப் பெறுகிறார்கள். விதை இல்லாமல் பயிர் இல்லை என்பதுபோல ஆண்கள் விதைக்காமல் பெண்களுக்கு குழந்தைகள் இல்லை. எனவே சமூக வாரிசுகளாகக் குழ்ந்தைகளைப் பெற்றுத்தந்த பெண்கள் கொண்டாட்டத்திற்கு உரியவர்கள் அல்ல என்பதாக வாதிடுகிறார்கள். 
இயற்கையில் அமைந்த தாய் தலைமைச் சமூகத்திற்கு எதிராக, செயற்கையான சொத்துக்களின் ஆதிக்கத்தால் ஆணதிகாரச் சமூகம் உருவாகத் தொடங்கியது. ஆணதிகாரச் சமூகத்தை ஆதரிப்பவர்கள் தாய் தலைமைக்கு எதிராக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள். தாயின் தலைமைப் பண்பிற்கு எதிராக ஆண்கள் சொத்ததிகாரத்தைக் கையாண்டார்கள். சமூகச் சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பை தாயிடமிருந்து ஆண்கள் கைப்பற்றினார்கள்.
தாய் தலைமையால் பராமரிக்கப்பட்ட சமூகச் சொத்து ஆண்களின் தனிச்சொத்துக்களாக உருமாறின. சொத்ததிகாரத்தின் அடிப்படையில் ஆண்கள் கொண்டாடப்பட்டார்கள். தாய்க்கு நிகராக ஆண்கள் தந்தை உறவில் மதிக்கப்பட்டார்கள். மக்களின் கடவுள்கள் படிப்படியாக ஆண் உருவத்தை ஏற்கத் தொடங்கியிருந்தன. தாய்க் கடவுள்களின் கூட்டங்களுக்கு இடையில் தந்தை கடவுள்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.
தாய்க் கடவுள்களுக்கும் தந்தை கடவுள்களுக்கும் இடையிலான பலவிதமான புனைவுகளை உருவாக்கினர். தாய்க் கடவுள்களைக் கொண்டாடுபவர்களுக்கும், தந்தைக் கடவுளைக் கொண்டாடுபவர்களுக்கும் இடையிலான போர்கள், பலவிதமானக் கதைகளாகப் புனையப்பட்டன. தந்தை கடவுளும் தாய்க் கடவுளும் போரிட்டதாகவும், தோற்றதாகவும், வெற்றி பெற்றதாகவும், கொல்லப்பட்டதாகவும், சமரசமடைந்ததாகவும், பலவிதமானக் கதைகள் உருப்பெற்றன.
போர் - சக்திக்கும் சிவனுக்கும் சண்டை
தோல்வி – நரிக்குறவர்களின் பெரிய கடவுளாகிய பெருமாள் காளியிடம் தோற்றது.
        காலை தூக்கி ஆடிய சிவனிடம் சக்தி தோற்றது.
கொலை – காளியின் காலடியில் சிவன் வீழ்ந்துள்ள காட்சி, தாய் ரேணுகையின் தலையை துண்டித்த பலராமன்.
சமரசமடைதல் – சிவன் தன் உடலின் பாதியை சக்திக்கு அளித்தார்
நாங்கள் ஆண் உருவங்களில் அமைந்த ஏராளமானக் கடவுள்களைக் கண்டோம். இயற்கைக் கடவுள்கள் பெண் அடையாளங்களை ஏற்றதற்கு நிகராக, ஆண் அடையாளங்களையும் ஏற்கத் தொடங்கியுள்ளன. மாரியாத்தா மாரியப்பனாகவும், கருப்பி கருப்பனாகவும், நாகம்மா நாகப்பனாகவும் விரிவு பெற்றன. தனித்துவமான தாய்க் கடவுள்களுக்கு நிகரான தந்தைக் கடவுள்கள் உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டன. அனைத்து மத நிறுவனங்களும் தந்தையதிகாரச் சமூகத்தில் தோன்றியவைதான். தாய்த்தலைமை சமூகத்தின் பல்லாயிரம் ஆண்டு கால உணர்வுகளால், தந்தை கடவுள்களின் வளர்ச்சிகள் முடக்கப்பட்டே அமைந்துள்ளன. இத்தகைய முடக்கங்களைக் கடந்துதான் தந்தை கடவுளரின் மத நிறுவனங்கள் உலக மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், மத நிறுவனங்களின் ஆதிக்கங்கள் இருந்தும்கூட மக்களின் நாடும், காடும், நதியும், கடலும், மலையும், அருவியும் தாய்க்கடவுள்களின் பெயர்களாலேயே இன்றும் அமைந்துள்ளன.

