சாதி - ' ஸ்வாக '
(சமூகவிஞ்ஞான
உணர்வில் சாதிய படிநிலையின் தோற்றம்)
புதியவன்
(ஸ்ரீரங்கநாத பெருமாள் கருவறைக்குள் மக்களை நுழையச் செய்தும்
சிதம்பர
நடராஜரின் சிற்றம்பல மேடையில் தமிழில் பாடும் உரிமையைப் பெற்றுத் தந்தும்
இந்து சாதி
பார்ப்பனியத்திற்கு எதிரான போரில் முத்திரை பதித்த
மக்கள் கலை
இலக்கியக் கழகத் தோழர்களுக்குச் சமர்ப்பணம்!)
என் மூச்சு அதிர அதிர
இழைத்தது. நான் சேர்க்கப் போகும் செய்தி அத்தனை முக்கியமானது. முக்கியமென்றால் மிகுந்த கனமான செய்தி. கனமென்றால் கனம் அல்ல. கரைந்து கொண்டிருக்கும் கனம்தான். மகிழ்ச்சியைப் பரப்பப் போகின்ற ஒரு நெகிழ்ச்சியான கனம். அதனால்தான் மூச்சிழைக்க நொந்தாலும் பரவசமாக ஓடிக்கொண்டு
வந்திருக்கிறேன். அவசரப்படாதீர்கள். நான் முழுசாகக் கதையைச் சொல்கிறேன்.
நான் அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தேன். உண்மையில்
ஆடிக்கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். உற்சாகம் என் உச்சந்தலையை
முட்டிக்கொண்டே இருந்தது. நான் என் கட்டுப்பாட்டில் இல்லை. அமர்ந்தால்
ஓடத்தோன்றுகிறது. ஓடினால் நிற்கத் தோன்றுகிறது. நின்றால் நடக்கத் தோன்றுகிறது.
மொத்தத்தில் அவர்களின் வருகைக்காகத் துள்ளிக்கொண்டிருந்தேன். அவர்களுக்கு நல்ல
விருந்து ஏற்பாடு. ஜெர்மன், பிரான்ஸ், லண்டன்
உணவுகளுக்குப் பழக்கப்பட்டவர் காரல்மார்க்ஸ். இவருக்கு நம் விருந்தில் விருப்பம்
இருக்குமா? எனவே அவருக்காகவே ப்ரெஞ்ச் கார்னர் பேக்கரியிலிருந்து
சுவை மிகுந்த கேக் சான்வெஜ் ஆகியவை தயாராக இருந்தன.
முதலில் பெரியார்தான் பெல் அடித்தார். கதவைத் திறந்ததும்
மகிழ்ச்சியில் உரைந்துவிட்டேன். கருப்புச் சட்டை அணிந்த வெண்மேகம்போல
நின்றிருந்தார். அவரது வாயை மறைத்துக்கொண்டிருந்தது தாடி. நெஞ்சுவரை
போர்த்தியிருக்கிறது. மூக்குக் கண்ணாடிக்கு பின்னிருந்து அவரது கண்கள் புன்னகை
செய்தன. ஒளிந்துகொண்டிருந்தது உதடு. கரகரப்பான குரலில் பேசினார்.
வணக்கம்ங்க புதியவன். என்ன. புதுசா பாக்குறதுபோல பாக்குறீங்களே. உள்ளே
போகலாம்தானே. வாங்க..
நான் பிரமித்துப்போய் நின்றிருந்ததை சொல்லவா வேண்டும்.
அவர்தான் என் கைகளைப் பற்றிக்கொண்டு உள்ளே இழுத்தார். பிறகு சொல்ல முடியாத
வேகத்தில் நிதானத்திற்கு வந்துவிட்டேன்.
நெகிழ்ச்சிமிக்க குரலில்
சிரித்த முகம் மாறாமல் வரவேற்றேன். மன்னிக்கனும் தோழர். உங்களை மீண்டும் சந்தித்த
மகிழ்ச்சியில் உள்ளம் அடைத்துக்கொண்டது. அடைப்பை நீக்கிட்டு ஆகுற வேலையைப்
பாக்கலாமே என்று சிரித்தார். தனிமையைக் கவனித்துவிட்டு இன்னும் அவர்கள்
வரவில்லையா? என்றார்.
இதோ சிறிது நேரத்தில்
வந்துவிடுவார்கள் என்றேன்.
ருக்மணி சௌந்தரி எல்லாம்
எங்கே போயிட்டாங்க?
என் தம்பிக்கு இன்று திருமணம்.
எல்லோரும் அங்கே போயிருக்காங்க தோழர்.
அருகிலிருந்த செம்பு நீரை எடுத்து வாய்வைத்து குடித்தார்.
எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நான் தயங்கியபடி சொன்னேன். என் திருமணத்திற்கு
உங்கள் வருகையை எதிர்பார்த்தேன் தோழர்.
பிறகு செம்பை அருகில் வைத்தபடி பேசினார். உங்க திருமணத்துக்கு வரலாம்னா எனக்கு
மைக்செட் தரமாட்டீங்க. இரண்டு வீட்டு பெரியவர்களையும் பேச வேண்டும். உங்களையும்
பேச வேண்டும். உங்களோட பார்ப்பன அடிமைத்தனத்தையும் பேச வேண்டும். மைக்செட்
இல்லாமல் எப்படி நாங்க திட்டிப் பேசுறது? திருமண வீட்டுக்கு வந்தா நாலு வார்த்தையாவது பேசணும். அதான் நான் வந்து
பிரயோசனப்படாதுன்னு வராமலே இருந்துட்டேன்.
நான் குறுக்கிட்டேன். இப்ப பரவாயில்லைங்க தோழர். சௌந்தரியும் நானும் சமூகவிஞ்ஞானப்
பண்பாட்டுக்கு வர முயல்வதாக உடன்படிக்கையை வெளியிட்டுள்ளோம்.
அப்ப இன்னும் முயற்சியில்தான் இருக்கீங்க. சுயமரியாதை இன்னும் வரவில்லை. அவர்
என்னை திணறும்படி பேசினார். நான் விளக்க முயன்றேன். எனக்கு வந்தாச்சுங்க தோழர்.
ஆனால் என் இணையருக்குத்தான் இன்னும் வந்து சேரலன்னு சொன்னேன்.
சௌந்தரி ரயில் வண்டில
மதுரைக்குப் போனாங்களே. அப்ப என்னிடம்தான் பேசிக்கொண்டே வந்தாங்க. நானும் எவ்வளவோ
பேசினேன். பெண்ணுரிமைன்னா என்ன? பெண்ணடிமைத்தனம்ன்னா
அது எப்படி? சுயமரியாதை நமக்கு ஏன் வேண்டும்? பகுத்தறிவு இல்லாமல் முன்னேற முடியுமா? இவைகளைப் பற்றியெல்லாம் நிறைய பேசினோம். அவங்களுக்கு மூளை
இருந்தா யோசிச்சு பார்ப்பாங்களே. நீங்களும் தொடர்ந்து பேசுங்க. சேர்ந்து
முடிவெடுங்க. தாலி கழட்டுறதுக்காக ஒரு சுயமரியாதை விழா நடத்துங்க. அதுக்கு
என்னையும் கூப்பிடுங்க. நான் தீர்மானமா வந்துருவேன். நாலு வார்த்தை நல்லவிதமா
பேசிட்டுப் போறேன். அவரது முதுமையடைந்த குரலில் ரசிக்கும்படியான ஒரு இராகம்
கலந்திருந்தது. அவரது இராகமான பேச்சு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
நான் அவருக்கு உணவு பரிமாற விரும்பினேன்.
தோழர் வாருங்கள் சாப்பிடலாம். உணவு தயாராக இருக்கிறது. அவர் மறுத்தார்.
உணவு கெடக்கட்டுமே. ஒன்னும் அவசரம் வேண்டாமே. தோழர்களும் வந்துருவாங்க. சேர்ந்து
சாப்பிடுவோம்.
சரிங்க
தோழர். உங்கள் பயணம் எப்படி இருந்தது?
ஒரே வெறுப்பா இருந்தது.
ஏன் இவ்வளவு வேகமா திரியுறாங்க. இந்தக் கம்பெனி முதலாளிகளும் பார்ப்பானுங்களும்
கூட்டு சேர்ந்துக்கிட்டு இலாப வெறிப்பிடிச்சு அலையுறானுங்களே. இது சரியா! இயற்கைய
முழுசா அழிச்சுட்டா நம்ம மக்கள் எங்கே போயி வாழ்றது. சுவாசிக்கவே முடியலயே. காத்து
கந்தகமா எரியுதே. மக்களும் வாழ முடியல. ஜீவராசிகளும் வாழ முடியல. நம்ம
மக்கள் அநியாயங்களை அனுமதிச்சுட்டே இருந்தா உலகம் என்ன ஆகுறது! இந்த மக்கள்
ஏன் இப்படி இருக்குறாங்க. இன்னும் சாதிய விட்டொழிக்க முடியலயே. நகரத்துக்கு உள்ளே
போனா அங்கேயும் சாதியாத்தானே இருக்கு. ஐயரு காலணி, செட்டியார் காலிணி, SC காலணின்னு வச்சுருக்கானுங்களே. நாம இவ்வளவு உழைச்சும் இந்த நிலைமை இன்னும்
மாறலயே. நம்ம மக்கள் சோறதான திங்கிறாங்க. மான ரோசம் இருக்குதா இல்லையா. ஒரே
வெறுப்பா இருக்குது. எனக்கு இங்க வரணுங்கிற எண்ணமே இல்ல. ஆனாலும் ஒரு நம்பிக்கை.
தோழர்கள் எல்லாரும் மார்க்ஸையும் அம்பேத்கரையும் பகத்சிங்கையும் என்னையும்
இணைச்சுக்கிட்டு செயல்படுறாங்க. தொடர்ந்து போராடிக்கிட்டுதானே இருக்காங்க.
மக்களுக்கு சரி எது? தப்பு எது?ன்னு
கற்றுக்கொடுக்கத்தானே செய்யுறாங்க. சமூகவிஞ்ஞான வாழ்க்கை மீது எனக்கு பெரிய
மரியாதையும் அன்பும் இருக்கு. நீங்களும் சாதிப் படிநிலைகள் உருவான
சரித்திரத்தைப்பற்றி ஆலோசிக்கலாம்னு கூப்டீங்க. அதான் உடனே கிளம்பி வந்தேன்.
பெரியார் பேசிக்கொண்டிருக்கும்போதே புன்னகையுடன் நுழைந்தார்
அம்பேத்கர். அவரது உருண்டை முகமும் விரிந்த பார்வையும் நட்பால் பிரகாசித்துக்
கொண்டிருந்தன. அவரது சாதி ஒழிப்பிற்கான ஆய்வுகளில் தோழனாக உழைத்திருந்த மூக்குக்
கண்ணாடியைக் கண்களுக்கு கவசமாக அணிந்திருந்தார். அந்தப் பார்வையில் கம்பீரம்
மின்னியது. ஒரு நெகிழ்ச்சியானப் புன்னகையுடன் வந்திருந்தார். நான் பூரித்துப் போயிருந்தேன்.
அம்பேத்கரைச் சந்திக்கின்ற தருணத்தில் உணர்ச்சிவசப்படுதலைத் தவிர்த்துக்கொள்ள
முயன்றேன். பெரியாரை சந்தித்த தருணமே உறுதிசெய்திருந்தேன். மார்க்ஸ், அம்பேத்கர் இருவரையும் சகஜமாக அணுக வேண்டும் என்பதே முடிவு.
நான் எனது முடிவை மதிக்கவில்லையோ என்று தயங்கினேன். எனவே என்னை நானே
கட்டுப்படுத்திக்கொண்டேன்.
பெரியாரும்
அம்பேத்கரும் தோள்களை அணைத்துக்கொண்டார்கள். நலம் விசாரித்துக்கொண்டு மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினார்கள்.. அவர் என்னைப் பார்த்ததும் என் உணர்வை வெளிப்படுத்தினேன்.
