எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, April 6, 2026

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்

 

 

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்

முனைவர் புதியவன்

 

அறிவுடையவர்கள் யார் என்பதற்கு உங்கள் விடை என்ன?

மூளை உடையவர்கள் எல்லாம் அறிவுடையவர்கள் தானே ஐயா.

ஆடு மாடுகளுக்கு மூளை இருக்கிறது. அவைகளின் அறிவு தான் உங்கள் அறிவா! மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் இல்லையா!

மாணவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

தாவரங்களுக்கு மூளை இல்லை. ஆனால், ஓரறிவு உயிரினமாக தொல்காப்பியர் தாத்தா விளக்குகிறார். இவர் அறிவியல் தத்துவத்தின் தொல் தமிழ் மேதை.

“ஒன்றறிவதுவே உற்றறிவதுவே…” தொல்காப்பிய பாடல் தெரியுந்தானே.

மாணவர்கள் அமைதியின் ஓவியங்களாக விழித்துக் கொண்டிருந்தார்கள்.

நான் ஓவியங்களைக் களைத்துக் கொண்டிருந்தேன். சிந்தனையில் அதிர்வுகளை எழுப்புவது என் நோக்கம்.

 நாம் அனைவரும் அறிவுடைய மனிதர்கள்தானே.

 ஆமாம் ஐயா! மாணவர்கள் மேலும் கீழுமாக தலையசைத்து உறுதி செய்தார்கள். மனிதர்களுக்கு எத்தனை அறிவு ஆறறிவு ஐயா. மகிழ்ச்சி!

 ஒவ்வொரு மாணவரையும் எழுப்பிக் கேட்டேன் 

 ஒன்றாம் அறிவு என்ன?

இரண்டாம் அறிவு என்ன?

ஆறாவது அறிவு வரை ஒவ்வொன்றாகக் கேட்டேன். 

 நின்றவர்கள் அமைதியும் புன்னகையுமாக அசைந்து கொண்டிருந்தார்கள் 

 தவறாக சொன்னாலும் பரவாயில்லை நினைப்பதை சொல்லுங்கள் என்று தூண்டினேன். சரியும் தவறுமாகக் கலந்து வந்தன பதில்கள். 

 பேசுவது, பார்ப்பது, சிரிப்பது, நடப்பது, படிப்பது, சுவைப்பது, நினைப்பது…

இப்படி பலவிதமான பதில்கள் குவிந்தன 

நான் வேறுவிதமாக உணர்த்த முயன்றேன்.

உங்களுக்கு மதிய உணவு இருக்கிறதா? என்றேன்.

அவரவர்கள் பதில் கூறினார்கள்.

உங்களுக்கு நூறு ரூபாய் இருக்கிறதா? என்றேன்.

அறுபது ரூபாய்தான்…

இல்லை ஐயா…

இருக்கிறது ஐயா… இப்படி பலவிதமான பதில்கள் வந்தன.

உங்களுக்கு அறிவு இருக்கிறதா? என்றேன்

சிலர் கோபத்தை மறைத்தபடி புன்னகைத்தார்கள்…

சிலர் அலட்சியமாக சிரித்தார்கள்…

சிலர் வெகுளியாக ஆம் என்றார்கள்…

சிலர் இல்லை என்றும், கொஞ்சம் இருக்கிறது என்றும் சமாளித்தார்கள்…

நான் விளக்கத் தொடங்கினேன்.

உங்களுக்கு அறிவு இருக்கிறதா? என்றதும் ஏன் தன்மான உணர்ச்சிகள் பலவிதமாக வெளிப்படுகிறது.

மனிதரிடம் இந்த கேள்வி தன்மான உணர்ச்சியை எழுப்பாவிட்டால் நாம் மனிதர்களாக உயரவில்லை என்றுதான் பொருள்.