பத்தினியைக் கடவுளாக வழிபடுதல்
கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்திலிருந்து மக்கள் தலைமை சமூகத்தின் அறிவியல் தத்துவப் பண்பாடு சாத்தியமாகும்வரை, கடவுள் பற்றிய சமூக நம்பிக்கை தவிர்க்க முடியாதபடி அமைந்திருக்கும். தந்தை அதிகாரச் சமூகங்களில் சகமனிதர்களைப் பெற்றெடுக்கின்ற தாயின் சமூக மதிப்பு அழிந்துகொண்டிருந்தது. தாய், ஆணின் சொத்ததிகாரத்திற்கு கீழ்படிந்தாள். அவளது சமூகப் பாதுகாப்பிற்கு கீழ்படிதலே அவசியமாகியது. தாய், தந்தையின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டாள். சமூகத்தில் அடிமை என்ற புதிய உறவு தோன்றத் தொடங்கியது. சகமனிதர்கள் சொத்ததிகாரமுடைய ஆண்களுக்கு அடிமையானார்கள். சொத்ததிகாரம் உடையவர்கள் சமூக உழைப்பில் பங்கேற்காமல் அடிமைகளை உழைக்கச் செய்து சொத்துக்களை வலிமைபடுத்தினர். ஒருதார மணமுறை என்ற குடும்ப முறையே ஆண் கீழுள்ள அடிமைகளைக் கணக்கிடுவதற்கான அலகாக வரலாற்றில் அறியப்படுகின்றது.
“இந்த அமைப்பின் தலைவன் தன் கீழ் மனைவியையும் குழந்தைகளையும் சில அடிமைகளையும் ரோமானியத் தந்தையதிகாரத்துக்குக் உட்பட்டு அவர்களுடைய வாழ்வையோ மரணத்தையோ முடிவு செய்கின்ற அதிகாரத்துடன் வைத்திருந்தான்.” (எங்கெல்ஸ்,பி.2011(2008):88)
ஆண்களின் சொத்ததிகாரம் தலைமுறை கடந்து நீடிக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. தாய் தலைமையில் பராமரிக்கப்பட்ட சொத்துக்கள், அவளது பிள்ளைகளுக்கு உரிமையாகி வந்தன. ஆனால், தந்தையதிகாரச் சமூகத்தில் இந்த முறை சாத்தியப்படவில்லை. குழந்தை பெறுகின்ற ஆற்றல் ஆண்களுக்கு இல்லாததால், சொத்ததிகாரத்தை அடுத்த தலைமுறைக்கு மாற்ற முடியவில்லை. குழந்தை உருவாகின்ற ரகசியத்தைப் பற்றி தந்தை அதிகார சமூகத்தினர் தீவிரமாக சிந்தித்தனர். அவர்களது சிந்தனை கருவுருதல் பற்றிய உண்மையைக் கண்டறிந்தது.
பெண்ணின் கருவுருதலுக்குக் காரணம் இனப்பெருக்கக் கடவுள் அல்ல. ஆண்களுடன் ஈடுபடுகின்ற பாலுறவு உரிமையே பெண்ணைக் கருவுறச் செய்கிறது. இந்த உண்மை தந்தை அதிகாரச் சமூகம் நீடிப்பதற்கு தூண்டுகோளாக அமைந்தது. ஆண்கள் குழந்தை மீது உரிமை பெறுவதற்காக பெண்களைச் சொத்தாக்கினர். பெண்கள் சொந்த விருப்பத்திலிருந்து பாலுறவு உரிமையில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் உருவாகின. எந்த ஆணின் சொத்துக்களைச் சார்ந்து வாழ்கிறாளோ, அந்த ஆணுடன் மட்டுமே பாலுறவில் ஈடுபட வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டாள். அவளது குழந்தைகள் அந்த ஆணின் குழந்தைகளாக அங்கீகாரம் பெறத் தொடங்கின. சொத்ததிகாரமுடைய ஆணுக்கு குழந்தைகளைப் பெற்றுத் தருகின்ற சொத்தாக பெண் மாற்றப்பட்டாள். ஆணின் குழந்தைகளைப் பெற்றுத்தரும் சொத்தாக அங்கீகாரம் பெறுவதே பெண்ணின் சமூகமதிப்பாக அடையாளம் பெறத் தொடங்கியது.