உங்கள் இருவரையும் அருகருகே பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது தோழர். அவர்
புன்னகை பொங்க என் கைகளைப் பற்றிக்கொண்டு பேசினார்.
மகிழ்ச்சி
புதியவன். தங்கள் அழைப்பால் நாங்கள் மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நான்
மார்க்ஸை சந்திக்க விரும்பியிருந்தேன். இன்று நம் இல்லத்திற்கு அவர் வருவது எனக்கு
ஆனந்தமாக இருக்கிறது. அவர் இன்னும் வரவில்லையா?
அவர் ஜெர்மனியிலிருந்து வந்துகொண்டிருப்பதால் தாமதம் ஆகிறது என்றேன். அவர்
தலையசைத்தபடி மேலும் பேசினார். அவரது புன்னகையின் இடைவெளியில் வார்த்தைகள்
உதிர்ந்துகொண்டு இருந்தன. அவர் சொன்னார். உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
நீங்கள் இருவரும் செய்துகொண்ட உடன்படிக்கையை முகநூலில் பார்த்து மகிழ்ந்தேன். நான்
சௌந்தரிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும். சௌந்தரி எங்கே? எனது பதிலைத் தொடர்ந்து அவர் பேசினார். நீங்கள் இருவரும்
காதலில் வெற்றிபெற வாழ்த்துகிறேன். எனது வாழ்த்துக்களைச் சௌந்தரிக்கு
தெரியப்படுத்துங்கள் தோழர்.
நிச்சயம்
தோழர் என்று மகிழ்ச்சி பொங்க சொன்னேன். அவர் கண்ணாடியைக் கழற்றி துடைத்தப்படி
சிரித்தார். பெரியார் தனது விரல்களால் அம்பேத்கரின் மடியைத் தொட்டார். பயணம்
எப்படி இருந்ததுங்க அம்பேத்கர்? நல்லா
சுகவாசியாதானே வந்திருக்கீங்க.
அம்பேத்கர்
முகத்தில் சோகம் வெளிப்படத் தொடங்கியது. நான் என்ன சொல்வது பெரியார் அவர்களே.
சுகம் என்று பொய் சொல்வதா? என்னால் முடியவில்லை. நம் மக்கள் சுகமாக வாழாதவரை நாம்
எப்படி சுகமாக முடியும்!
அரசு
பேருந்து நிறுவனத்தின் திடீர் கட்டண உயர்வால் மக்கள் போராடுகிறார்கள். இருநூறு
ரூபாய் கூலிக்கு உழைத்து பிழைப்பவரிடம் பேட்டி எடுத்தார்கள். அவருக்கு மூன்று
மகளாம். எழுபது ரூபாய் பேருந்துக்கே செலவானால் குடும்பம் எப்படி பிழைப்பது என்று
அழுகிறார். நாட்டில் எல்லா துறைகளையும் இலாப வெறிபிடித்த முதலாளிகளுக்கு
ஒப்படைப்பதற்காக ஏதேதோ அரசியல் செய்கிறார்கள். நாட்டின் அரசியல் கொள்கையே
இப்படித்தான் செயல்படுகின்றது. இந்த நாட்டின் சட்டங்களால் நம் மக்களுக்கு எந்த
பயனும் இல்லை. இன்றுவரை பெண்கள் மீதான பாலியல் படுகொலைகள் தொடர்ந்துகொண்டே
இருக்கின்றன. சாதி வெறியர்களால் ஆணவப் படுகொலைகள் நிகழ்கின்றன. சங்கரை இழந்த
கௌசல்யாவை நீங்கள் மகளாக அரவணைத்துக் கொண்டீர்கள். மகிழ்ச்சி! ஆனால் இன்னும்
எத்தனை சங்கர்களை இழப்பது. எனக்கு வேதனையாக இருக்கிறது.
கல்வியால்
நான் விரும்பிய சமூகமேன்மை மக்களுக்கு கிடைக்கவில்லை. இன்றைய நவீனக் கல்வி
கடைந்தெடுக்கப்பட்ட நல்ல அடிமைகளையே உருவாக்கி வருகின்றது. மக்கள் அதிகாரமும்
சமூகவிஞ்ஞானத் தோழர்களும் இந்த லாயக்கற்ற அரசை தூக்கியெறியும் நாளில்தான் நான்
சுகவாசியாக உணர்வேன் என்றார்.
அவரது
விரல்கள் மூக்குக் கண்ணாடிக்குள் புகுந்தன. கண்ணங்கள் நனையாதபடி கண்களைத்
துடைத்துக்கொண்டார். அம்பத்கரின் தோள்களைப் பெரியார் தட்டிக்கொடுத்தார். நான் அவரை
நிதானமாக்க முயன்றேன். கொடியிலிருந்து வேட்டியை எடுத்து நீட்டினேன். இந்த
வேட்டியைக் கட்டிக்கொண்டு சாப்பிட வாருங்கள் தோழர். அவர் சோக உணர்வை
மாற்றிக்கொண்டு புன்னகை செய்ய முயன்றார். முயற்சிக்கு சற்று உதவியாக இதழ்களை
விரித்தபடி பேசினார்.
இல்லீங்க
தோழர். நான் சாப்பிட்டு முடித்து சற்று நேரம்தான் ஆகிறது.
நான்
குறுக்கிட்டேன். அப்படியெல்லாம் விடமுடியாதுங்க தோழர். உங்களுக்காக விருந்து
ஏற்பாடு செய்துள்ளேன்.
அவர்
சொன்னார். உங்களை யார் விடச்சொன்னது. காரல்மார்க்ஸ் வந்ததும் நால்வரும் சேர்ந்தே
சாப்பிடலாம்.
சரிங்க
தோழர் நம்ம வீட்டுக்கு வரும்போது வெளியில் ஏன் சாப்பிட்டீங்க?
அவர்
விளக்கினார். எழுத்தாளர் வே.மதிமாறன் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார். அவரது
பேச்சைக் கேட்க சென்றிருந்தேன். புதிய கல்விக்கொள்கை பற்றி எதார்த்தமான நடையில்
பேசினார். அவர் தனது கருத்துக்களை மிக சிறப்பாக முன்வைத்தார். நம் மக்களை
அடிமைப்படுத்துவதற்காக பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் கைகோர்த்துக்கொண்டுள்ள
நிலையை விளக்கினர். பார்ப்பனியத்தை அழிப்பதற்கு என்னையும் பெரியாரையும் சிந்தனையில்
பற்றிக்கொள்ள வேண்டுமாம். ஏகாதிபத்தியத்தை அழிக்க மார்க்ஸின் சிந்தனைகளைப்
பற்றிக்கொள்ள வேண்டுமாம். இப்படி செயல்பட்டால் மட்டுமே மக்கள் வெற்றி காணமுடியும்
என்பதைத் துல்லியமாகப் பேசினார்.
எனக்கு
மகிழ்ச்சியாக இருந்தது. நான் அவரிடம் உரையாட விரும்பினேன். அவர் ஒரு உணவகத்திற்கு
அழைத்துச் சென்றார். நாங்கள் உரையாடியபடி சாப்பிட்டோம். அவர் நம் எல்லோரையும் நலம்
விசாரித்தார். எனக்கு பிரிய மனமில்லை. நமக்கு நேரமானதால் விடைபெற்றுக்கொண்டேன்.
அவர் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தார்.
பெரியார்
ஆர்வத்துடன் சொன்னார். வே. மதிமாறன் அவங்கள நேரடியாப் பாக்கலாம்ன்னு, ரெண்டு வார்த்தையாவது நல்லவிதமா பேசலாம்ன்னு விருப்பமாக
இருக்கின்றது. எனக்கு வாய்ப்பிருந்தா அவங்கள வீட்டிலேயே சென்று பார்த்து வருவது
என்று நினைக்கிறேன்.
அம்பேத்கர்
அவருக்கு நம்பிக்கையாகச் சொன்னார். உங்களை நான் அழைத்துச் செல்கிறேன். நாம்
சேர்ந்து செல்ல திட்டமிடலாம். அவரிடமே அவர் எழுதிய புத்தகங்களை கையெழுத்துடன்
வாங்கி வருவோம். அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். நானும் வரலாமா என்ற
குரலுடன் உள்ளே நுழைந்தார் காரல்மார்க்ஸ்.
அடேயப்பா!
கண்ணைக் கவரும்படி ஒரு கம்பீரமான உருவம். சிங்கத்தின் பிடரியிலிருந்து
மனிதகுலத்தின் ஆனந்த சிரிப்பு. அவர் பார்வை எல்லோரையும் அணைத்துக்கொண்டது. ஜெர்மன்
கோர்ட் அணிந்து வசீகரமாகக் காட்சி தந்தார். அவரது உருவத்துக்கு ஏற்ற குரலுடன்
வார்த்தைகள் வெளிப்பட்டன. தோழர்களே எல்லோரும் நலமாக உள்ளீர்களா? என்னை மன்னித்துவிடுங்கள். மிகுந்த தாமதமாக வந்துவிட்டேன்.
புதியவன் தோழர் நேரம் தவறுவதை விரும்ப மாட்டார். ஆனால் என் நிலைமை தவிர்க்க
முடியாத தாமதத்திற்கு ஆளாக்கிவிட்டது தோழர்களே.
மார்க்ஸ்
பேசிக்கொண்டிருந்தார். நான் எனது கட்டுப்பாட்டில் இல்லை. மகிழ்ச்சியின் பரவசத்தில்
உரைந்து போயிருந்தேன். சகஜமான மனநிலையில் அணுகுமாறு என்னை நானே கட்டளையிட்டுக்
கொண்டேன். பூரித்த புன்னகையுடன் வரவேற்கத் தொடங்கினேன். என் வரவேற்பிற்கு அவசியம்
இல்லாதபடி அவர்கள் நட்புறவில் கலந்துகொண்டு இருந்தார்கள். அம்பேத்கர் அவரை
கழுத்தோடு அணைத்துக்கொண்டார். மார்க்ஸும் அம்பேத்கரின் தோள்களைப் பற்றிக்கொண்டு
மகிழ்ச்சியைத் தெரிவித்தார். மார்க்சின் முகமெல்லாம் சிரிப்பு. பெரியாரின் முகமும்
அப்படித்தான் இருந்தது. மார்க்ஸ் பெரியாரின் கரங்களைப் பற்றிக்கொண்டார்.
பெரியார்
மார்க்ஸிடம் பேசினார். வணக்கம்! வணக்கம்! உங்களை சந்திப்பது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சியாக இருக்கிறது மார்க்ஸ். உங்கள் தாமதம் எங்களுக்கு குறையில்லை. நீங்கள்
ஜெர்மனியிலிருந்து வந்து இருக்கீங்க. நாங்கள் உங்கள் வருகையை விரும்பி
காத்துக்கொண்டு இருந்தோம். நீங்கள் வந்திருப்பது எங்களுக்கு பெரும் வாய்ப்பாக
இருக்கிறது. பெரியாரின் தாடி வைத்த முகம் ஆடிக்கொண்டே பேசியது. அந்த ஆடல் அழகாக
இருந்தது. தெளிர்ந்த நீருடன் சூரியக் கதிர்கள் பேசினால் ஓர் அழகு இருக்குமே.
அதுபோன்ற ஓர் அழகு.
நான்
மார்க்ஸிடம் சொன்னேன். தோழர் உங்கள் வருகை எங்களுக்கு பெருமை. உங்கள் மூவரையும்
ஒருசேர பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மார்க்ஸ் எனக்கு
பதிலளித்தார். நானும் மகிழ்கிறேன் புதியவன். நீங்கள் அழைத்ததால் நாங்கள் மூவரும்
நேரில் சந்திக்க வாய்ப்பு பெற்றோம். இதற்காக எனது நன்றிகள். அதோடு உங்கள்
திருமணத்திற்கு பின்னன்புடன் வாழ்த்துக்கள். இது எங்களது சிறிய அன்பளிப்பு
என்று நீட்டினார். அவர் கையில் அன்பளிப்பாக ஒரு புத்தகம் இருந்தது. நீங்கள்
இருவரும் சிறந்த கம்யூனிஸ்டாக வாழ வாழ்த்துக்கள் என்றார்.