அசைபோடும் ஆடு மாடு மந்தைகளிடம் இந்த கேள்வியை கேட்டால் அவைகளுக்கு தன்மான உணர்ச்சி வராது. ஐந்தறிவு இருக்கிறது என்றும் பதிலும் சொல்லாது.

மனிதரிடம் கேட்டால் தன்மான உணர்ச்சி வரவேண்டும். ஏனெனில், இது ஆறாம் அறிவை சவால் விடுகின்ற கேள்வி.

நமது ஆறாவது அறிவு என்பது செயல்களுக்கான சிந்தனைத்திறனைக் குறிக்கிறது.

செயல்தான் மனிதரின் அடையாளம்.

 “ஆறறிவதுவே அவற்றொடு மனனே..” என்றத் தொல்காப்பியப் பாடலைக் கூறி விளக்கத் தொடங்கியிருந்தேன். 

 உடலால் தொட்டு அறிவது ஒன்றாவது அறிவு

 நாவால் சுவைத்து அறிவது இரண்டாவது அறிவு

 மூக்கால் முகர்ந்து அறிவது மூன்றாவது அறிவு 

 கண்களால் பார்த்து அறிவது நான்காவது அறிவு

 காதுகளால் கேட்டு அறிவது ஐந்தாவது அறிவு 

 மனதில் இருந்து சிந்தித்து உண்மைகளை அறிவது ஆறாவது அறிவு 

 நாம் எல்லோரும் சிந்திக்கும் திறமை உடையவர்களா?

ஆம் எனில் நாம் மனிதர்கள்தான்.

இல்லையெனில் ஆடு மாடு போன்ற மந்தைகள்தான்.

“மாடுகளை மந்தைகளாகக் கருதாமல் தெய்வங்களாகக் கருதுவதுதானே நம் பண்பாடு ஐயா!” 

ஐயையோ! என்று திணறி போனேன்.

அந்த மாணவன் மேதையைப்போல் நின்று கொண்டிருந்தான்.

நான் பொறுத்தமான விளக்கம் கூறக்கடமைபட்டிருந்தேன்.

தெய்வங்களை இறைச்சி வியாபாரத்திற்காக ஏற்றுமதி செய்வதும் நம் பண்பாடுதான். தெய்வங்களை விற்று அதிக லாபம் பார்ப்பதும் நம் பண்பாடுதான் என்றேன்.

அவன் அதிர்ச்சி அடைந்தது போல விழித்தான்.

உணர்ச்சிவசப்படாதே தம்பி. அறிவார்ந்த முடிவுகளுக்கு பயன்படாது.

எப்போதும் நம்பிக்கைகளை வகுப்புகளுக்கு கொண்டு வரக்கூடாது. கருத்துகளைத் தான் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் கருத்துரிமை என்ற ஜனநாயகமே செத்துவிடும். ஜனநாயக உரிமைகளை உயிரோடு பாதுகாப்பது நம் கடமை அல்லவா! 

 ஒரு மாணவி கேட்டார் “நம்பிக்கையும் கருத்தும் வேறுவேறுங்களா ஐயா“ 

 ஆம். கருத்து வேறு, நம்பிக்கை வேறு. 

 உதாரணத்திற்கு இரண்டு(2) 

 இரண்டு என்பது உண்மை சார்ந்த கருத்துகளாக இருப்பது வேறு,

உண்மைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகளாக இருப்பது வேறு. 

 2 என்பது 1+1 என்கிறேன் நான் .

2 என்பது 1/2 + 1/2 + 1/2 + 1/2 என்கிறீர்கள் நீங்கள் .

2 என்பது 1/4 + 1/2 + 3/4 + 1 என்கிறார் மற்றொருவர் .

 இவை அனைத்தும் இரண்டின் மதிப்பு பற்றிய பல்வேறு கருத்துக்கள். அனைத்து கருத்துகளுக்கும் சம உரிமை இருக்கிறது. எந்த கருத்து சரியானது என்பதை விவாதித்து முடிவு எடுக்க உரிமை உள்ளது.