ஆணின் சொத்தாக பெண்ணை உருமாற்றுகின்ற நிகழ்வாக திருமணங்கள் கொண்டாடப்பட்டன. சமூகத்தில் ஏராளமானத் திருமணங்கள் நிகழத் தொடங்கின. திருமணமான ஆணும் பெண்ணும், கணவர் மனைவி என்ற உறவுப் பெயரில் அங்கீகரிக்கப்பட்டனர். குழந்தைகள் தாயின் அடையாளங்களை மறைத்து, தந்தையின் அடையாளங்களை ஏற்கத் தொடங்கின.
“தகப்பனிடமிருந்து சொத்தை சுவீகரிக்கச் செய்வதற்கு குழந்தைகளுக்குத் தந்தையின் குலத்திலுள்ள பெயர்களில் ஒன்றைச் சூட்டி அவர்களைத் தந்தையின் குலத்துக்கு மாற்றிவிடுவது வழக்கமாகி விட்டது.” (எங்கெல்ஸ்,பி.2011(2008):86)
 தந்தை அடையாளம் ஆணதிகாரச் சமூகத்தை பல தலைமுறைகளாக வளரச் செய்தன. தந்தை அதிகாரச் சமூகம் உறுதிபெறத் தொடங்கியது.
தலைமைப் பண்பிலிருந்த பெண்கள் தந்தைக்கு கீழ்படிபவளாகவும், கணவருக்குக் கீழ்படிபவளாகவும், மகனுக்குக் கீழ்படிபவளாகவும் உருமாறியிருந்தாள். பாலுறவு உரிமையில் இயல்பாக வாழ்ந்த பெண்களை பாலுறவு அடிமைகளாகவே ஆணதிகாரம் உருமாற்றியிருந்தது. ஆணதிகாரச் சமூகம் சுமத்திய பாலுறவுக் கட்டுப்பாடுகளை பெண்கள் வெறுத்தனர். ஆணதிகாரத்தின் பாலுறவு விருப்பங்களால் தோன்றிய விபச்சார முறையும், கள்ளக்காதல் முறையும், பெண்களின் பாலுறவு உரிமை மீதான கட்டுப்பாடுகளை நெகிழ்ந்திருக்கும்படி செய்தன.
சொத்ததிகாரமுடைய ஆண்கள் தனக்கு சொத்துக்களாகிய பெண்களைக் கள்ளக்காதலிலிருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டனர். திருநங்கைகளைக் கண்காணிப்பிற்கு அமர்த்தியும், வேட்டை நாய்களை உலவவிட்டும், பெண்களைப் பாதுகாத்தனர் (எங்கெல்ஸ்,பி.2011(2008):99). அடக்குமுறை தன்னைத்தானே உடைத்துக்கொள்ளும் என்ற வரலாறு பெண்களுக்கும் பொருந்துமல்லவா. பெண்களின் பாலுறவு உரிமைகளை எந்தக் கட்டுப்பாடுகளாலும் தடுக்க முடியவில்லை. நவீன கால மனித உலகிலும் இந்த எதார்த்தத்தைப் பார்க்க முடிகின்றது.
இந்த எதார்த்தம் ஆணதிகாரச் சமூகத்தின் இயலாமையாக நீட்சி பெற்றது. இத்தகைய இயலாமையிலிருந்துதான் கற்புக் கடவுள்கள் உருவாக்கப்பட்டன. பெண்கள் ஆணின் சொத்தாக நேர்மையாக வாழ்வதில் பெருமையடைய வேண்டும். ஆணின் நிர்பந்தத்தால் அல்லாமல் தாமே விரும்பி பாலுறவுக் கட்டுப்பாடுகளுடன் வாழ்பவர்களாக, பெண்களை உருமாற்ற வேண்டும். இதற்கான முயற்சியாக ஆணதிகாரத்தால் திட்டமிட்டு  உருவாக்கப்பட்ட கடவுள்களே கற்புக் கடவுள்கள்.
கணவருக்குச் சொத்தாகிய நேர்மையான மனைவி, கடவுளின் ஆற்றலுக்கு நிகரானவளாகிறாள் என்ற கருத்து உருவாக்கப்பட்டது. மனைவி, கடவுளின் ஆற்றலைப் பெற்றதும் கற்புக் கடவுளாக மதிக்கப்படுகிறாள் என்ற நம்பிக்கையைப் பெண்களிடம் உருவாக்க முயன்றனர். பெண்களின் ஆழ்மன உணர்வில் கற்புக் கடவுளாக உருமாற வேண்டும் என்ற விருப்பம் விதைக்கப்பட்டது. கற்புக் கடவுள்கள் பற்றிய ஏராளமான இலக்கியங்கள் உருவாகத் தொடங்கின.
இறந்த கற்பினாட் கெவ்வம் படரன்மின்
       சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
       அறந்தலை பிரியா ஆறுமற் றதுவே.’           (கலி. பாலை-8)