நான்
மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டேன். ஜார்ஜ் தாம்சன் எழுதி எஸ்.வி.ஆர். தமிழில்
மொழிபெயர்த்த மார்க்ஸ் முதல் மாவோ வரை என்ற புத்தகமது. அந்தப் புத்தகத்தின்
உள்பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து எங்கெல்சும் ஜென்னியும் மார்க்ஸும்
கையெழுத்திட்டு இருக்கிறார்கள். எனக்கு மகிழ்ச்சியில் மனது சிலிர்த்துக்கொண்டு
இருந்தது. மார்க்ஸ் பேசினார். மார்க்ஸியம் குறித்த உங்களது கட்டுரைகளைப்
படித்தேன். வரவேற்கத்தக்க புதிய முயற்சி. நன்கு பயன்படும்படி எழுதிவருகிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் புதியவன். பாராட்டுக்கள் என்று ஊக்கம் அளித்தார். நான் புன்னகையுடன்
நன்றி தெரிவித்தேன்.
அவர்
அணிந்திருந்த கோர்ட்டை கழற்றிவிட்டு அமர்ந்தார். அம்பேத்கர் தனது பையிலிருந்து
ஒயின் பாட்டிலை எடுத்தார். இது லண்டனிலிருந்த எனது நண்பர் கொடுத்தார். நான்
குடிப்பதில்லை. உங்களுக்கு விருப்பம் இருக்கும் என்பதால் எடுத்து வந்தேன் என்று
மார்க்ஸிடம் கொடுத்தார். மார்க்ஸ் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு சொன்னார். நான்
இதை அருந்தப்போவது இல்லை. இதை அருந்துவதற்கு என் மனம் ஒப்பவில்லை என்று
சிரித்தார். நமது மக்கள் அதிகாரம் தோழர்கள் டாஸ்மாக் ஒழிப்பு போராட்டத்தில் வெற்றி
பெற்று வருகிறார்கள். இந்தத் தருணத்தில் நான் குடிப்பது அவர்களுக்கு மரியாதையாக
இருக்காது. அம்பேத்கர் தன் கட்டை விரலை உயர்த்தி சம்மதம் தெரிவித்தார்.
கள்ளுக்கடைக்கு எதிராக எனது தென்னந்தோப்புகளையே வெட்டி அழித்தது நினைவுக்கு
வருகிறது மார்க்ஸ் என்று பெரியார் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அம்பேத்கர்
காரல் மார்க்ஸிடம் கேட்டார். உங்கள் பயணம் எப்படி இருந்தது?
தனது
விரல்களால் மீசையிலிந்து தாடிவரை தடவிக்கொண்டே பேசினார். பயணம் நல்ல அனுபவமாக
இருந்தது. இந்தியாவிற்கு வந்ததும் பகத்சிங்தான் என்னை வரவேற்றார். அவருடன் பழகிய
அனுபவங்கள் சப்பாத்தி கிழங்கின் சுவைபோல நீங்காமல் இருக்கின்றது. நமது சந்திப்பை
பற்றி தெரியப்படுத்தினேன். அவர் மகிழ்ச்சி பொங்க உங்கள் எல்லோரையும் நலம்
விசாரித்தார். சாதியின் உருவாக்கம் பற்றி புரிந்துகொள்ள சில ஆலோசனைகளை வழங்கினார்.
இந்தியாவில் ஆரியர்கள் வருவதற்கு முன்பிருந்த காலத்திற்கு அழைத்துச்சென்று
காட்டும்படி வழிகாட்டியிருக்கிறார். இந்த பயணம் புதியவனுக்கு சரியான புரிதலைக்
கொடுக்கும். பகத்சி்ங்கின் சந்திப்பு பயனுடையதாக அமைந்தது. இறுதியாக இருவரும் ஒரு
செல்பி எடுத்துக்கொண்டோம். அவர் தொப்பியை நான் அணிந்துகொண்டு மெல்லிய மீசையுடன்
அவர் அருகில் நின்றார். அந்த புகைப்படத்தை முகநூலிலும் பதிவிட்டிருக்கிறார்.
ஏகப்பட்ட விருப்பங்கள் குவிந்திருக்கின்றன.
தமிழகம்
வந்தவுடன் மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு
கொண்டேன். அவர்தான் என்னை அழைத்துக்கொண்டு வந்தார். இந்திய நிலைமைகளைப் பற்றி
அவரிடம் அதிகம் கற்றுக்கொண்டேன். அறிவில் அவருக்குள்ள முதிர்ச்சியின் அழகு
பேச்சிலும் இருக்கிறது. அவருக்கு நல்ல குரல். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி
பற்றிய நிலைமைகளை விளக்கினார். 1925ல் இருந்து 1964வரை இந்திய கம்யூனிஸ்ட்
கட்சிக்கு எந்த கொள்கைத் திட்டமும் இல்லையாம். இந்திய சமூகம் பற்றிய எந்த
ஆய்வுகளையும் செய்யவில்லை என்பதாக குற்றம் சுமத்தினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட்
கட்சியின் நிலைமை இப்படியா இருந்தது என்று வருந்தி சிரித்துக்கொண்டிருந்தேன்.
சாதியின் உருவாக்கம் பற்றிய பகத்சிங்கின் ஆலோசனையைத் தெரியப்படுத்தினேன். அந்த
ஆலோசனையின் முக்கியத்துவம் பற்றி சிலாகித்துப் பேசினார். அவர்தான் என்னை காரில்
அழைத்துக்கொண்டு இங்கே வந்து சேர்த்தார். உங்கள் மூவரையும் அதிகம் விசாரித்தார்.
அரசு கட்டமைப்பின் தோல்வி பற்றிய ஒரு மாநாட்டு வேலையின் காரணமாக அவருக்கு நேரம்
இல்லை. நம் எல்லோரையும் சந்திக்க இயலாததற்கு வருந்தினார். பிறகு என்னிடம்
விடைபெற்று சென்றார். அவர் சந்திப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்
நம்பிக்கையையும் தந்திருக்கிறது.
எனக்கு
அவரது பயண அனுபவங்கள் உற்சாகத்தை தந்துகொண்டு இருந்தன. நேரம் கடந்துகொண்டிருப்பதை
உணர்ந்தேன். சந்திப்பின் முக்கியம் கருதி அவர்களை ஆயத்தப்படுத்தினேன். தோழர்களே
நாம் உணவை முடித்துவிட்டு சாதியின் உருவாக்கம் பற்றிய தேடலுக்குள் நுழையலாம்
என்றேன். மூவரும் ஒத்துழைக்கத் தொடங்கினார்கள்.
பெரியார்
தனது குறிப்பேட்டில் ஏதோ குறித்துக்கொண்டிருந்தார். அம்பேத்கர் விரைவாக வேட்டியைக்
கட்டிக்கொண்டார். மார்க்ஸ் அம்பேத்கரை கவனித்துக்கொண்டு இருந்தார். நான்
விருந்துண்ணும் மேசையில் உணவுப் பாத்திரங்களை எடுத்துவைக்க தொடங்கினேன்.
வேட்டியும் பனியனுமாக நின்றுகொண்டிருந்த அம்பேத்கரிடம் மார்க்ஸ் சொன்னார். நானும்
உங்களைப்போல உடுத்திக்கொள்ள விரும்புகிறேன். அடடடே! நாங்களும் வேட்டி கட்டிய
மார்க்ஸை பார்க்க ஆசைப்படுகிறோம் என்றார். நான் ஆர்வத்துடன் ஒரு வேட்டியை எடுத்து
நீட்டினேன். மார்க்ஸ் சிரமப்பட்டு கட்டிக்கொண்டு இருந்தார். பிறகு அம்பேத்கரைப்
பார்த்துக்கொண்டே கேட்டார். எப்படி கட்டிக்கொண்டீர்கள். எனக்கு உதவி செய்யுங்கள்
என்று அழைத்தார். அம்பேத்கர் நேர்த்தியாக கட்டிவிட்டார். பனியனும் வேட்டியுமாக
நடந்து நடந்து பழகினார். எல்லோரும் அவரை ரசித்தோம். அவருக்கு ஒரு நல்ல பண்பு
இருக்கிறது. ஒரு விசயத்தைக் கற்றுக்கொண்டால் அதனை தனக்கு இயல்பானதாக
மாற்றிக்கொள்வார். வேட்டியையும் அவர் தனது உடலுக்கு இயல்பானதாக ஆக்கிக்கொண்டார்.
வேட்டிக்கட்டிய அவரது நடையைப் பார்த்தால் எனக்கு பெரியப்பாவை பார்ப்பதுபோலவே
இருந்தது.
மூவரும்
சாப்பிடுவதற்காக அமர்ந்தார்கள். நான் பரிமாறத் தொடங்கினேன். அவர்கள் என்னையும்
அமரச்சொல்லி வற்புறுத்தினார்கள். அவரவர் எடுத்துப்போட்டு சாப்பிடப்போகிறோம்.
நீங்கள் பரிமாறுவதற்கு அவசியமே இல்லை. வாருங்கள். அமருங்கள். நால்வரும் சேர்ந்து
சாப்பிடுவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அவர்களது அன்புக் கட்டளையை என்னால் மீற
முடியவில்லை.
மார்க்ஸ்
ஆர்வமாக சோற்றில் மீன்குழம்பு ஊற்றி உண்ணத் தொடங்கினார். இது ருக்கம்மா தயாரித்த
மீன் குழம்பு. மிகவும் ருசியாக செய்வார்கள் என்றேன். இவ்வளவு சுவையுடன் நான் மீன்
சாப்பிட்டது இல்லை. உங்கள் அம்மாவிடம் என் நன்றியைத் தெரியப்படுத்துங்கள் என்றார்.
அவருக்காக வாங்கி வைத்திருந்த பேக்கரி உணவுகளைப் பொருட்படுத்தவே இல்லை.
பெரியார்
மாட்டுக்கறி போண்டாவுடன் முட்டைக்கோசுவும் பீட்ரூட் சப்பாத்தியையும் விரும்பி
சுவைத்தார். சௌந்தரியின் பக்குவம் என்றேன். அவர் மகிழ்ச்சியுடன் சொன்னார்.
நீங்களும் அவங்களிடம் சமைக்க கற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
அம்பேத்கர்
ஆட்டுக்கறி பிரியாணியை தயிர் வெங்காயத்துடன் இரசித்து உண்டார். இது கலையம்மா செய்த
பிரியாணி. மிகுந்த சுவையுடன் சமைப்பார்கள். அவர் புன்னகையுடன் சுவைத்துக்கொண்டே
சொன்னார். எனது அடுத்த நூலை கலையம்மாவிற்கு சமர்பிக்கிறேன் என்று சொல்லுங்கள்
தோழர் என்றார்.
நடுவில்
இருந்த பாத்திரத்தில் காட்டுப்பன்றி இருந்தது. நான் அவர்களிடம் சொன்னேன். எனது
நண்பர் குமார் சமைத்துக் கொடுத்த உணவு. அவருக்கு காட்டுப்பன்றி மாமிசம்
கிடைத்ததாம். நமக்காக ஆர்வத்துடன் சமைத்துக் கொடுத்துள்ளார். அவர் நன்றாக
சமைப்பார். அவசியம் சாப்பிட்டுப் பாருங்கள் என்றபடி நான்அள்ளிப்போட்டுக்கொண்டு
சாப்பிட்டேன்.
கேசரி
கேக் வடிவத்தில் இருக்கிறதே என்றார் அம்பேத்கர். இது என் நண்பர் சேகர் செய்தது.
அவர் சுவையில் கேசரி செய்பவர்களை காண்பது அரிது என்றேன். மார்க்ஸும்
சுவைத்துவிட்டு பாராட்டினார். நாங்கள் நால்வரும் உணவைப் பரிமாறிக்கொண்டு ஆனந்தமாக
சாப்பிட்டு முடித்தோம்.
