எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Sunday, June 2, 2019

அகண்ட பாரதத்தின் அகில பாசிசம் : மோடீசம்


அகண்ட பாரதத்தின் அகில பாசிசம் : மோடீசம்
புதியவன்

தாய் பிரசவிக்கப்போகும் பேய் குழந்தை. இது ஒரு பேய் கதை. இந்த பேய் கதையை பள்ளி பருவத்தில் நண்பர்களுக்குள் பேசி பயந்திருக்கிறோம். இந்தக் குழந்தை பிறந்துவிட்டால் உலகம் அழிவை சந்திக்கும். பெற்ற தாயையும் உலகையும் கருணையின்றி கொன்றுவிடும். இதன் தலை சுழியில் 3 என்ற எண் சின்னமாக உருப்பெற்றிருக்கும். இந்தச் சின்னம்தான் பேய்க்குழந்தை என்பதற்கு அடையாளம்.
தலையில் மூன்று என்ற அடையாளத்துடன் உலகில் எந்த மூலையில் குழந்தை பிறக்கப்போகிறதோ என்று பயந்தோம். உலகை அழிக்கப்போகும் அந்தக் குழந்தை எப்படியிருக்கும் என்ற ஆர்வம் எங்களிடம் மேலோங்கியிருந்தது. நாட்கள் கடந்தன. ஆண்டுகள் உருண்டன. உயர்கல்வி செல்லச்செல்ல அறிவியல் திமிருக்கு ஆட்பட நேர்ந்தது.
உலகை அழிக்க ஒரு பேய் குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் வெறும் கதை என்று துணிந்துவிட்டோம். அறிவியலின் திமிரால் இந்த துணிவிற்கு ஆளானோம். ஆனால் இன்று வெட்கப்படுகிறோம்.
உண்மையிலேயே ஒரு பேய் குழந்தை இந்தியாவில் பிறந்து நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெற்ற வயிற்றுக்காரி பார்ப்பனிய இந்து மத சாதி வெறி. பெற்றவளின் கணவனோ பேரழிவு கரங்களுடைய கிழட்டு முதலாளியத்தின் இலாப வெறி. பிறந்த குழந்தையோ மோடீசம். சின்னம் மட்டும்தான் வித்தியாசம். தலை சுழியில் இருந்த சின்னம் 3 அல்ல, தாமரை.
          மோடீசம் இந்தியாவில் எப்படி பிறந்தது என்று ஆச்சரியமாகப் பார்க்கிறோம். சமூகவிஞ்ஞானிகள் எச்சரித்து பேசிய வார்த்தைகளை நினைத்துப் பார்க்கலாம். இத்தாலியில் பாசிசம் எப்படி பிறந்ததோ, ஜெர்மனியில் நாசிசம் எப்படி பிறந்ததோ அப்படித்தான் இந்தியாவில் மோடீசம் பிறக்கப்போகிறது. சமூகவிஞ்ஞானிகளின் வாய்  திசை நோக்கி மோடீசம்  வளரத் தொடங்கியிருக்கின்றது.
          வாக்கு எந்திரங்களும் வாக்கு ஆணையங்களும் கிழட்டு முதலாளியத்திற்கு சேவையாற்றியதால் மோடீசம் பிறந்தது என்று விளக்குவோர் பலர். வாக்கு ஆணையத்தில் பணியாற்றிய ஒரு பெண்மணி வாக்காளர்களின் முடிவுகளை  எந்திரங்கள் மாற்றிவிடும் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் வாக்காணையம் இது குறித்து வாய் திறக்காமலேயே மோடீசம் பிறப்பதற்கு சேவையாற்றியது. எனினும் சிலர் பதறிக்கொண்டு மறுக்கிறார்கள். மோடீசம் ஏமாற்று வித்தையால் பிறந்தது அல்ல. மாறாக, இந்திய மக்களின் பேரன்பால் பிறந்தது என்று சத்தியம் செய்கிறார்கள்.
பேரன்பிற்கும் மோடீசத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும். உலகை அழிக்க வந்த பேயிக்கும் கருணைக்கும் தொடர்பு இருக்க சாத்தியம் உண்டா. சாத்தியமெனில் பேரன்பிற்கு வழிவகுத்த மோடீசத்தின் கொள்கைகள்தான் என்ன? அதன் செயல்பாடுகள் எத்தகையவை?