கடவுட் கற்பின் மடவோள் கூற (அகம் -314)
         காமர் கடவுளும் ஆளும் கற்பின் (பதி.65)
         கடவுள் சான்ற கற்பின், சேயிழை (புறம்.198)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் – 55)
                               
      
இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்ப 
(வேட்டுவ வரி: 48-50)

இவற்றில் கண்ணகி கதைகள் வலிமையான சமூக அங்கீகாரத்தைப் பெற்றன. புகழ்பெற்ற கண்ணகி இலக்கியமான இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரம் அறியப்படுகின்றது. ஆணதிகார முயற்சியிலிருந்து உருவாக்கப்பட்ட கற்புக் கடவுளாக கண்ணகி உருப்பெற்றிருந்தாள்.  தந்தை அதிகாரச் சமூகத்தால் ஏராளமான பத்தினிக் கடவுள்கள் உருவாக்கப்படாவிட்டாலும் பழைய தாய்க் கடவுளர்களை மனைவிகளாகப் புனைந்து கதைகட்டினார்கள். தாய்க் கடவுள்களுக்கு பொருத்தமற்ற முறையில் பத்தினி பட்டங்களைச் சூட்டினார்கள். கண்ணகி என்ற கற்புக் கடவுளையே கொற்றவை, கானமர் செல்வி, காளி, துர்கை என்ற பல பெயர்களில்  மக்கள் வழிபட்டார்கள் என்பதாக சில ஆய்வாளர்கள் கருதுவது இத்தகைய பட்டங்களுக்கு மகுடம் அணிவிப்பதாகவே அமைகிறது (சுரேஷ்,சௌ.2016:125,135.).
இத்தகைய பத்தினி மகுடங்கள் அனைத்தும், தாய்த் தலைமை சமூகத்தை மூடி மறைப்பதற்கு, தந்தையதிகாரம் மேற்கொள்கின்ற முயற்சிகளாகவும் அமைகின்றன.

கடவுளின் அந்தம்
சொத்தாதிக்கம் தோன்றிய உலகிலிருந்து கடவுள் நம்பிக்கை இரண்டு வடிவில் செயல்படுகின்றது. ஒன்று, அடிமைப்பட்ட மக்கள் தங்களது மன அழுத்த நோயிலிருந்து விடுபட கடவுளைப் பயன்படுத்துகிறார்கள். இரண்டு, அடக்கி ஆள்பவர்கள் மக்களை அடிமைப்படுத்தும் கருவியாகக் கடவுளைப் பயன்படுத்துகிறார்கள்.
அறியாமைக் கடலை எதிர்கொண்டு விடுபட, காலந்தோறும் முயன்றுகொண்டிருக்கிறது மனித அறிவு. நவீன கால மனித உலகம் சமூக விடுதலையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
மனித அறிவுகள் உழைப்பை புதுமை செய்தன. அறியாமைகள் கடவுள்களைப் புதுமை செய்தன. மனித அறிவால் உருப்பெற்ற அறியாமைகள் அறிவை மூழ்கடித்தன. எனினும், அறியாமைகளால் உருப்பெற்ற கடவுள் நம்பிக்கைகளும் மனித இனம் பிழைத்து நீடித்ததற்கு உதவியிருப்பதை மறுக்க முடியாது. அறிவியல் தத்துவம் முதிர்ச்சியடையாத சூழலில், அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள் வளர்ச்சியடையாத நிலைமைகளில் இத்தகைய உதவிகள் அவசியப்பட்டிருக்கலாம். ஆனால், சமூக வளர்ச்சியின் இன்றைய நிலையில் கடவுள் நம்பிக்கைகள் அவசியமற்ற சுமைகளாக மாறிவிட்டன. மாறாக, சமூக அக்கறையின் எழுச்சிகளும், அறிவியல் தத்துவப் பயிற்சிகளும், சமூகவிஞ்ஞான முயற்சிகளும் அவசியப்படுகின்றன.
அறியாமைத் தத்துவத்தின் இடிக்க முடியாத கோட்டைகள் சமூக விஞ்ஞானிகளால் நொறுங்கிக் கொண்டு வருகின்றன. அழிந்து போகும் உயிரினங்களின் வரிசையை நெருங்கிக் கொண்டிருக்கும் மனித இனம் சமூக விஞ்ஞானத்தால் மீட்கப்படும். சமூக விஞ்ஞானிகளின் அறிவியல் தத்துவ முயற்சியால் மனிதஇனம் இயற்கையின் அங்கமாக நீடித்து வாழப்போவது நிச்சயம்.