வகுப்பு உட்பட பொது இடங்களில் இந்த கருத்துகளைக் கலந்துரையாடவும் விவாதிக்கவும் கருதுரிமை உண்டு என்பதுதான் ஜனநாயகம். நடைமுறை உண்மைகள் குறித்த பல்வேறு கருத்துகளுக்கும் இது பொருந்தும். ஆனால் நடைமுறை உண்மைகளுக்குத் தொடர்பு இல்லாத நம்பிக்கைகளுக்குப் பொருந்தாது.

2 என்பது பரமாத்மா + ஜீவாத்மா என்று எவராவது சொன்னால் அதை கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது. அது நடைமுறைக்கு அப்பாற்பட்ட அவரது மத நம்பிக்கை. இது போன்ற நம்பிக்கைகள் அவரவர்களது தனிப்பட்ட விவகாரங்கள். இவை கருத்துரிமையில் அடங்காது. அதனால்தான் ஜனநாயகம் குறித்த அரசியல் சாசனம் “மதசார்பற்ற ஜனநாயக குடியரசு“ என்பதாக வரையறை செய்துள்ளது.

மதச் சார்புடையது நிச்சயமாக ஜனநாயக குடியரசாக இருக்க முடியாது என்பதுதான் இதன் பொருள். ஏனெனில், உண்மைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையானது உண்மைகள் நோக்கிய பல்வேறு கருத்துக்களின் வளர்ச்சியைத் தடை செய்துவிடும். 

 நாம் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறோம்.

நாளைய தலைவர்களை பிரசவிக்கின்ற கருப்பையில் உரையாடிக் கொண்டிருக்கிறோம். நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்ற அறிஞர்களை அடை காத்துக் கொண்டிருக்கிறோம். எனவே, கருத்துகளில் நம்பிக்கையைக் கலக்காமல் எச்சரிக்கையாக உரையாட பழகுவோம்.

 சிந்திக்கும் திறன் இல்லாவிட்டால் நாம் ஆடு மாடுகளைப் போன்ற வெறும் மந்தைகள் என்றேன். இது நம்பிக்கை அல்ல நம்மைப் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கின்ற கருத்து. விமர்சிக்கப்படாத வாழ்க்கை வாழவே தகுதியற்றது. நாம் நமது சிந்தனை முறையை விமர்சனப்படுத்த வேண்டும் அல்லவா!

 உங்கள் சிந்தனையில் இருந்து நீங்கள் கூறுங்கள் .

 மாடுகள் போன்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் என்ன?

 நம்ம சிரிப்போம் அதுகள் சிரிக்காது ஐயா ..

 நமக்கு ரெண்டு கால் அதுகளுக்கு நான்கு கால்கள் ஐயா ..

 நமக்கு கொம்பு இல்லை அதுகளுக்கு கொம்பு இருக்கு ஐயா ..

 நான் குறிக்கிட்டுப் பேசினேன் 

 நம்ம உடை உடுத்துவோம் அதுகள் உடுத்தாது ..

 நம்ம சமைத்து சாப்பிடுவோம் அதுகள்...

 இப்படியே சொல்லிட்டுப் போறதுதான் அடிப்படை வேறுபாடா!

 எல்லோரும் சிரித்து மகிழ்ந்தார்கள். நான் விளக்கத் தொடங்கினேன். 

 கதை சொல்லி தென்கச்சி கோ சுவாமிநாதன் இப்படி சொல்கிறார் .