நாங்கள்
நால்வரும் தயாராகிவிட்டோம். இந்தியாவில் சாதிப் படிநிலைகள் உருவானது பற்றிய
ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். இந்தியாவில் சாதி பற்றிய தனது ஆய்வுகளை அம்பேத்கர்
விளக்கிப் பேசினார். பிற
மக்கள் பூர்வீக பிராமணர்களால் இழிவானவர்களாகக் கருதப்பட்டு அந்நியர்களாக
ஒதுக்கப்பட்டார்கள். அந்நியர்களுடன் திருமண உறவில் ஈடுபடாமல் தவிர்த்தார்கள். உயர்நிலை
பிராமணர்களின் திருமண உறவு அகமண முறையாக அமைந்தது. தங்கள் குலத்திற்குள்ளேயே திருமண
உறவில் ஈடுபட்டார்கள். பிராமணர்களின் அகமணமுறைப் பண்பாட்டிலிருந்தே சாதிப்படிநிலை உருவெடுத்துள்ளது.
பிற்காலத்தில் வர்ணாசிரம கோட்பாடாக நிறுவப்பட்டு மனு நீதி சட்டமாக நிலைபெற்றது. மனு
தர்மம் விளக்கும் நான்கு வர்ணங்களும் இந்திய சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட மாபெரும் அநீதி
என விவரித்து முடித்தார். பிறகு தந்தை பெரியார் பேசினார்.
சாதி என்பது நம் மக்களை அடிமைப்படுத்துவதற்காகவும்
பிராமணர்கள் உழைக்காமல் உடல் வளர்ப்பதற்காகவும் செய்யப்பட்ட சதி என்பதாக விளக்கினார்.
சாதியை ஒழிப்பதற்காக அவரும் அம்பேத்கரும் எப்படியெல்லாம் வியூகம் அமைத்து போராடினார்கள்
என்பதை சுவாரசியமாக விளக்கினார். பிறகு மார்க்ஸ் பேசினார்.
சாதி ஒழிப்பிற்கு உங்கள் இருவரது சிந்தனைகளையும்
ஆக்கப்பூர்வமான செயல்களையும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். உலக மக்கள் இதற்காக உங்களை
பெரிதும் போற்றுகிறார்கள். நான் இந்தியாவைப் பற்றி எழுதிய கட்டுரைகளில் இந்திய சமூக
உற்பத்தி சாதியினால் தேங்கிக்கிடப்பதையும் பிரிட்டிஷ் ஆதிக்கம் இந்த தேக்கத்தை உடைக்கத்
தொடங்கியது எவ்வாறு என்பதையும் விளக்கியிருந்தேன். ஆனால் சாதி எத்தகைய சமூகத் தேவையின்
அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றிய தெளிவு இல்லாதிருந்தேன். அம்பேத்கரின்
ஆய்வு நூல்களின் வழியாக ஒன்று புரிந்தது. மனுநீதி என்பது வேளாண் வணிக சமுக மரபில் வேத
ஆதிக்கத்திற்கு எதிராக சமண எழுச்சியின் வீரியத்தை அழித்து மறு உருவாக்கம் செய்யப்பட்ட
வேத சட்டங்களின் தொகுதியே என உறுதியாக உணர முடிகின்றது.
சமூகவிஞ்ஞான
விளக்கப்படி சமூகத்தில் எந்த ஒன்றைப் பற்றிய ஆய்விற்கும் உற்பத்திமுறை பற்றிய
ஆய்வு அடிப்படையாகும். சாதியப் பண்பாடு பற்றிய ஆய்விற்கும் இந்த வழிமுறை அவசியமாகின்றது.
மனிதகுல வரலாற்றில் சமூகப் பொருளுற்பத்தியின் வளர்ச்சி படிநிலைகளை நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
1.
காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.
வேட்டை நாகரிகம்
3.
கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.
விவசாய நாகரிகம்
5.
உற்பத்தி மீதான வணிக நாகரிகம்
6.
வணிகத்திற்காகவே உற்பத்தி செய்தல்
7.
நிதிமூலதனப்பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல்
8.
மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல்
இவற்றில்
சாதியப் பண்பாடு எத்தகைய சமூகப் பொருளுற்பத்தியின் தேவையிலிருந்து தொடங்கியது
என்பதை அறிய வேண்டும். எனது கணிப்புப்படி திராவிட நாகரிகத்தில் 4, 5 ஆகிய விவசாயம் மற்றும் வணிக உற்பத்தி நிலையின் இடைக்கட்டத்தில்
தொடங்கியிருக்க வேண்டும். இக்காலக் கட்டத்தில் ஆரிய நாகரிகம் மனிதகுல வரலாற்றின்
மூன்றாம் கட்டமாகிய கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகமாகவே இருக்கின்றது.
நான்
பகத்சிங் வழிகாட்டிய திசையில் ஆய்வு பயணத்தை செலுத்த முயல்கிறேன். ஆரியர்கள் வருகை
தந்தபோது இந்தியாவின் உற்பத்தி நிலைமை என்ன? ஆரியர்களின் சமூகத் தன்மை என்ன? இவைகளை அறிந்தால் உண்மை வெளிப்பட்டுவிடும். மார்க்ஸின் உரையாடலால் நாங்கள்
மிகுந்த ஆர்வத்திற்கு ஆளாக்கப்பட்டோம். மார்க்ஸ் எங்களை வழிநடத்தத் தொடங்கினார்.
நாங்கள் அவரை பின்தொடரத் தொடங்கினோம்.
அவர்
எங்களை ஆரியர்களுக்கு முந்தைய இந்தியாவின் காலத்திற்கு அழைத்துச் சென்றார். நவீன தொழிற்கூடங்கள்
நிறைந்த இந்தியாவைக் கடந்து சென்றோம். பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தின் வழியாக
வேகமாகக் கடந்துகொண்டிருந்தோம். அடிமை இந்தியாவின் அகோரமானக் காட்சிகள்
பலவற்றையும் கடந்து கொண்டிருந்தோம்.
பெண்கள்
மீதான வன்முறைகள், சாதி சமயக் கலவரங்கள், அடிமைகளின் சித்திரவதைகள், அதிகாரத்திற்கான
வன்முறைகள், அரசர்களின் சண்டைகள், மக்களின் அறியாமைகள், பஞ்சம் பட்டினி போர்கள் என காட்சிகள் கடந்துகொண்டே இருந்தன.
நாங்கள்
காலம் கடந்த வேகத்தில் பயணித்துக்கொண்டு இருந்தோம். ஒரு வழியாக நாங்கள்
ஆரியர்களுக்கு முந்தைய இந்திய காலத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்தக் கால
இந்தியாவின் மக்களை கவனிக்குமாறு மார்க்ஸ் வழியுறுத்தினார். எங்களால் பல்வேறு
மக்கள் குழுக்களை கவனிக்க முடிந்தது. பெரியார் என்னிடம் சொன்னார். எனக்க
முதுமையானதால் சற்று கண்கள் மந்தமாகிவிட்டன. இந்தப் பார்ப்பனக் குடும்பிகள்
அகப்படுவதாகத் தெரியவில்லை. உங்கள் கண்களுக்கு பிடிபடுகிறார்களா புதியவன்? நான் ஆர்வத்துடன் பிராமணர்களைத் தேடத் தொடங்கினேன். அம்பேத்கரும்
பூர்வீக பிராமணர்களை ஆவலுடன் தேடிக்கொண்டிருந்தார். மார்க்ஸ் எங்கள் மூவருக்கும்
சொன்னார். ஆரியர்களைக் காண இன்னும் சிறிது தூரம் காத்திருக்க வேண்டும் தோழர்களே. பெரியார்
புரிந்துகொண்டதைப்போல தலையசைத்தார். நான் புரியாமல் விழித்தேன். பூர்வீக பிராமணர்களைத்
தேடித்தேடி ஓய்ந்துபோன அம்பேத்கர்தான் நினைவுபடுத்தினார். மார்க்ஸ் அழைத்துவந்திருப்பது
ஆரியர் வருகைக்கு முந்தைய காலமல்லவா என்று சிரித்தார்.
நாங்கள்
கவனித்தவரை கால்நடை மேய்த்து வாழ்கின்ற மக்கள் இருந்தார்கள். விவசாயம் செய்து
விளைவித்து வாழ்கின்ற மக்கள் இருந்தார்கள். காடு சார்ந்த பொருள் சேகரிப்பிலும்
வேட்டைத் தொழிலிலும் ஈடுபடும் மக்கள் இருந்தார்கள். உப்பு உற்பத்தியிலும்
மீன்பிடிப்பதிலிலும் ஈடுபடும் மக்கள் இருந்தார்கள். அதிகமான நில அடிமைகளைக்
கொண்டு நிலப்பிரபுக்களின் விவசாய உற்பத்தி நிகழ்ந்துகொண்டு இருந்தது.
நிலப்பிரபுக்களின் தலைமையில் அரசு இருந்தது. நிலங்களையும் நில அடிமைகளையும்
விரிவுபடுத்துவதற்கான அரசப் போர்கள் சிறிய அளவில் தொடங்கியிருந்தன. ஆளும் அரசனும்
அரச படைகளும் சட்டங்களும் நிலப்பிரபுக்களின் நன்மைகளுக்கேற்ப ஆட்சி செய்தன.
பொருள்களை சமூக அளவில் பரிமாறிக்கொள்ளும் சேவைத் தொழிலாக வணிகம் தோன்றி வளர்ந்தது.
விவசாயத்தை சார்ந்தும், அரசுப் படைகளின் தேவைகளைச் சார்ந்தும், வணிக வளர்ச்சியின் தேவைகளைச் சார்ந்தும் பலவிதமான மக்கள்
கைத்தொழில் கலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். பொருள்களின்
பரிமாற்றத்திற்காக வியாபாரிகளின் தலைமையில் சந்தைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
பொருள்கள் முதல் அடிமைகள்வரை அனைத்தும் சந்தையில் வியாபாரம் செய்யப்பட்டன.
வியாபாரத்தில்
ஈடுபட்ட வணிகப் பிரிவினர் எல்லை கடந்து வெவ்வேறு அரசுகளின் பகுதிகளுக்குச் சென்று
விற்றல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இதனால் நிலப்பிரபுக்களுக்கு நிகராக
வணிகர்கள் வளரத் தொடங்கினார்கள். சொத்துக்களும் வெளியுலகத் தொடர்புகளும் அரசுகளின்
செல்வாக்கும் வணிகர்களுக்கு பெருகிக்கொண்டு இருந்தன. தங்களுக்கு நிகராக வணிகர்கள்
வளர்வதை நிலப்பிரபுக்கள் எதிர்த்தார்கள். தங்கள் அரசின் மூலமாக அதிக வரி சுமத்தி
வணிகர்களை ஒடுக்க முயன்றார்கள். நிலப்பிரபுக்களுக்கு எதிராக அரசின் செல்வாக்கை
வளர்த்துக்கொள்ள வணிகர்கள் முயன்றுகொண்டே இருந்தார்கள். நிலப்பிரபுக்களுக்கும்
வணிகர்களுக்கும் இடையில் அரசன் திணறிக்கொண்டு இருந்தான்.
நிலைமையின்
வேகத்தைப் பார்த்தால் நிலப்பிரபுக்களின் ஆட்சி வீழ்ந்துவிடும் போலத் தோன்றுகிறதே.
பெரியாரின் குரலுக்கு அம்பேத்கர் ஒத்திசைந்தார். எனக்கும் அப்படித்தான்
தோன்றுகிறது. அவர்கள் கருத்து எனது எதிர்பார்ப்பையே பிரதிபலித்தது. ஆனால் எங்கள்
கருத்துக்கு முட்டுக்கட்டை போட்டார் மார்க்ஸ். அவர் சொன்னார். வணிகர்கள் அரச
அதிகாரத்திற்கு வருவதென்றால் ஆரியர்களின் நான்கு வர்ணக் கோட்பாடு நிலப்பிரபுத்துவ
அரசர்களை சார்ந்திருக்க முடியாதல்லவா? சத்திரியர்களின் இடத்தில் வைசியர்கள் அல்லவா இருந்திருப்பார்கள்? பிரிட்டிஷ் வணிக அரசு வருகின்றவரை நிலப்பிரபுக்களின்
அதிகாரம் தேங்கிக் கிடந்தது எப்படி? மார்க்சின் கேள்விகள் எங்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்கின. அம்பேத்கரும்
பெரியாரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள். மார்க்ஸ் மிக கவனமாக சொன்னார். இந்த
இடைவெளியில் ஏதோ நிகழ்ந்திருக்கிறது. அநேகமாக ஆரியர்களின் சதி இங்குதான்
அரங்கேறியிருக்க வேண்டும்.