மனித வரலாற்றுப் படிநிலையுடன் கடவுள் வரலாறை ஒரு அட்டவணை படமாக அறியலாம்.



கடவுள் வழிபாடு


மனித வரலாற்றுப் படிநிலை (8)

 சமூக வடிவம்

இயற்கை வழிபாடு /
தாய் தெய்வ வழிபாடு

1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம்

புராதன பொதுவுடைமை சமூகம் (தாய்தலைமை சமூகம்)
2.வேட்டை நாகரிகம்




தந்தை தெய்வ வழிபாடு (மதங்கள்) /
பத்தினி தெய்வ வழிபாடு
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம்
ஆண்டான் அடிமை (தந்தையதிகார சமூகம்)
4.விவசாய நாகரிகம்
நிலப்பிரபுத்துவ பண்ணையடிமை சமூகம் (தந்தையதிகார சமூகம்)
5.உற்பத்தி மீதான வணிக நாகரிகம்
6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல்
முதலாளித்துவ சமூகம் (தந்தையதிகார சமூகம்)
7.நிதி மூலதன பிரிவு தோன்றி சமூக உற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல்

அறிவியல் தத்துவ வளர்ச்சியும் வழிபாட்டு மரபுகளின் வீழ்ச்சியும்


8. மக்கள் தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல்

சோசலிச சமூகம் (ஏற்றத்தாழ்வுகள் மதிப்பிழந்த சமூகம்)

துணை செய்தவை
1.எங்கெல்ஸ், பிரெடெரிக். 2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின்    தோற்றம். மதுரை : கருத்து=பட்டறை.
2.எங்கெல்ஸ், பிரெடெரிக். 2012. மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம். சென்னை : பாரதி புத்தகாலயம்.
3.செல்வராசு, சிலம்பு நா. 2013. கண்ணகி தொன்மம். நாகர் கோவில் : காலச்சுவடு.
4.சுரேஷ், செள. 2016. சிலப்பதிகாரத்தில் தொல்குடிகளின் சமயமும் கண்ணகி தெய்வநிலையாக்கமும் : இனவரைவியல் நோக்கு. முனைவர்பட்ட ஆய்வேடு. புதுச்சேரி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
5.பக்தவத்சல பாரதி. 2003.(1990). பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
6.புதியவன். மே 2016. காதல் வரலாறு. புதிய கோடாங்கி. பக். 20-25.
7.புதியவன். டிசம்பர் 2016. காதலிலிருந்து கடவுள்வரை. புதிய கோடாங்கி. பக். 29-37.
8.ராகுல் சாங்கிருத்தியாயன் (தமிழாக்கம் கண. முத்தையா). 2003 (1949). வால்காவிலிருந்து கங்கைவரை. சென்னை :தமிழ்ப் புத்தகாலயம்.
9. ஓவியா. 23ஜுன் 2014. மதங்களும் பெண்களும். கீற்று வலைதளம்
10. சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
11. ஜார்ஜ்தாம்சன்.2014. மனிதசாரம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
12. எங்கெல்ஸ், பிரெடெரிக். 2011(2008). குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின்    தோற்றம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
13.அறிவுநம்பி,அ.2007. சங்க இலக்கியங்களும் கோட்பாடுகளும். புதுச்சேரி: புதுவைப் பல்கலைக்கழகம்.
14. தேவிபிரசாத் சட்டோபாத்யாயா. 2010. உலகாயதம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.