 கால்களால் நடப்பவைகள் கால்நடைகள். மனதால் நடப்பவர்கள்தான் மனிதர்கள் 

 மனிதர்களைத் தவிர எல்லா உயிரினங்களும் இயற்கைக்கு ஏற்றபடி தம்மை மாற்றிக் கொள்கின்றன. மனிதர்கள் மட்டும்தான் தமக்கு ஏற்றபடி இயற்கையைத் திட்டமிட்டு மாற்றுகிறார்கள். இந்தத் திட்டமிட்ட மாற்றத்தைப் பிரபஞ்ச வரலாற்றிலேயே மனிதர்களால்தான் செய்ய முடிந்திருக்கின்றது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் திட்டமிட்ட மாற்றங்களை நிகழ்த்துவதுதான் மனித இயற்கை. இயற்கையின் அங்கமாகிய மனிதர்கள் ஒன்றுகூடி சிந்தித்து உழைப்பில் ஈடுபடுவதால் இதனை சாதித்துள்ளார்கள். மனிதர்கள் ஒன்றுகூடி சிந்தித்து உழைக்கின்ற உயிரினமாக இல்லாவிட்டால் அழிந்து போன உயிரினமாக என்றோ முடிந்திருப்பார்கள். எண்ணங்களின் இயங்குதளமாகிய மனதை உண்மைகளை அறிவதற்காகவும் சமூகத் தேவைகளுக்கு ஏற்றபடி மாற்றங்களை நிகழ்த்துவதற்காகவும் சிந்தனை உழைப்பில் ஈடுபடுகிறார்கள். சிந்தனை உழைப்பின் விளைவாகக் கருத்துகளை உருவாக்குகிறார்கள்.

மனிதர்கள் சிந்தனை உழைப்பில் உருவாக்கிக் கொண்ட கருத்துக்களைப் பற்றிக்கொண்டு செயல்களில் ஈடுபடுகிறார்கள். மனம் என்பதே சிந்தனைகளுக்கு அடித்தளம். அதனால்தான் தொல்காப்பியர் ஆறறிவதுவே அவற்றோடு மனனே என்று மனதை குறிப்பிடுகிறார். அறிஞர் தென்கச்சி மனதால் நடப்பவர்களை மனிதர்கள் என்கிறார்.

 ஆறாவது அறிவாகிய மனது சிந்தனை உழைப்பிற்கான அடித்தளம். மனித மன உணர்வுகளில் இயற்கை, சமூகம், மனித உறவுகள் அனைத்தும் எண்ணங்களாகவும் பிம்பங்களாகவும் இயங்குகின்றன. இவற்றை மூலதனமாக எடுத்துக் கொண்டே சிந்தனை உழைப்பில் அறிவு செயல்பாடு நிகழ்கின்றது. அறிவு செயல்பாடு மூன்று நிலைகளில் அமைகிறது.

 தகவல் அறிவுகள் மழையாகப் பொழிந்து 

 துறை சார்ந்த அறிவுகளில் நதிகளாக ஓடி 

 சமூக அறிவெனும் பெருங்கடலில் கலக்க வேண்டும்...

 தகவல் அறிவு மட்டுமே ஆறாம் அறிவாக அமையாது.

 துறை சார்ந்த அறிவு தனித்து இயங்க முடியாது.

 சமூக அறிவாகிய பெருங்கடலில் பாய்ந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே சிந்தனை திறனோடு செயல்பட முடியும்.

 ஒன்று கூடி வாழ்வதற்காக சிந்திக்கிறீர்களா?

 ஒன்று கூடி சிந்தித்து உழைக்க உதவியாக செயல்படுகிறீர்களா?

 மனித குலத்தை அரவணைத்து பாதுகாப்பதில் பங்காற்றுகிறீர்களா? ஆம் எனில்,

 நீங்கள் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது நிச்சயம்.

 சரிதானா தலைவரே என்று ஒரு மாணவரை கேட்டேன்.

 அவர் சிரித்த முகத்துடன் பேசினார். நீங்கள் பேசுவது புரியுதுங்க ஐயா. ஆனால், முழுதாக இன்னும் விளங்கிக் கொள்ள முடியல.

 நான் மேலும் விளக்க முன் வந்தேன்.