திணறிக்கொண்டிருக்கும்
அரசை கவனியுங்கள் அரசனின் திணறலுக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று
வளர்ந்து வருகின்ற வணிகர்களின் செல்வாக்கை நிலப்பிரபுக்களின் சார்பாக எதிர்க்க
முடியவில்லை. அவர்கள் ஈட்டித்தருகின்ற பலவிதமான பொருட்களை அரசன் விரும்பி
வரவேற்கிறான். மேலும் வணிகர்களுக்கு எல்லை கடந்த அரச தொடர்புகள் இருப்பதால்
பகைப்பதும் நல்லதல்ல. எனவே நிலப்பிரபுக்களின் விருப்பத்திற்கு மாறாக வணிகர்களின்
வளர்ச்சியை ஆதரிக்க வேண்டிய நிலையிலுள்ளான். இரண்டு அரசனைப்
பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளவர்கள் நிலப்பிரபுக்கள். அரசன் என்பவன்
நிலப்பிரபுக்களில் ஒருவன். வணிகர்கள் தங்களுக்கு நிகராக செல்வாக்கு அடைவதை
நிலப்பிரபுக்கள் எதிர்க்கிறார்கள். எனவே அதீதமான வரிகளைச்
சுமத்தி வணிகர்களின் வளர்ச்சியை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திலுள்ளான். எனவே
இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையில் போட்டி வளர்கிறது. அரசன் யாரை ஆதரித்தாலும்
எதிர்ப்பு நிச்சயம். நிலப்பிரபுக்களுக்கும் வணிகர்களுக்கும் இடையிலான இத்தகைய இழுபறியில்தான்
அரசு திணறிக்கொண்டு இருந்தது.
உன்னிப்பாக
கவனித்துக்கொண்டிருந்த அம்பேத்கர் மார்க்ஸை கவனப்படுத்தினார். நீங்கள்
கணித்திருப்பது சரியாகவே உள்ளது மார்க்ஸ். அரசனை கவனித்துக்கொண்டிருந்த
தருணங்களில் ஆரியர்களின் வருகையையும் கவனித்துவிட்டேன். அவர்களின் சமஸ்கிருத மொழி
என் காதுகளுக்கு அகப்பட்டுவிட்டன. அம்பேத்கர் சுட்டிக்காட்டிய திசையில் மார்க்ஸ்
கவனித்தார். நாங்கள் ஆரியர்களை ஆர்வத்துடன் நெருங்கினோம்.
சமஸ்கிருத
மொழியை உச்சரிப்பவர்கள் சற்று தூரத்தில் வந்துகொண்டிருந்தார்கள். இத்தகைய
சூழல்களுக்கு இடையில் ஆரியர்களின் தலை தென்படத்தொடங்கின. கைபர் போலன் கணவாய்
வழியாக ஆரியர்கள் வந்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் கால்நடை மேய்ச்சல்
நாகரிகத்தைத்தான் அடைந்திருந்தார்கள். தாய்தலைமை சமூகத்திலிருந்து மாறி
சொத்தாதிக்க தந்தை அதிகார சமூகமாகப் பண்பட்டிருந்தார்கள். நெருப்பை புனிதமாக
வழிபடுவதும், இறைச்சிகளை நெருப்பில் இட்டு உண்பதும் தலைசிறந்த வழக்கமாக
கொண்டிருந்தார்கள். தந்தை அதிகார சமூகத்தின் அடையாளங்களாக ஆண் கடவுளர்களை
உருவாக்கிக்கொண்டு வழிபட்டு வந்தார்கள். ஸ்ரீ என்ற ஒரேயொரு பெண் தெய்வத்தைத்
தவிற அனைத்தும் ஆண் தெய்வங்களே. தங்கம், இரும்பு போன்ற உலோகத்தினாலான பொருட்களைப்
பெற்றிருந்தார்கள்.
ஆயுதங்களையும்
கருவிகளையும் உடலோடு பிணைத்துக்கொள்வதற்காக கட்டுக் கருவிகளை பயன்படுத்தினார்கள்.
இக்கருவி தோல்களாலும், மரநார்களாலும் அமைந்திருந்தன. உணவு சேகரிப்பு கருவிகளையும், வேட்டைக் கருவிகளையும், மேய்ச்சல் கருவிகளையும் கால்நடைகள் மீது ஏற்றிக்கொண்டு வந்தார்கள். அவர்களது
கால்நடை மேய்ச்சல் நாகரிகத்திலிருந்து பொருள், உலகம், ஞானம் பற்றிய புதிய தேடல்களுடன் வந்தார்கள்.முன்னேறும்
பாதையெல்லாம் வழிகளாக்கிக்கொண்டு வந்தார்கள். ஆனால் பண்டைய இந்தியாவில் வழிகளை உருவாக்குவது
அவர்களுக்கு சவாலாக இருந்தது.
வழக்கமாக
அவர்கள் முன்னேறுகின்ற பாதைகளில் காடுகளை அழிப்பார்கள். அச்சமூட்டும் உயிரினங்களை
போராடி கொல்வார்கள். அவர்களது கடவுளின் பெயரைச் சொல்லி நெருப்பை வளர்ப்பார்கள்.
அழித்துப் பெற்றவைகளை நெருப்பில் இட்டு மந்திரம் சொல்வார்கள். மந்திரம் என்பது
நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற வாசகங்கள் ஆகும். தங்களது தேவைகளை நெருப்பின்
மூலமாக கடவுளரிடம் முறையிட்டார்கள். அதேபோல் கிடைப்பவைகளை நெருப்பில் இட்டு தங்கள்
கடவுளர்களுக்கு அர்ப்பனிக்கவும் செய்தார்கள்.
இன்று
கிடைப்பதுபோல் மாமிசங்களும் பழம் கொட்டை கிழங்குகளும் நிறைவாகக் கிடைக்க வேண்டும்
என்று மந்திரம் சொன்னார்கள். கால்நடைகள் மேய்வதாகவும் பெருகுவதாகவும் வேண்டும்
என்று மந்திரம் சொன்னார்கள். இயற்கை வளம் சிறக்க மழை வேண்டும் என்று மந்திரம்
சொன்னார்கள். எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்று மந்திரம் சொன்னார்கள்.
இத்தகைய தேவைகளின் அடிப்படையில் பல்வேறு வர்ணனைகளுடனும் கற்பனைகளுடனும்
மந்திரங்களைச் சொன்னார்கள்.
அவர்களால்
வீழ்த்தப்பட்ட எதிரிகள் என்பவை வேட்டை மிருகங்கள் மட்டுமல்ல. கால்நடை மேய்ச்சல்
நாகரிகத்தை எட்டாத மக்களும் அடங்கியிருந்தார்கள். அதாவது காடு சார்ந்த பொருள்
சேகரிப்பிலும் வேட்டையிலும் மட்டுமே ஈடுபட்டு வாழ்ந்த பழங்குடி மக்களும்
அடங்கியிருந்தார்கள். தாய் தலைமை சமூகத்திலேயே வாழ்ந்தவர்களும் தந்தை அதிகார
சமூகத்தின் ஆரம்பத்தை எட்டியிருந்தவர்களும் அடங்கியிருந்தார்கள். ஆரியர்களால் தங்கள்
காடுகளும் உயிரினங்களும் ஆக்கிரமித்து அழிக்கப்பட்டபோது எதிர்த்துப் போராடிய நம்
மூதாதையர்களும் அடங்கியிருந்தார்கள்.
ராட்சசர்கள்
அசுரர்கள் போன்ற பெயர்களில் இந்த முன்னோர்கள் ஆரியர்களால்
வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பண்டைய இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்த புதிய
அசுரர்களாகிய திராவிட முன்னோர்களை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. தங்களைவிட
மேம்பட்ட விவசாய வணிக நாகரிகத்தை அடைந்திருந்த திராவிடர்களை அவர்களால் வீழ்த்த
முடியவில்லை. நில அடிமைகளையும் அரசு படைகளையும் நேர்த்தியாக வைத்திருந்த
திராவிடர்களை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. திராவிடரை அறிந்துகொள்ளாமல் மோதிய
ஆரியர்கள் வீழ்த்தப்பட்டார்கள். தப்பியவர்கள் செல்வங்களை இழந்து ஓடினார்கள். இந்த
திராவிடர்களை அவர்களால் கடந்துபோகவும் முடியவில்லை, விட்டு ஓடவும் முடியவில்லை.
பெரியார்
ஆரியர்களைச் சுட்டிக்காட்டி பேசினார். அடக் குடும்பி பயலுங்களா. திராவிட
நாகரிகத்துக்கும் உங்களுக்கும் எத்தனை ஏணி போட்டாலும் எட்ட முடியுமா? நீ என்னடான்னா எங்க திராவிட மக்களை இழிவானவர்கள்
அப்படின்னு சொல்லுற! விவசாயமும் வணிகமும் செய்யுறான் எங்க திராவிடன். நீ மாடு
குதிரைய மேய்ச்சுட்டு திரியிற. உனக்கு விவசாயம் தெரியல. வணிகம் தெரியல. உன்
நாகரிகம் உயர்வானதா? திராவிட நாகரிகம் இழிவானதா! இனிமேலும் எங்க மக்கள
ஏமாத்திட்டு திரிந்தால், உழைத்து உண்ணாமல் உயிர் பிழைக்க நினைத்தால் உன்னைய
நெருப்பிலேயே போட்டுருவோம். பெரியார் உணர்ச்சி பொங்க வெடித்து பேசினார். மார்க்ஸ்
அவரை நிதானப்படுத்தினார். ஆரியர்கள் எப்படி சதிகாரர்களாக உருமாறினார்கள் என்பதை
நாம் அறிய வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் அவர்களை கவனிப்பது அவசியம் பெரியார்.
பெரியாரின் கரத்தை மார்க்ஸ் பற்றிக்கொண்டார். பெரியார் தடியை ஓரடி முன்னே வைத்து
நெருங்கிவந்து கவனித்தார். நாங்கள் ஆரியர்களை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினோம்.
புத்தியற்ற
ஆரியர்கள் புத்தியைத் தீட்டிக்கொள்ள கடமைப்பட்டார்கள். மோதல்களைத்
தவிர்த்துக்கொண்டு தனியாக ஒதுங்கி வாழ்ந்தார்கள். திராவிட சந்தைகளில் பழக்கம்
ஏற்படுத்திக்கொண்டு திராவிடப் பண்பாட்டைக் கற்றார்கள். ஆரியர்களின் பொருள், உலகம், ஞானம்
பற்றிய தேடல்களுக்கு சவாலாக இருந்த திராவிட சமூகத்தைக் கற்றார்கள். அவர்கள்
கற்றுணர்ந்தவரை நிலத்தை ஆள்பவனே அரசனாக இருந்தான். நிலப்பிரபுக்களது அதிகாரத்தில்
அரசு இருந்தது. அதிகாரத்தில் பங்கேற்க வணிகர்கள் முயற்சி செய்துகொண்டு
இருந்தார்கள். இருவருக்கும் இடையில் அரசு திணறிக்கொண்டு இருந்தது. இந்த அரச திணறல்
என்ற பிரச்சனைகளுக்கு இடையில்தான் இந்திய சமூக மக்களின் வாழ்க்கை மூழ்கிக்
கிடந்தது. இழுபறிக்கு இடையில் திணறிக்கொண்டிருக்கும் அரசர்களுக்கு ஆட்சியை எப்படி
நிலைபடுத்துவது என்பதே பிரச்சனையாக இருந்தது. இந்தப் பிரச்சனைகளின் வழியாக திராவிட
சமூகத்தில் நீந்துவதற்கு ஆரியர்கள் துணிந்துவிட்டார்கள். இழுபறியில் இருந்த அரச
அதிகாரத்தை தமக்கு பணியவைக்க ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
புரியாத
சமஸ்கிருத மந்திரங்களால் நெருப்பை வணங்கும் ஆரியர்களின் பண்பாட்டை திராவிடர்களும்
விநோதமாகவே கவனித்து வந்தார்கள். ஆரியர்களைப் பற்றிய மந்திரவாதிக் கதைகளை
நாளெல்லாம் பேசிக்கொண்டு வந்தார்கள். பல தலைமுறைகளாக திராவிட ஆரிய சமரசம்
நிகழ்ந்துகொண்டு இருந்தது. ஆரியர்களின் வெற்றிக்காலம் நெருங்கத் தொடங்கியது.