வெளிவந்த விபரம்
புதுப்பிக்கப்படாத பழைய வடிவம்
'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

கடவுள் வரலாறு - காணொளி உரை
https://www.youtube.com/watch?v=16PSBBJnVsY



5 comments:

Puthiyavan said...

அன்புடையீர்
வணக்கம்.
தங்களின் மூன்று கட்டுரைகளும் கிடைக்கப்பெற்றோம் (1.இலக்கிய அறிவியல், 2.கடவுள் வரலாறு, 3.சோளகர்தொட்டி;திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சங்கள்). மகிழ்ச்சி.
இக்கட்டுரைகளில் தங்களின் ஆழ்ந்தகன்ற வாசிப்பின் தன்மைகள் மிகச்சிறப்பாக மார்ச்சியப் பார்வையோடு வெளிப்படுகின்றன. ஆனால் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் பொதுக்கட்டுரை நிலையிலேயே இவை உள்ளமையால் இவற்றை ஆசிரியர் குழு நிலையிலேயே ஏற்க இயலவில்லை. உரிய ஆதாரக் கருத்துக்களுடன், ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளையும் சுட்டி ஆய்வுக்கட்டுரைகளாக மாற்றி எழுதுமாரு அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
தாங்கள் அனுப்பும் ஆய்வுக்கட்டுரை உரிய புலம்சார்ந்த ஆய்வறிஞர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஏற்கப்படும் நிலையில் அதனை வெளியிடுவதற்குப் பெயல் இதழ் காத்திருக்கிறது.
நன்றி
அன்புடன்
செந்தில்குமார்
peyalpublications@gmail.com

Puthiyavan said...

பெயல் இதழ் peyalpublications@gmail.com
அன்புடையீர்
வணக்கம்.
தங்களின் கடவுள் வரலாறு கட்டுரையும் சோளகர் தொட்டி புதினம் குறித்த கட்டுரையும் ஏற்கெனவே பதிவுகள் பன்னாட்டு இணைய இதழில் வெளியிட்டுள்ளீர்கள்.
ஆகவே தங்களது இவ்விரு கட்டுரைகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
முன்பே வெளியிட்ட கட்டுரையை வெளியிடும் வழக்கத்தை ஆய்விதழ்கள் கொண்டிருப்பதில்லை.
புதிதாக எழுதும் கட்டுரையை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கட்டுரைகள் தெரிவு செய்யப்படும் முறை குறித்த கோப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.
நன்றி
அன்புடன்
செந்தில்குமார்

Puthiyavan said...

வணக்கம் சான்றீர். மன்னிக்கவும். அந்த இரு கட்டுரைகளும் புதுப்பித்தலுக்கு முன்பு அனுப்பிய கட்டுரைகள். எனினும் தங்கள் ஆய்விதழுக்கான அணுகுமுறைகளை உடனே படித்தறிந்து அதன்படி தங்களை அணுகுவேன் என உறுதி அளிக்கிறேன். ஏனெனில் தங்களது மிகச்சரியான அணுகுமுறையால் நான் கவரப்பட்டுள்ளேன். இதுவரை எந்த இதழும் அனுப்பப்படும் படைப்பு குறித்த முறையான தகவல்களை எமக்கு வழங்கியதில்லை. ஆனால் தாங்கள் அக்கறையுடன்
தெரியப்படுத்துகிறீர்கள். நிச்சயம்
தங்கள் பரிசீலனையில் அங்கீகாரம் பெரும்படி ஆய்வினை மேற்கொள்வேன். இதோ தாங்கள் அனுப்பியுள்ள விதிமுறைகளை கற்கத் தொடங்குகிறேன். மகிழ்ச்சியும் நன்றியும்...
அறிவன்புடன் புதியவன்

Puthiyavan said...

பெயல் இதழ் peyalpublications@gmail.com

மிக்க மகிழ்ச்சி.
நீங்கள் விரிந்த அளவிலும் ஆழ்ந்த நிலையிலும் வாசிக்கும் திறனும் எழுதும் திறனும் பெற்றிருப்பது கண்டு அகமகிழ்கிறேன்.
ஆய்வுச்சிக்கல் கருதுகோள் சார்ந்து ஆய்வுக்கட்டுரை எழுதி அனுப்பவும்.

தமிழ் மொழி said...

அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/2020/04/blog-post_50.html?m=1

அதிகம் படித்தவை