 செயல்,

செயல் திறன்,

செய்து பார்க்கலாம்,

செயல் தகுதி

 இந்தச் சொற்களில் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவுகின்ற முதன்மையான சொல் எது?

 சிலர் செயல் என்றார்கள்..

 சிலர் செயல் திறன் என்றார்கள் ..

சிலர் செய்து பார்க்கலாம் என்றார்கள் ..

சிலர் செயல் தகுதி என்றார்கள் ..

எந்தப் பதிலும் இல்லாமலும் சிலர் இருந்தார்கள் ..

 நான் விளக்க முன் வந்தேன். 

 செயல் தகுதிதான் செயல் திறமைக்கும் செயலுக்கும் தொடக்கமாகும்.

செயல் என்பது சிறந்த சொல் என்பார் மாமேதை லெனின்.

மனித உலகம் செயல்களால் கட்டமைந்துள்ளது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் செயல்கள்தான். இந்த வகுப்பு, மேஜை, ஜன்னல் வெளியே மரங்கள் கட்டிடங்கள், தெருக்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் ஒன்று கூடி திட்டமிட்டு உழைத்து உருவாக்கப்பட்ட மனித செயல்கள்தான்.

 செயல்தான் மனிதர்களின் அடையாளம்.

 செயல் திறமை என்பது செயலில் ஈடுபடும் மனிதரின் தனித்திறன் சார்ந்தது.

நீங்கள் எல்லோரும் துணி தைக்கும் தொழிலாளர்களாக இருக்கிறீர்கள். 

 நீங்கள் ஒரு நாள் உழைத்து ஒரு சட்டையைத் தைக்கிறீர்கள் ..

 அவர் ஒரு நாள் உழைத்து பத்து சட்டைகளைத் தைக்கிறார் ..

 நான் ஒரு நாள் உழைத்து ஒரு சட்டையை மிகுந்த கலை நயத்துடன் தைக்கிறேன்..

 இவர் ஒரு நாள் உழைத்து பத்து சட்டைகளைக் கலைநயத்துடன் தைக்கிறார்..

 செயலும் நேரமும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நமது தையல் தொழில் திறமைகள் வெவ்வேறாக இருக்கின்றன.

 திறமை என்பது சமூகத் தேவையோடு இணைந்தது. சமூகத் தேவைக்கு தொடர்பு இல்லாத எந்த திறமையும் செயல் தகுதியில் சேராது. நம் கல்லூரியில் ஒரு மாணவர் பிடிவாதமாக முடி வளர்க்கிறார். முடி வளர்ப்பதை தன் லட்சியமாகவும் கூறுகிறாராம். அதிக முடி வளர்த்தவர் என்ற சாதனையை அடைய வேண்டுமாம். மூளையை வளர்க்கச் சொன்னால் முடியை வளர்த்துக் கொண்டிருக்கிறார். குரங்குக்கும் கரடிக்கும் கூட முடி வளர்கிறது.உலகில் எந்த உயிரினமும் முடியை வெட்டிக் கொள்வதில்லை. முடியை வெட்டிக் கொள்பவர்கள்தான் மனிதர்கள். வளர்த்துக் கொண்டே இருப்பவர்கள் மந்தைகள். அவர் திறமையை மந்தை போல் அதிக முடி வளர்ப்பதில்தான் காட்ட வேண்டுமா. அவர் அதிக முடி வளர்ப்பதற்கான சமூகத் தேவை ஏதேனும் இருக்கிறதா? சமூகத் தேவைக்கு பொருந்தாத நடவடிக்கையை ஒரு செயலாகவே கருத முடியாது.

இவரது செயலை சாதனையாகவும் அங்கீகரிக்க வேண்டுமா! அறிவுடைய சமூகம் இதை சாதனையாகக் கருதுமா?

 ஒரு பேருந்துக்கு ஓரச்சாய்ப்பான் (side stand) சிறப்பாக தயாரித்துள்ளேன். உலகில் எந்த பேருந்திலும் இல்லாதபடி சிறப்பாக தயாரித்துள்ளேன். இந்தப் பேருந்தைப் பாருங்கள்.

