1.12.இலக்கியமும் இனவரைவியலும்
இலக்கியமும் பண்பாடும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. எனவே இலக்கிய வடிவில் எழுதப்பட்ட மக்கள் திரளின் பண்பட்டினைக் குறிப்பிடுவது ஆகும்.
இலக்கியம், இனவரைவியல் ஆகிய இவ்விரு பண்பாட்டுப் பனுவல்களும் ஒன்றோடொன்று வேறுபடுகின்ற இடங்களும் உண்டு, ஒன்றுபடுகின்ற இடங்களும் உண்டு.
1.12.1.இலக்கியத்திலிருந்து இனவரைவியல்
வேறுபடும் இடங்கள்
இலக்கியவாதி தான் வாழும் சமூகத்திலிருந்து பெற்ற அனுபவங்களைக் கொண்டும், சமூகத்தைப் பற்றிய செய்திகளை ஒரு பார்வையாளனாக இருந்து சேகரித்துக் கொண்டும் புனைவுகளுடன் இலக்கியத்தைப் படைக்கிறான். ஆனால் இனவரைவியலாளன் எந்தப் பண்பாட்டை ஆராய விழைகிறானோ அந்தப் பண்பாட்டைச் சேர்ந்த சமூகத்தில் தானும் ஓர் உறுப்பினராக இருந்து சேகரித்த செய்திகளைத் தன் உள்ளப்பாங்கிற்கு ஏற்ப வரிசைப்படுத்தி இனவரைவியலைப் படைக்கிறான்.
ஒரு புலவன் தன்னுடைய இன்ப துன்ப நிலைகளை அல்லது புகழ் பெற்ற மனித குல சமுத்திரத்தையே செய்யுள் வடிவிலோ உரைநடை வடிவிலோ எடுத்துக் கூறுவது இலக்கியம் ஆகும். இது முழுக்க முழுக்க புலவனின் மன இயல்பைக் கூறுவதையே முழு நோக்கமாகக் கொண்டிருக்கும். சமூகப் பயன் இனவரைவியலிலே மிகுதியாக உண்டு. இலக்கிய ஆய்வின் மூலம் சமூகப் பயன்பாடு மிகுதியாக இருக்காது.
மேலும் இலக்கியம் படைக்கப்பட பெரும்பாலும் எந்த தரவுகளும் தேவைப்படாது. ஆனால் இனவரைவியல் ஆய்வுக்கு களப் பணியே மூல ஆதாரம். களப்பணி அன்றி இனவரைவியல் ஆய்வு அமையாது.
1.12.2.இலக்கியமும் இனவரைவியலும்
ஒன்றுபடும் இடங்கள்
இலக்கியமும் இனவரைவியலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். இரண்டுமே அனுபவங்களை எழுத்து வடிவில் அமைக்கப்பட்ட பிரதி ஆகும்.
இலக்கியவாதியும் இனவரைவியலாளனும் தம் முன்னோர்களின் வழியில் செயல்படுகின்றனர். இதில் இலக்கியவாதி தம்முன்னோர்கள் பற்றிக் கூறுவதில்லை. ஆனால் இனவரைவியலாளர் தம் முன்னோர்களைத் தவறாமல் குறிப்பிடுவர்.
எனவே இலக்கியம், இனவரைவியல் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக காணப்பட்டாலும் சில முறைகளில் ஒத்த தன்மையைப் பெற்றுள்ளதாக இருப்பதால் இலக்கியத்தை இனவரைவியலுக்குத் தேவையான ஆதாரமாகக் கருத இடம் உண்டு.