அவர்கள் திராவிட சமூகப் பாதையில் தங்களுக்கான வழியை ஏற்படுத்தும் வித்தையைக்
கண்டறிந்தார்கள். அதுதான் வர்ணாசிரமப் படிநிலை என்கின்ற நான்கு வர்ணக் கோட்பாடு.
அவர்கள்
கணக்குப்படி இந்திய மக்களை நான்காகப் பிரித்தார்கள். வேடிக்கை என்னவென்றால் அந்த
நான்கில் அவர்களும் இருக்கிறார்கள். பல தலைமுறைகளாக திராவிடப் பண்பாட்டைக் கற்ற
சிந்தனை உழைப்பினால் இந்த உரிமையை எடுத்துக்கொண்டார்கள். 1.அரசன், 2.வணிகன், 3.நிலஅடிமைகள்
உள்ளடங்கிய பிற மக்கள். இந்த மூன்று பிரிவிற்கும் தலைமையாக ஆரியர்கள் இருப்பதாகக்
கோட்பாட்டை உருவாக்கினார்கள். தலைமை என்றால் அரசனின் ஆட்சிக்கு தலைமை என்ற
பொருளில் உணர முடியாதவாறு விளக்கினார்கள். உழைக்காமல் செல்வங்களை அனுபவிக்க
வேண்டும் என்ற கொள்கையில் தெளிவாக இருந்தார்கள். ஏனெனில், அவர்கள் அடைய வேண்டிய பொருளாதார முன்னேற்றங்களை திராவிட
சமூகம் கண்டு கரை தேர்ந்திருக்கிறது. இவற்றை நோகாமல் அனுபவிப்பதற்கான முயற்சி
மட்டுமே அவர்களுக்கு சவாலாக இருந்தது. அவர்கள் பல்வேறு கூட்டு முயற்சியால் இந்தக் கோட்பாட்டை
மெருகேற்றினார்கள். அரசர்கள் ஏற்கும்படி இந்தக் கோட்பாட்டை உறுதிபடுத்தினார்கள்.
பெரியார்
உணர்வுகளில் மீண்டும் ஆவேசம் பொங்கின. அவர் தன்நிலை மறந்தார். ஆரியர்களின்
சதித்தனம் உருவாகிவிட்டது. இதை நாம் அனுமதிக்க கூடாது. சதிகார ஆரியர்களை
நெருப்பிலே தள்ளுங்கள். ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் ஆபத்து ஆபத்து என்று
ஆவேசமாக பாய்ந்தார். மார்க்ஸும் நானும் அவரை இழுத்துப் பிடித்துக் கொண்டோம். அவர்
மயங்கி விழுந்தார். அம்பேத்கர் வருத்தத்துடன் நெருங்கி வந்தார். நாங்கள் முகத்தில்
தண்ணீர் தெளித்து நிதானப்படுத்தினோம். மார்க்ஸ் அறிவுறுத்தினார்.
உணர்ச்சிவசப்படுவதற்கு அவசியம் இல்லை பெரியார். நாம் கடந்தகால வரலாற்றில் நடந்து
வருகிறோம். உண்மைகளை அறிய முடியுமே தவிர இறந்த காலத்தை மாற்ற முடியாது.
நிகழ்காலத்தில் இருந்து எதிர்கால மாற்றத்தை உருவாக்க கடந்தகாலம் நமக்கு
கருவியாக்கப்பட வேண்டும். மார்க்ஸின் வார்த்தைகள் அவரை நிதானமாக்கியது. நாங்கள்
மீண்டும் ஆரியர்களைப் பின்தொடர்ந்தோம். அம்பேத்கர் சொன்னார். வயது முதிர்ந்துபோன
மனுதர்மத்தின் குழந்தைப்பருவம் இங்குதான் தொடங்குகிறது மார்க்ஸ். அவரது
வார்த்தைகள் எங்கள் கவனத்தை மேலும் உந்தியது. நாங்கள் துல்லியமாக கவனிக்கத்
தொடங்கினோம்.
அவர்கள்
நான்கு வர்ணக் கோட்பாட்டை கடவுளின் பெயரால் விளக்கத் தொடங்கினார்கள். அவர்களின்
விளக்கப்படி ஆரியர்கள் தங்களை பிரம்மமாகிய கடவுளுக்கு உரியவர்கள் என்பதாக
விளக்குகிறார்கள். பிரம்மம் என்றால் கடவுள். கடவுள் உலகைப் படைத்துக்
காக்கின்றார். உலகப் பொருட்கள் அனைத்தும் கடவுள் தீர்மானித்தபடி இயங்குகின்றன.
உலகை இயக்குகின்ற கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்படுகிறார். மந்திரங்கள்
சமஸ்கிருத வேதங்களுக்கு கட்டுப்படுகின்றன. சமஸ்கிருத வேதங்கள் சமஸ்கிருத மொழி
பேசும் எங்களுக்குக் கட்டுப்படுபவை. எனவே நாங்கள் கடவுளின் மொழியால் கடவுளர்களுடன்
உறவு கொண்டிருப்பவர்கள். கடவுளர்களை பிரம்மம் என்பதால் பிரம்மத்திற்கு உரிய தங்களை
பிராமணர்கள் என்று விளக்குகிறார்கள். வேள்வி செய்வதும், குலச் சடங்குகள் செய்வதும், ஆகம விதிப்படி கோயில் அமைப்பதும், தவம் செய்வதும், தானம் பெறுவதும், தர்மங்களைக் கற்றுக்கொடுப்பதும் பிராமணர்களின் கடமைகளாக
கடவுளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று விளக்குகிறார்கள். பிராமணர்கள் தங்களது
நான்கு வர்ண படிநிலையில் உச்சத்திலுள்ள முதல் படியில் பாதுகாப்பாக
அமர்ந்துகொள்கிறார்கள்.
பிராமணர்களுக்கு
அடுத்த இரண்டாம் படியில் அரசர்களை அமர்த்துகிறார்கள். அதிகாரத்திற்கும்
பாதுகாப்பிற்கும் அரச படைகள் பிராமணர்களுக்கு தேவைப்படுகின்றன. அரசன் என்பவன்
நிலப்பிரபுக்களின் அதிகாரத்திற்கு உட்பட்டவன். எனவே பிராமணர்களுக்கு நில
வருவாய்கள் கைகூடும் நிலை இருக்கின்றன. பிரம்மத்தின் கட்டளைப்படி வர்ணாசிரமக்
கடமைகளை சமூகத்தில் பாதுகாப்பதும் நிலங்களை ஆள்வதுமே அரசரின் கடமைகள் என்று
விளக்குகிறார்கள். அரசர்களை சத்திரியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
அரசனுக்கு
அடுத்த மூன்றாம் கட்டததில் வணிகர்களை அமர்த்துகிறார்கள். பலவிதமான பொருள்களைப்
பெற்றுக்கொள்வதற்கு வணிகர்கள் பிராமணர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். அவர்கள்
எல்லைக் கடந்து பயணித்து பொருள்களைக் குவித்துக்கொண்டு வருபவர்களாக
இருக்கிறார்கள். எனினும் நிலப்பிரபுக்களின் அளவிற்கு அரச செல்வாக்கு எட்டாதவர்களாக
இருக்கிறார்கள். எனவே பிராமணர்கள் தம்மிலிருந்து மூன்றாம் படியில் வணிகர்களை
வசதியாக அமர்த்திக்கொள்கிறார்கள். நிலப்பிரபுத்துவ அரசுடன் முரண்பட்டு ஆட்சி
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான எண்ணங்கள் எழக்கூடாதவாறு பிரம்மத்தின் பெயரால்
கட்டளையிடுகிறார்கள். வணிகத்தில் ஈடுபடுதலே வணிகர்களின் கடமையாக இருக்கின்றது.
இவர்களை வைசியர்கள் என்பதாக குறிப்பிடுகிறார்கள்.
பிராமணர்கள்
தங்களது அதிகாரத்திற்கும் சொத்தாதிக்கத்திற்கும் தேவைப்படாத, முக்கியமில்லாத நில அடிமைகள் கைவினைஞர்கள் மற்றுமுள்ள
பெரும் திரளான மக்களை நான்காம் படியிலேயே நிறுத்திக்கொள்கிறார்கள். இவர்களை
சூத்திரர்கள் என்கிறார்கள். சூத்திரர்கள் எந்தப் பலன்களையும் எதிர்பார்க்காமல்
தங்களது குலத்தொழிலில் ஈடுபட வேண்டும். இதுவே பிரம்மத்தின் கட்டளை என்று
விளக்குகிறார்கள்.
எல்லா
வர்ணங்களிலும் ஆண்களுக்கு பெண்கள் அடிமைகளாக இருக்கக் கடமைப்பட்டவர்கள் என்று
பெண்களை இழிவான நிலையில் வைக்கிறார்கள். பெண்கள் உயர்வர்ண ஆண்களுக்கு
மனைவியாகவோ வைப்பாட்டியாகவே விலை மாதுவாகவோ வாழலாம். ஆனால் தன் வர்ணத்திலிருந்து
கீழுள்ள ஆண்களுடன் பாலுறவு உரிமையில் ஈடுபடுதல் கூடாது. ஏனெனில் பெண்கள் தங்களது
வர்ண ஆணுக்கும் மேல்வர்ண ஆணுக்கும் அடிமையாக வாழக் கடமைப்பட்டவர்கள். ஆணுக்கு
சொத்தாக மாறும் பெண்கள் அந்த ஆணிற்கு நேர்மையானவர்களாக வாழ்ந்தால் மட்டுமே
பிறக்கும் குழந்தைகளின் வர்ணம் காக்கப்படும். எனவே சொத்துரிமை நிலையிலும் பாலுரிமை
நிலையிலும் பெண்கள் அடிமைகளாக வாழக் கடமைப்பட்டவர்கள் என்பதாக உணர்த்தப்படுகிறார்கள்.
நான்கு வர்ணக் கோட்பாட்டு நிலையில் பெண்ணடிமைப் பண்பு இன்றியமையாததாகவே
விளக்கப்படுகின்றது. ஒவ்வொரு வர்ணத்தாரும் தனக்கு மேலுள்ள வர்ணத்தாரை
பணிபவர்களாகவும் கீழுள்ள வர்ணத்தாரை கட்டுப்படுத்துபவர்களாகவும் செயல்படுவது
கடமையாக இருக்கின்றது.
பிரம்மமாகிய
கடவுளால் உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்த நான்கு வர்ணப் படிநிலைகளும்
அவற்றின் கடமைகளும் படைக்கப்பட்டுவிட்டன என்பதாக விளக்குகிறார்கள். மனிதர்கள்
பிரம்மத்தின் கட்டளைப்படி பிறப்பால் தீர்மானிக்கப்பட்ட கட்டளைகளைச் செய்வதையே
தர்மமாகக் கருதி பிழைக்க வேண்டும். அத்தகைய பிழைப்பினால் மட்டுமே மரணமற்ற
பெருவாழ்வை அல்லது பிறவியற்ற பெருவாழ்வை அடைய முடியும் என்று விளக்குகிறார்கள்.