 யாராவது ஒரு திறமைசாலி இப்படி ஒரு பேருந்தைக் காட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்.

 நான்கு சக்கர பேருந்துக்கு எதற்கடா ஓரச்சாய்ப்பான் என்று கேள்வி கேட்டு புத்தி கூறுவீர்களா மாட்டீர்களா!

மூளையை வளர்ப்பதற்குப் பதிலாக முடியை விதவிதமாக வளர்ப்பது…

பேருந்துக்கு ஓரச்சாய்ப்பான் நிறுவுவது…

சூத்தை ஆட்டி ஓடுற சர்கஸ் கரடிபோல வண்டிய வேகமா அலறவிட்டு ஆட்டிஆட்டி ஓட்டுறது…

இவை மட்டுமல்ல, சமூக தேவைக்கு அவசியப்படாத எந்தச் செயலையும் சாதனையாகவோ, செயல் திறமையாகவோ, செயலாகவோ கருதவே முடியாது.

 செய்து பார்க்கலாம் என்பது உறுதியற்ற செயலாகும். விளைவுகளைத் தீர்மானிக்காமல் விளையாடிப் பார்ப்பதுபோல. செயல்பாட்டில் உறுதி இல்லாமல் மனம் போன போக்கில் முடிவெடுப்பதுபோல. இது தன்னம்பிக்கைக்கு வழி கொடுக்கலாம். ஆனால், சமூக நம்பிக்கைக்கு உத்திரவாதம் கொடுக்காது. 

 எனக்கு சட்டை தைக்க தெரியாது. நான் தைத்துப் பார்க்கலாம் என்று கருதுகிறேன். என்னிடம் இருக்கும் துணியை ஆர்வமுடன் தைத்துப் பார்க்கிறேன். அது நல்ல சட்டையாகவும் வரலாம். அலங்கோலமாகவும் மாறலாம். அரைகுறையாக நான் விட்டு விடலாம். இப்படித்தான் முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. நான் ஆர்வத்துடன் தொடர்ந்து முயன்றால் தன்னம்பிக்கையுடன் முன்னேற முடியும் அவ்வளவுதான். ஆனால், சமூக நம்பிக்கை சாத்தியப்படுமா? அதாவது என்னை நம்பி நீங்கள் உங்களது மதிப்புமிக்க துணியைக் கொடுத்து சட்டை தைத்துத் தரச் சொல்வீர்களா?

 சிரித்த முகம் மாறாமல் மாட்டேன் என்று தலையசைத்தார்கள்.

 உங்கள் வாழ்க்கையை முன்னேற்றுகின்ற முதன்மையான சொல் செயல் தகுதிதான். செயல் தகுதி என்பதுதான் செயலுக்குத் தொடக்கம். ஒரு செயலில் ஈடுபட தொடங்கும் முன்பு அந்தச் செயலின் சமூகத் தேவைகளையும் விளைவுகளையும் முழுதாக தீர்மானித்துத் தொடங்கி முடிப்பதுதான் செயல் தகுதியாகும். அதாவது, ஒரு செயலைத் தொடங்கும்போது அதன் விளைவையும் முடிவையும் தீர்மானித்துக் கொண்டு தொடங்கி முடிக்கின்ற விவசாயியை போன்றது செயல் தகுதி.

 ஒரு விவசாயி நெல்லை மண்ணில் விதைக்க முயலும் போதே அதன் விளைவுகளையும் பயன்களையும் தீர்மானித்துக் கொண்டு தொடங்குகிறார். இந்த நிலத்தில் எத்தனை மூட்டை நெல்மணிகள் அறுவடையாக வேண்டும். எத்தனை லட்சம் வயிறு பசியாற வேண்டும். என்ன விலை கை சேர வேண்டும். இவற்றைத் தீர்மானித்துக் கொண்டு விவசாயத்தில் ஈடுபடுகிறார். 