இலக்கியம் பண்பாட்டின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. பண்பாட்டின் ஒரு பகுதியான இலக்கியத்தையு’ம் ஆராய வேண்டும். இக்கருத்தை ஒரு பண்பாட்டைப் பற்றி ஆராய முற்படும்போது அந்தப் பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் குழுவினர் பின்பற்றும் உறவுமுறைகள், ஒழுங்கு அமைப்புகள், அவர்களின் உணவுமுறைகள், வாழ்க்கை வட்டச் சடங்குகள் போன்ற பண்பாட்டுக் கூறுகளை ஆராய்வது எவ்வளவு முக்கியமோ அதுபோன்று இனவரைவியலார் இலக்கியத்தையும் ஆராய்வது அவசியம் என்பதை வின்னர் வலியுறுத்துகிறார். (தனஞ்செயன், ஆ. 2006:12)
எனவே இனவரைவியலாளர்கள் இனவரைவியல் ஆய்வை மேற்கொள்ளும்போது இலக்கியத்தையும் ஆராய வேண்டும் என்பதை அறிய முடிகின்றது. வேறு வகையான ஆவணங்கள் எவையும் கிடைக்கப் பெறாத ஒரு கடந்த காலத்திய சமூகத்தின் பண்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும்
ஆராய்வதற்கும் அச்சமூகம் படைத்தளித்தக் கலை இலக்கிய வடிவங்களையே முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்துவதை ஒரு தவிர்க்க முடியாத விதி மீறலாக நாம் ஏற்க வேண்டியவர்களாக உள்ளோம். (தனஞ்செயன், ஆ. 2006:38)
1.12.3.தொல்காப்பியத்தில் காணப்படும்
இனவரைவியல் கூறுகள்
தமிழ் நூல்களில் முதன்மையான நூலாக விளங்குவது தொல்காப்பியமாகும். தொல்காப்பியர் மக்கள் வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாகப் பகுக்கிறார். மக்களின் குடும்பம் சார்ந்த செய்திகள் அகத்திணையியலிலும் சமூகம் சார்ந்த செய்திகள் புறத்திணையியலிலும் கூறப்பட்டுள்ளது. அகம் சார்ந்த திணைகள் ஏழு என்றும், அதற்குரிய புறம் சார்ந்த திணைகள் ஏழு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இனவரைவியல் என்பது நுட்பமான பரந்த தளத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது. இச் செயல்பாடுகளுக்குக் கருத்தியல் அடிப்படையிலான ஒரு வரைவுத் திட்டம் தேவை. அத்திட்டம் பண்பாட்டின் ஒவ்வொரு கூறையும் தனித்தனியாகவும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் பார்ப்பதாகவும் பொருள் கொள்வதாகவும் அமையும்.
தொல்காப்பியர் திணைக்குரிய பொருட்களாக மூன்றினைக் குறிப்பிடுகிறார். 1.முதற்பொருள், 2.கருப்பொருள், 3.உரிப்பொருள்.
1.12.3.1.முதற்பொருள்
நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் ஆகும். இக்கருத்து
“முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே” (தொல்.அகத். நூற்பா. 4) என்ற நூற்பாவில் இடம் பெற்றுள்ளது.
நிலம் என்பது மக்களின் வாழ்வியலுக்கான புவியின் பரப்பாகும். பொழுது என்பது மக்களின் வாழ்வியலுக்கான காலத்தைக் குறிப்பதாகும்.
1.12.3.2.கருப்பொருள்
“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகைப் பிறவும் கருவென மொழிப” என வரையறுக்கிறார். இவற்றைக் கருப்பொருளின் கூறுகளாகக் கொள்ளும் தொல்காப்பியர் இவற்றோடு தொடர்புடைய பிறவும் கருப்பொருட்கள் எனச் சொல்வர் என்கிறார். அதாவது தெய்வம் என்பது தெய்வத்தின் பெயரை மட்டும் குறிப்பதன்று. அத்தெய்வம் சார்ந்த மரபை முழுமையாகக் குறிப்பதாகும். வழிபாடு சடங்குகள் நம்பிக்கைகள் போன்ற அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதே தெய்வம் ஆகும்.
இவற்றிலிருந்து தொல்காப்பியர் சமயநம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள் போன்ற இனவரைவியல் கூறுகளைப் பின்பற்றியுள்ளார்.
1.12.3.3.உரிப்பொருள்
ஒரு குறிப்பிட்ட திணைக்குரிய ஒழுக்கமே உரிப்பொருள் ஆகும். தொல்காப்பியர் ஐவகைத் திணைகளின் ஒழுக்கத்தைப்
“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே” (தொல். அகத். நூற்பா.16)
என்ற நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியர் கூறியுள்ள முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றில் இனவரைவியலாளர்கள் கூறியுள்ள இனவரைவியல் கூறுகள் காணப்படுகின்றன.
1.13.பழங்குடிகள்
மனித இனம் என்பது பரிணாம வளர்ச்சியின் இறுதி நிலையாகும். ஆயினும் பல நிலைகளில் மாற்றங்களை ஏற்று வாழும் மனித சமூகத்தில் பழங்குடி மக்கள் நாகரிக உந்துதல்களுக்கு ஆட்படாமல் காடுசார்ந்த பொருட்களைச் சேகரித்தல், வேட்டைத் தொழில், மந்தைத் தொழில், இயற்கை விவசாயம் ஆகிய தொழில்களை மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பழங்குடிமக்களின் இடம், மொழி, சூழல், வீட்டின்அமைப்பு, உடையமைப்பு, உணவுமுறை, வைத்தியமுறை, புழங்குபொருட்கள், பஞ்சாயத்துமுறை போன்ற செய்திகள் மனித வரலாற்று வளர்ச்சியின் தனித்துவங்களைப் பெற்றிருக்கின்றன.