வர்ணக் கடமைகளைக் கடைபிடிக்கத் தவறினால் உலக வாழ்வில் துன்பங்களே நிலைக்கும்
என்பதை வழியுறுத்துகிறார்கள். இத்தகைய சாரங்களை உள்ளடக்கியதாக வர்ணாசிரமக்
கோட்பாடாகிய நான்கு வர்ணக் கோட்பாட்டை ஆரியர்கள் படைத்திருக்கிறார்கள். அம்பேத்கர்
குறுக்கிட்டுப் பேசினார். இந்த நான்கு வர்ணமே பின்னாளில் படிநிலையற்ற ஐந்நாம்
நிலையை உருவாக்குகின்றது. இந்த நிலையிலுள்ள மக்களைத்தான் பஞ்சமர்கள் என்று
அழைக்கிறார்கள். இவர்கள் நான்கு வர்ண மக்களால் ஒதுக்கப்பட்டு மிகவும் இழிவான
வாழ்வில் உழல்பவர்கள். குறிப்பாக வர்ணம் கடந்த பாலுறவின் விளைவாகப் பிறந்தவர்கள்
என்று விளக்கப்படுகிறார்கள். அறிந்துகொள்ளும் பாவனையுடன் பெரியார் தலையசைத்தார்.
நாங்கள் ஆரியர்கள் மீதான கவனத்தை தொடர்ந்தோம்.
இந்தக்
கோட்பாட்டை ஒவ்வொரு அரசனிடமும் சென்று கடவுளின் பெயரால் விளக்கினார்கள். அதாவது
பிரம்மமாகிய கடவுள் தனது உடலிலிருந்து மனிதர்களைப் பிறப்பித்ததாக ஒரு கதையைக்
கட்டினார்கள். பிரம்மத்தின் தலையில் பிறந்தவர்கள் பிராமனர்கள். தோள்களில்
பிறந்தவர்கள் அரசர்களாகிய சத்திரியர்கள். தொடைகளில் பிறந்தவர்கள் வணிகர்களாகிய
வைசியர்கள். கால்களில் பிறந்தவர்கள் உழைக்கும் மக்களாகிய சூத்திரர்கள்.
பிரம்மத்தின் வேசிகளுக்கு பிறந்தவர்கள் பஞ்சமர்கள். இந்தக் கதையைக் கேட்டு பல
அரசர்கள் தாங்காது சிரித்தார்கள். சில அரசர்கள் ஆரியர்களை விரட்டியடித்தார்கள்.
ஆனால் பெரும்பாலான அரசர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்கள். திணறிக்கொண்டிருந்த
அரசர்களுக்கு பிராமணர்கள் விளக்கிய பிரம்மத்தின் கட்டளைகள் மிக வசதியாக இருந்தன.
படிநிலைக் கோட்பாட்டின் அடிப்படையில் அரசர்கள் பிறப்பால் அரசாள்வதையே கடமையாகப்
பெற்றிருக்கிறார்கள். மக்கள் பிறப்பால் அடிமைகளாக வாழ்வதையே கடமையாகப்
பெற்றிருக்கிறார்கள். வணிகர்களுக்கு வணிகமே கடமை என்ற படிநிலைக் கோட்பாட்டின்
அதிகாரச் சூழ்ச்சிகளை உணர்ந்து அரசர்கள் செயல்படுத்தினார்கள்.
கடவுளின்
பெயரால் பிராமணர்களை அரசர்கள் பணிந்து ஏற்றுக்கொள்வதால் இரண்டுவிதமான நன்மைகள்
தென்பட்டன. ஒன்று, பிராமணர்களுக்கு அரசன் பணிவதைப்போல அரசனுக்கு மக்களும், மேல்வர்ணத்தாருக்கு கீழ்வர்ணத்தாரும் பணிவது
இயல்பாகிவிடுகின்றது. இரண்டு, நிலப்பிரபுக்களின் சத்திரிய வர்ணம் வணிகர்களை
அதிகாரத்திற்கு எழாதவாறு கட்டுப்படுத்துவதைப்போல கீழ்வர்ணத்தார் எழுச்சி பெறாதவாறு
மேல்வர்ணத்தார் கட்டுப்படுத்துவதும் இயல்பாகிவிடுகின்றது. இத்தகைய இயல்புகள்
அரசாட்சியை கொந்தளிப்பான சூழல்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கின்றன என்பதையும்
உணர்ந்தார்கள். திணறிக்கொண்டிருந்த அரசர்களுக்கு ஆரியர்களின் வர்ணாசிரமக் கோட்பாடு
என்பது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது.
அரசர்களின்
முதுகுக்குப் பின்னால் ஆரியர்களின் ராஜ்ஜியம் தொடங்கியது. சமஸ்கிருத மொழிக்குரிய
ஆரியர்களைத்தவிர வேறு யாரையும் வர்ணாசிரமக் கோட்பாட்டை நிறுவுவதற்கு அரசர்கள்
பயன்படுத்தவே முடியாது. இதற்காகத்தான் ஆரியர்கள் அன்றாட உரையாடல் மொழியிலிருந்து
சமஸ்கிருதத்தைத் தவிர்த்தார்கள். இந்தியா முழுமைக்கும் தொழில் இரகசிய ஒருமை மொழியாக
சமஸ்கிருதத்தைக் கட்டமைத்தார்கள். இதில் ஆரிய பிராமணர்களின் ஒற்றுமை என்றும் வியப்பிற்குரியதே.
ஆரியக் கோட்பாட்டை அரச மதமாக ஏற்றுக்கொண்ட அரசர்கள் பிராமணர்களுக்கு கோயில்களையும்
குடியிருப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தார்கள்.
அனைத்து
சலுகைகளையும் வழங்கினார்கள். பிரம்மதானம், தேவதானம், சதுர்வேதிமங்கலம் போன்ற முறையில் நிலங்களும் செல்வங்களும்
பிராமணர்களுக்கு சொத்துக்களாக பெருகின.
பிராமணர்கள்
எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் செல்வங்களை அனுபவிக்கக் கற்றுக்கொண்டார்கள். கடவுளின்
பெயரால் எண்ணற்ற யாகங்களை நடத்தினார்கள். வர்ணாசிரமக் கோட்பாட்டை நாடெங்கும்
பரப்பினார்கள். ஒவ்வொரு வர்ணத்திலும் உள்ள பல்வேறு மக்கள் பிரிவினரும் தொழில்
பிரிவினரும் பல்வேறு சாதிப் படிநிலைகளாக விரிவு பெற்றார்கள். நாடெங்கும் படிநிலை
சாதிகள் விரிவடைந்தன. எத்தனை விதமான சடங்குகளில் பிராமணர்கள்
பங்கேற்கிறார்கள் என்பதிலிருந்து பிராமணர் அல்லாதவர்களின் சமூக மரியாதை சாதிகளாகத்
தீர்மானிக்கப்பட்டன. பிராமணர்களின் பார்ப்பனியம் என்பது இரட்டை அரத்தங்களை
சாராம்சமாகக் கொண்டிருக்கிறது. ஒன்று ஒருவரை பிறப்பால் அதிகாரம் செய்யக்
கடமைப்பட்டவன் என்று ஒப்புக்கொள்ளச் செய்வது. மற்றொன்று பிறப்பால் தன்னை அடிமையாக
செயல்பட கடமைப்பட்டவன் என்று ஒப்புக்கொள்ளச் செய்வது. பிராமணர்களை அழைத்து வேள்வி
சடங்குகளை நிகழ்த்த தகுதியுள்ள சாதிகள் அக்கறையுடன் முயன்றார்கள்.
பிராமணப்
பண்பாடு படிப்படியாக நிலைபெற்றதை எங்களால் உணர முடிந்தது. திராவிட மண்ணில்
ஆரியர்கள் எத்தகைய சூழ்ச்சிகளுடன் நீடித்திருக்கிறார்கள் என்பதை நேரடியாகக்
கண்டுணர்ந்தோம். அவ்வப்போது தோழர்கள் விளக்கம் கொடுத்துக்கொண்டே வந்தார்கள்.
மார்க்ஸ் பூணூல் பற்றி கொடுத்த ஒரு விளக்கத்தை கவனித்தேன்.
உழைக்காமல்
செல்வங்களை அனுபவிப்பதில் வெற்றி பெற்ற பிராமணர்கள் உழைப்பில் ஈடுபட்ட
காலங்களில் பயன்படுத்திய பல்வேறு கருவிகளைத் துறந்துவிட்டார்கள். தோலாலும்
மரநார்களாலும் பயன்படுத்திய கட்டுக்கருவியை மட்டும் கைவிடத் துணியவில்லை.
புனிதநூல் என்று விளக்கிக்கொண்டும் தோள்களில் மாட்டிக்கொண்டும் சட்டை இல்லாமல்
திரிகிறார்கள். பிற சாதியினரும் இந்தக் கட்டுக் கருவியை புனிதநூல் என்று
நம்பிக்கொண்டு தாங்களும் கட்டிக்கொள்வதற்கு தொடர்ந்து முயல்கிறார்கள். ஆனால் அந்த
புனிதநூலின் சூட்சுமம் என்ன தெரியுமா? பிராமணர்களுக்கு ஆழ்மனதில் ஒரு அச்சம் இருக்கின்றது. மக்களுக்கு என்றாவது
அறிவு முதிர்ச்சி ஏற்பட்டு உண்மையைக் கண்டுகொண்டால் என்ன செய்வது? வாரிச் சுருட்டியவற்றை முடித்துப்போட்டுக்கொண்டு ஓடுவதற்கு
இந்த நூல் பயன்படுமல்லவா என்று சிரித்தார். மார்க்ஸின் விளக்கம் எங்களுக்கு
சிரிப்பை மூட்டியது. நாங்கள் சிலாகித்து சிரித்தோம்.
அம்பேத்கர்
சிரிப்பு மாறாமல் மார்க்ஸை அணைத்துக்கொண்டார். தங்களின் வழிகாட்டுதல் எனக்கு
பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்தியாவில் சாதி பற்றிய எனது
ஆய்வுகளில் விடுபட்ட பகுதிகளை என்னால் உணர முடிந்திருக்கிறது. சரியாகச்
சொல்வதென்றால் மனுதர்மத்தின் இறுக்கமடையாத குழந்தைப் பருவ சூழ்ச்சிகளைத்
துல்லியமாக அறிய முடிந்தது மார்க்ஸ்.
தந்தை
பெரியார் மார்க்ஸை நெருங்கி வந்தார். சிரித்துக்கொண்டே பேசினார். நாங்க எங்க
கருப்புக் கொடியில் உங்க சிவப்புச் சின்னத்தை இணைத்துக்கொண்டது எவ்வளவு
பொருத்தமானது என்பதையும் தகுதியானது என்பதையும் இந்த பயண அனுபவத்தில் மீண்டும்
புரிந்துகொண்டு இருக்கிறேன் மார்க்ஸ். நீங்க வாழ்க! வாழ்க! என்று மகிழ்ச்சியைத்
தெரிவித்துக்கொண்டார்.
மார்க்ஸ்
தன்னடக்கமாக பதிலுரைத்தார். நாம் தனித்தனியாகப் புகழ்ந்துகொள்ள அவசியம் இல்லை. என்
முயற்சி உங்கள் முயற்சியிலிருந்து பிரியாதவாறு அமைந்திருக்கிறது என்று
புன்னகைத்தார்.
நான்
அவர்களை ஒருசேர பார்த்து மீண்டும் மகிழ்ந்தேன். எனக்கு சாதியின் உருவாக்கம் பற்றிய
புரிதல் ஏற்பட்டுவிட்டதாக உணர்ந்தேன்.
எங்கள் ஆய்வின்படி சாதி என்பது
வணிக சமூக வளர்ச்சியைத்
தடுத்து
நிலப்பிரபுத்துவ சமூகம் நீடிப்பதற்காக
ஆரியர்கள் உருவாக்கிய
நான்கு வர்ணக் கொள்கைகளை
அரசர்கள் ஏற்று மக்களிடம்
சூழ்ச்சிகளால் நடைமுறைப்படுத்திய சதி.