சமூகத்தின் பண்பாடு, அரசியல், பொருளாதாரம் அனைத்திலும் சவக்குழி அமைத்து மக்களைத் தள்ளுவதே மோடீசக் கொள்கை எனில் பேரன்பு எப்படி சாத்தியப்படும்? இலாப வெறி பிடித்த கிழட்டு முதலாளியத்தின் தாகத்திற்கு, மக்களின் வாழ்வையே அருந்தக் கொடுத்தால் மோடீசப் பேரன்பு எப்படி மலர முடியும்?
ஒரு சதவிகித பெரும் பணக்காரர்களிடம் 70 சதவிகித மக்களுக்கு பிரித்து கொடுப்பதற்கான செல்வங்கள் குவிந்துள்ளன. வெறும் 30 சதவிகித செல்வங்களை 99 சதவிகித மக்கள் சமச்சீரற்ற நிலையில் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வை மோடீசம் போற்றிப் பாதுகாக்கின்றது.
மக்களின் வரிப்பணத்திலிருந்து பல்லாயிரம் கோடிகளை பெற்ற பெரு முதலாளிகளுக்கு கடன்களை முழுதாக தள்ளுபடி செய்கிறது. ஆனால், விவசாயத்திற்காகவும் கல்விக்காகவும் எளிய மக்கள் பெற்ற கடன்களை திருப்பிக் கட்ட இயலாததற்காக தற்கொலையில் மடியச் செய்கிறது மோடீசம்.
விவசாயிகளிடம் இருந்து நிலங்களை அபகரித்து, பழங்குடிகளிடமிருந்து காடுகளை அபகரித்து, இயற்கையிடமிருந்து தாதுமணல், ஆற்றுமணல், நன்னீர் போன்ற அனைத்து வளங்களையும் கொள்ளையடித்து இலாப வெறிபிடித்த முதலாளித்துவ நிறுவனங்களிடம் பணிவாக ஒப்படைக்கின்றது மோடீசம்.
விளை பொருளுக்கு விலை கேட்டால், நிலங்கள் மீது உரிமை கேட்டால், காடுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கப் போரிட்டால், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக விஷ ஆலைகளை மூடக் கோரினால், உயிர் வாழ்வதற்கும், உரிமைக்காக போராடுவதற்கும், வலிதாங்காமல் அழுவதற்கும் உரிமை கோரினால் குருவியைச் சுடுவதுபோல சுட்டுக் கொல்கிறது மோடீசம்.
இஸ்லாம் கிறித்துவம் போன்ற சிறுபான்மை மதங்களுக்கு எதிராக இந்துக்களை சண்டை மூட்டுவதும், இ்ந்துக்களுக்குள் சாதிச் சண்டைகள் நிலைப்பதற்கும், சூத்திரர் அல்லாத இந்துக்களைக்கொண்டு இந்து சூத்திரர்களை ஒடுக்குவதற்கும், இந்து சூத்திரர்களைக் கொண்டு இந்து தலித்துக்களை ஒடுக்குவதற்கும், ஒட்டுமொத்த சாதி ஆண்களும் பெண்களை ஒடுக்குவதற்கும் மோடீசம் சேவை செய்கிறது. மனுநீதியை உலக நீதியாக்க அரும்பாடுபடுகிறது மோடீசம்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மீது மோடீசம் வன்முறைகளையும் படுகொலைகளையும் நிகழ்த்துகிறது. பெண்களை பாலுறவு அடிமைகளாகவும், பொருளாதார அடிமைகளாகவும், பண்பாட்டு அடிமைகளாகவும், அரசியல் அடிமைகளாகவும் போற்றி பாதுகாக்கின்றது மோடீசம்.
மோடீசத்தின் வெற்றி மக்களுக்கு வாழ வழி செய்ததில் அல்ல. வாயிலேயே வடை சுடுவதிலும், சாப்பிட வந்தவர்களுக்குப் பாடை கட்டி வாய்க்கரிசி போடுவதிலுமே இருக்கின்றது.