இந்த விளைவில் முடித்தாக வேண்டும் என்று முடிவைத் தீர்மானித்துக் கொண்டு செயலில் ஈடுபடுவதுதான் செயல் தகுதி.

 நீங்கள் அனைவரும் செயல் தகுதியோடு வாழ்கிறீர்களா? 

 ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது பத்து நண்பர்களிடமாவது அது பற்றி பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு படியுங்கள்...

 பாடநூல்களைப் படிக்கும்போது எந்த பாடத்திலும் தோல்வியடையாமல் குறிப்பிட்ட சதவிகித மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு படியுங்கள்...

 திரைப்படங்கள் கலை இலக்கியங்களை அனுபவிக்கும்போது மாதம் ஒரு நாடகமாவது, ஒரு பாடலாவது, ஒரு ஓவியமாவது அல்லது இலக்கியக் கலை அறிவியல் படைப்புகளில் ஏதேனும் ஒரு புதிய படைப்புகளையாவது வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு செயல்படுங்கள்...

 ஒரு மாதத்திற்குள் என்பதுதான் கால எல்லை என்று கருதாதீர்கள்.

 ஒரு மணி நேரத்திற்குள் 

 ஒரு நாளுக்குள்

 ஒரு வாரத்திற்குள்

 ஒரு வருடத்திற்குள்

 என்பதெல்லாம் கால எல்லைகள்தான். எல்லைகளை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

 உங்கள் தனி திறன்களுக்கும், முயற்சிகளுக்கும், சமூகத் தேவைகளுக்கும் ஏற்றபடி உங்கள் செயல் தகுதிகள் அமைய வேண்டும்.

 கால அளவை இரண்டு வகையில் புரிந்து கொள்ளுங்கள்.

 ஒன்று, குறுகிய கால எல்லை .

 இரண்டு, நீண்ட கால எல்லை. 

 ஒரு வருடத்திற்குள் உட்பட்ட கால எல்லையைக் குறுகிய கால எல்லையாகக் கருதலாம். ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கால எல்லையை நீண்ட கால எல்லையாகக் கருதலாம்.

 நீண்ட கால எல்லையில் வாழ்நாள் இலக்குகளும் செயல் தகுதியாக அடங்கும். தன் வாழ்நாளிற்குள் தன்னையும், சக மனிதர்களையும், மனித குலம் முழுவதையும் முன்னேற்றுவதற்காக எத்தகைய காரியங்களைச் செய்து முடிக்கப் போகிறீர்கள் என்பதையும் தீர்மானித்துக் கொண்டு செயல்படுங்கள்…

 இந்தத் தகுதி மிக்க செயல்கள்தான் உங்களையும் உங்கள் உலகையும் அழகாக மாற்றும்.

 வகுப்பறையில் அழகு என்பது மாணவர்களின் அறிவு தான்.

 அழகு ஒருபோதும் பொருள்களில் இருப்பதில்லை. பார்ப்பவர்களின் கண்ணோட்டங்களில் வெளிப்படுவதுதான் அழகு. ஆனால், பரிபூரணமான பேரழகு உங்கள் உருவத்தில் குடி புகுந்து கொள்ள முடியும். நீங்கள் உங்கள் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் மனித குல மேன்மைக்கு உதவும்படி பேரன்பினாலும் பேரறிவினாலும் தகுதிப்படுத்திக் கொண்டால் முடியும்.

 மனித குலத்தின் இதயம் இசைப்பதைக் கேளுங்கள்...

 தலைமுறைகளின் அழகான உலகத்தை உங்கள் கனவுகளால் அரங்கேற்றத் துடிக்கிறது!

வெளிவந்த விவரம்

06 ஏப்ரல் 2026

 


http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/49325-arravum-karrar-arivutaiyar

 

 

அதிகம் படித்தவை