இந்த முடிவில் எனக்கு தெளிவு ஏற்பட்டுவிட்டது. என்னால் நின்று தாமதப்படுத்த முடியவில்லை. இந்த உண்மையை எமது தோழர்களிடமும் மக்களிடமும் விரைந்து சொல்லிட துடித்தேன். பார்ப்பனிய அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்பது எளிதாகிவிட்டதாக எனக்கு தோன்றியது. நான் ஆர்வத்தில் குதித்துக்கொண்டிருந்தேன்.
தோழர்களே
நான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன். நீங்கள் மூவரும் என்னை சரியாக
வழிநடத்தியிருப்பதாக உணர்கிறேன். மார்க்ஸ் அவரது சமூகவிஞ்ஞான ஆய்வின் அடிப்படையில்
சாதியின் தோற்றத்தை எனக்கு உணர்த்தியிருக்கிறார். நான் நமது பயண அனுபவங்களை
உடனடியாகச் சென்று தோழர்களிடம் சொல்ல விரும்புகிறேன். மக்களை விரைவில் மீட்க
வேண்டும். பார்ப்பனியத்தையும் ஒரு கை பார்க்க வேண்டும். சென்று வருகிறேன். நான்
சொன்ன வேகத்தில் ஓடத் தொடங்கினேன்.
மார்க்ஸ்
என்னை தடுத்தார். தோழர் கொஞ்சம் நில்லுங்கள். நாங்கள் சொல்வதைப் பொறுமையாகக்
கேளுங்கள். நீங்கள் எல்லோரும் எங்களை முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டு
செயல்படுகிறீர்கள். அதனால் நாங்கள் உரிமையுடன் வழியுறுத்துகிறோம். சமூகமேன்மையின்
இலக்கற்ற பலிவாங்குதல்களையும் வன்முறைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். பிராமணர்களை
சமூகப் பொருளுற்பத்தியில் ஈடுபடுகின்ற உழைப்பாளர்களாக மாற அறிவுறுத்துங்கள். நாம்
எல்லோரும் பொதுவுடைமை சமூகத்தை நோக்கி முன்னேறுவதற்கான அவசியத்தை உணர்ந்தாக வேண்டும்.
நமது தோழர் ராகுல்ஜீ அவர்களது பொதுவுடைமைதான் என்ன என்ற நூலைப் படித்து அவசியம்
உரையாடச் செய்யுங்கள். மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற சமூகவிஞ்ஞானிகளின்
முயற்சிகளுக்கும் உழைக்கும் மக்களின் முன்னேற்றங்களுக்கும் நாங்கள் என்றும்
உறுதுணையாக இருப்போம். உற்சாகமாகப் போராட சொல்லுங்கள் என்று செவ்வணக்கம்
செலுத்தினார். மார்க்ஸைப் போலவே அம்பேத்கரும் பெரியாரும் கையை உயர்த்தினார்கள்.
நானும் செவ்வணக்கம் செலுத்தினேன். அம்பேத்கர் என் அருகில் வந்தார். மார்க்ஸ்
சரியாக எடுத்துரைக்கிறார். நீங்கள் எல்லோரும் கவனமாக செயல்படுங்கள் என்று
கைகொடுத்தார். நான் பெரியாரின் கண்களைப் பார்த்தேன். அவர் கண் சிமி்ட்டும்
புன்னகையுடன் அம்பேத்கரின் வார்த்தைகளை வழியுறுத்தினார்.
நான்
விடைபெறுவதற்கு ஆயத்தமானேன். பகத்சிங் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு கவிதையை
மார்க்ஸ் நினைவுபடுத்தி சொன்னார். மூன்று வரியில் அமைந்த சிறிய கவிதை.
இந்திய மக்களின் விடுதலைப் பாதை எவ்வழி?
அதோ தெரிகிறது பார் கலங்கரை பேரொளி...
அதுதான் நக்சல்பரி!
இந்தக்
கவிதை என் அறிவிலிருந்து ஆழ்மனதுவரை செறுகியது. பகத்சிங் நம் அருகில் அமர்ந்து
சொன்னதுபோன்ற ஒரு தாக்கம். நான் புன்னகையை உதிர்த்துக்கொண்டே ஓடத் தொடங்கினேன்.
மூவரும் கையசைத்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பினார்கள். அவர்களால் கிடைக்கப் பெற்ற
உண்மையை விளக்கத்தான் ஓடோடி வந்திருக்கிறேன். பின்னங்கால் பிடறியில் அடித்த
அனுபவம் எனக்கு. அத்தனை வேகத்துடன் வந்திருக்கிறேன். மூச்சிழைக்கிறது எனக்கு.
சரி, இனி நாம்தான் முடிவெடுக்க வேண்டும். இனியாவது நமது
அடிமைத்தனமும் ஆதிக்கப் பண்பும் விட்டொழிய வேண்டும். பார்ப்பனியத் திமிரும்
ஏகாதிபத்திய ஆதிக்கமும் கொன்றொழிக்கப்பட வேண்டும். சமூகவிஞ்ஞானிகளின் பொன்னுலகை
சென்றடைய வேண்டும். நாம் புதிய சமூகம் படைக்க வேண்டிய தருணம் இது. நாமும் நம்
தலைமுறைகளும் மேன்மையான வாழ்வைப் பெறுவதற்கு முதலில் செய்ய வேண்டிய காரியங்கள்
இவைதான். எல்லோரும் தயாராகுங்கள். நெருப்பை வைத்துவிட்டேன். மையமாக நன்கு
எரிந்துகொண்டு இருக்கின்றது. சுற்றி அமருங்கள். சொல்லச் சொல்ல ஒவ்வொன்றாகத் தீயில்
போடுங்கள். அனைத்தும் சாகட்டும்...
சமத்துவமின்மை
- ' சாக '
பொருளாதார
ஏற்றத் தாழ்வுகள் - ' சாக '
ஆணாதிக்கம்
பெண்ணடிமைத்தனம் - ' சாக '
சாதிவெறி
மதவெறி இனவெறி - ' சாக '
சுயநல
வெறிபிடித்த வாழ்க்கை - ' சாக '
சமூகமேன்மைக்கு
எதிரானவர்கள் - ' சாக '
சுரண்டிப்
பிழைக்க நினைப்பவர்கள் - ' சாக '
உழைக்காமல்
உண்ண நினைப்பவர்கள் - ' சாக '
சமூக
அக்கறையின்மை - ' சாக '
சமூக
அறிவின்மை - ' சாக '
சமூக
பாதுகாப்பின்மை - ' சாக '
அறிவெதிர்
தத்துவப் புனிதங்கள் - ' சாக '
வேத
சாஸ்திரங்கள் - ' சாக '
மனு
தர்மம் - ' சாக '
இந்து
புராண இதிகாசங்கள் - ' சாக '
சாதி
- '
ஸ்வாக '
இனியும்
நாம் பிராமணர்களை மேலானவர்களாக கருதுவது இழிவு. பிராமண மேன்மை என்று கருதிக்கொண்டு
நம்மை பூணூல் அணிபவர்களாக மாற்றிக்கொள்வது மகா கேவலம். இது சமூகமேன்மையை தலைகீழ்
ஆக்குவது. பிராமண மேன்மை என்பது உழைக்காமல் உடல் வளர்க்க நினைப்பதுபோல மிகவும்
அருவெறுக்கத்தக்க வாழ்க்கை. நாம் செய்ய வேண்டியது மேல் வர்ணம் நோக்கி எழுவது அல்ல.
மேல் வர்ணங்களை கீழே சரிப்பது. உச்சிக் குடும்பிகள் முதல் வெட்டி ஆண்டைகள்வரை.
வால்மார்ட் முதல் அம்பாணிகள்வரை. அனைவரும் சரிந்து சூத்திரர்களோடு கலப்பது.
தீண்டாமையைக் கடைபிடிப்பவர்களும் உழைக்க கூசுபவர்களும் செத்துத் தொலைப்பது.
அஸ்திவாரங்கள் நாம்தானே. அவர்கள் இதுவரை காணாத ஆட்டத்தை காட்டுவோம். வாழும்
அருகதையற்றவர்களை ஏறி மிதித்து நல்லுலகம் நோக்கி முன்னேறுவோம். நாம் அடைவதற்காக
காத்திருக்கிறது சமூகவிஞ்ஞானிகளின் பொன்னுலகம்.
துணை செய்தவை
1. இந்தியாவில் சாதிகள் - டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்
2. சாதியம் - கோ.கேசவன்
3. மானிடவியல் கோட்பாடுகள் - பக்தவத்சலபாரதி
4. சாதி - தமிழ் விக்கிபீடியா
5. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தேறிகளே - செ.கார்கி,
www.keetru.com
6. ஆரிய வருகை...அறிவியல் சொல்லும் உண்மை - டாக்டர். எழிலன்
நாகநாதன் (www.youtube.com)
7. காதல் வரலாறு - புதியவன் (puthiyavansiva.blogspot.in)
8. காதலிலிருந்து கடவுள்வரை - புதியவன் (puthiyavansiva.blogspot.in)
9. அறிவெனும் பெரும் பசி - புதியவன் (puthiyavansiva.blogspot.in)
10. அம்பேத்கர் பார்வையில் இந்து ராஷ்டிரம் ஒழிப்பு 1,2
- எழுத்தாளர் வே.மதிமாறன் (www.youtube.com)
11. சாதியம் புகுந்ததும் பெயர்ந்ததும் ஏன்? – எழுத்தாளர் வே.மதிமாறன் (www.youtube.com)
12. பார்ப்பனர் பண்பாட்டு படையெடுப்பு - எழுத்தாளர்
வே.மதிமாறன் (www.youtube.com)
14. தந்தை பெரியாரின் வானொலி பேச்சு - (www.youtube.com)
15.
BJP மத அரசியலின் உச்சம் - தோழர் மருதையன் (www.youtube.com)
16. மனுதர்மத்தின் கொடூர வரலாறு - விடுதலை இராசேந்திரன் - (www.youtube.com)
17. இந்துமத எதிர்ப்பு ஏன்? - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (www.youtube.com)
19. காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - எஸ்.ராமகிருஷ்ணன் (www.youtube.com)
21. பெரியாரியல் சுருக்கமான அறிமுகம் - விடுதலை ராசேந்திரன்
(www.youtube.com)
22. பெரியார் மீதான விமர்சனங்கள் - விடுதலை
ராசேந்திரன் (www.youtube.com)
24. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின்
தோற்றம் - பிரெடெரிக் எங்கெல்ஸ்.
26. வால்காவிலிருந்து கங்கைவரை - ராகுல் சாங்கிருத்யாயன்
27.
பொதுவுடைமைதான் என்ன? - ராகுல் சாங்கிருத்யாயன்
28.
இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் - தேவிபிரசாத் சட்டோ
பாத்யாய
29.
சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள் - புதியவன் (puthiyavansiva.blogspot.in)
30.நீங்களும்
சமூகவிஞ்ஞானி ஆகலாம் – புதியவன் (puthiyavansiva.blogspot.com)
31.சாதி ஸ்வாக – புதியவன் (puthiyavansiva.blogspot.com)
32.தமிழகத்தில் சாதி வளர்ச்சியில் சமணம்
அளித்த எதிர்பாராத தாக்கம் – தேன்மொழி (siragu.com)
34.திராவிட உணர்வில் ஆரியமாக்கிய வீரவாகு,
அரிச்சந்திரன் – முனைவர் சு.குமார் (பதிப்பிக்கப்படாத கட்டுரை)
35.“இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப” சங்ககால
ஜாதிகள் – லண்டன் சுவாமிநாதன் (tamilandvedas.com)
36.இந்தியாவில் கம்பெனி ஆட்சி
- ta.wikipedia.org
39.மனுதரும
சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி) - திராவிடர் கழக வெளியீடு
40.யார் இந்து
மதம் தெரியுமா? - பேராசிரியர் சுப. வீரபாண்டியன் (www.youtube.com)
41.தமிழகப்
பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்:இனவரைவியல் நோக்கு - கே.சிவக்குமார். https://puthiyavansiva.blogspot.com/2016/10/blog-post_79.html
No comments:
Post a Comment