மோடீசத்தின் நடைமுறைகள் அனைத்தும் அதன் கொள்கைகளை நமக்கு நன்கு உணர்த்துகின்றன. மக்களைச் சவக்குழியில் தள்ளுவதே அதன் கொள்கைகள். இத்தகையக் கொள்கைகளால் மக்கள் நெஞ்சுருகி மோடீசத்தின் மீது பேரன்பு கொள்வார்களா? பேரன்பு கொள்வர் என்பது  உண்மையெனில், நிச்சயம் அவர்கள் மக்கள் அல்ல. மக்குகள் அல்லது மனநோயாளிகள்.  
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு, சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிர்ப்பு, இந்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு, பசு பாதுகாவலர்களின் ரவுடித்தனங்களுக்கு எதிர்ப்பு, மாட்டிறைச்சியின் பேரில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு எதிர்ப்பு, கல்வியில் காவிமயக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு, சுற்றுச்சூழல் மீதான பேரழிவு திட்டங்களுக்கு எதிர்ப்பு, கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு, வளர்ச்சி திட்ட லேபில்களில் சவக்குழி வெட்டும் திட்டங்களுக்கு எதிர்ப்பு, அறிவியல் மாநாடுகளில் விளக்கப்பட்ட மோடீசத்தின் அறிவுகெட்டத்தனமான உரைகளின் மீதான நகைப்பும், கண்டிப்பும், எதிர்ப்பும் என நாடெங்கும் நிகழ்ந்த மோடீசத்தின் எதிர்ப்பலைகள் மக்களை மக்கள் என்றே நிரூபித்திருக்கின்றன. எனவே மோடீசம் பிறந்தது மக்களின் பேரன்பால் அல்ல. மோடீசத்தின் மோசடியால் மட்டுமே மோடீசம் பிறந்திருக்கின்றது என்பது உறுதி.
மோடீசத்தை வீழ்த்த மக்களின் எதிர்பலைகள் மட்டுமல்ல, பெரியாரின் கைத்தடியும், அம்பேத்கரின் எழுத்தடியும், காரல்மார்க்சின் சிங்கப் பிடரியும் ஒன்றிணைந்து வினையாற்றுகின்றன. மக்களின் அதிகாரத்தை வெளிச்சமிடும் கம்யூனிச அரசியல் முதிர்ச்சிகளே மோடீசத்திற்கு கல்லறை எழுப்பும். பொதுவுடைமை உலகமைக்க மோடீசத்தை வீழ்த்திய பாதையில் நின்று, இந்தியா அகில நாடுகளுக்கும் கலங்கரை விளக்காக ஒளியூட்டும்.
அடிமைத்தனமும் சமத்துவமின்மையும்
மோடீசத்தின் உருவமெனில்
கொளுத்திச் சாம்பலாக்குவதே மக்களிசம்!

துணை செய்தவை
1. கார்ப்பரேட் – காவி பாசிசம் , புதிய ஜனநாயக வெளியீடு
2. இருப்பதை பிரித்துக்கொடு என்பது இந்த நாட்டின் தேசிய கீதமாகவே மாற வேண்டும் – அருந்ததிராய் - புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2019
3. புதிய கலாச்சாரம் – மோடி அரசின் தாக்குதல்கள் – ஆக.2017
4. புதிய கலாச்சாரம் – மோடியின் டிஜிட்டல் பாசிசம் – ஜன.2017
5. புதிய கலாச்சாரம் – ஊழல் பரிவார் உத்தமர் மோடி! – நவ.2017
6. புதிய கலாச்சாரம் – மோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை – மே.2019
7. இந்தியாவில் சாதிகளின் சதி – புதியவன் – puthiyavansiva.blogspot.com
8. புராதனம் முதல் சோசலிசம் வரை – புதியவன் – puthiyavansiva.blogspot.com
9. சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள் - புதியவன் - puthiyavansiva.blogspot.com

No comments:

அதிகம் படித்தவை