1.14.பழங்குடிகள் விளக்கம்
Tribe எனும் ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பாகப் “பழங்குடி” எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. “இனக்குழுமக்கள்” என்றும், “மலைவாழ்மக்கள்” என்றும் இச்சொல்லுக்கு வேறு மொழிபெயர்ப்புகள் தமிழறிஞர்களால் கூறப்படுகின்றன. வெரியர்எல்வின், லூயிஸ்போன்றோர் ‘Tribe’ எனும் சொல்லை நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் எனும் பொருளிலேயே பயன்படுத்துகின்றனர். டி.என்.மஜீம்தார் (D.N.Majumdar) இச்சொல்லின் பொருள் தெளிவின்றி இருப்பதாகக் குறிப்பிடுகின்றார். (ரஞ்சன்,ம.2008:11) இச்சொல் பண்பாட்டிலும் மொழியிலும் ஒரே நிலையுடைய ஒரு குழுவினரைக் குறிப்பதாக அவர் விளக்கம் கூறியுள்ளார். மாக்ஸ்வேபர் (Max Waber), இச்சொல் வேறு சில பொருள்களையும் உள்ளடக்கியுள்ளது என்பார். 1.குறிப்பிட்ட நிலப்பகுதி, 2.வேலைவாய்ப்பு சிறப்பில்லாததன்மை, 3.பெரிய சமுதாயங்களோடு ஒப்பிடும்போது சமுதாயத் தரக்குறைவு, 4.அவர்களுக்குள் ஒரு அரசியலமைப்பு இருத்தல், 5.வேறு பழங்குடிகளுடனே திருமணத்தொடர்பு கொள்வது (Exogamy) தங்கள்இனத்துக்குள்ளேயே
திருமணம் (Endogamy), செய்துகொள்வது பற்றித் தெளிவான தன்மை இன்மை பகுத்தறிவு உட்பட்ட சட்ட திட்டமின்மை என்பவற்றைக் குறிப்பிடுகின்றார். (ரஞ்சன்,ம.2008:11)
Tribe என்ற சொல் சிறிய அரசு போன்ற அமைப்புடைய ஒத்த மொழி பேசுகின்ற ஒரு சமுதாயக் குழுவைக் குறிப்பதாக ரிவர்ஸ் (Rivers) கருதுகின்றார். (ரஞ்சன்,ம.2008:12) சமூகவியலறிஞர்கள் மொழியமைப்பு, பண்பாடு ஆகியவற்றின் ஒற்றுமையின் அடிப்படையில் பழங்குடிகளைப் பாகுபடுத்துவர். பழக்க வழக்கங்களில் மிகப் பழமையைக் கொண்டுள்ள இனத்தவரையே பழங்குடிகள் எனும் சொல் குறிக்கிறது என்று டாக்டர் நசீம்தின் கூறுகின்றார். (ரஞ்சன்,ம.2008:12) பழங்குடி என்பது தொல்மரபு அல்லது ஆதிகாலத் தேறியகுடி என்று தமிழ்மொழியகராதி கூறுகின்றது. (ரஞ்சன்,ம.2008:12) தொன்றுதொட்டு மேம்பட்டுவருகின்ற குடியின்கட் பிறந்தவர் என்று தமிழ்ச் சொல்லகராதி கூறுகின்றது. (ரஞ்சன்,ம.2008:12)
பழங்குடி எனும் சொல் இலத்தீன் மொழியில் “மூன்றில்ஒன்று” (One third) எனும் பொருளைத் தருகின்றது. இச்சொல் முதன் முதலில் எபிரேயரைக் குறிக்கப் பயன்பட்டது. கட்டுக்கோப்பற்ற நிலையில் பன்னிரண்டு குழுக்களாக வாழ்ந்த எபிரேயர்கள் தங்களின் ஒவ்வொரு குழுவையும் ஜேக்கப் (Jacob) இன் பன்னிரண்டு குழுக்களுக்கும் பொதுவான மூதாதையராக விளங்கினான். இதனால் இக்குழுக்கள் இஸ்ரேலில் “பன்னிரண்டு பழங்குடிகள்” எனவும் கூறப்பட்டன. இதன் பின்னரே பழங்குடிகள் எனும் சொல் பொதுவான மூதாதையரிடமிருந்து தோன்றிய பல குடும்பங்களைக் கொண்ட எந்த ஒரு குழுவையும் குறிக்கும் சொல்லாயிற்று. (ரஞ்சன்,ம.2008:12)
பழங்குடி எனும் சொல் தொன்மை நிலையையும் வளர்ச்சியடையாத பண்பாட்டையும் கொண்டுள்ள மக்கள் குழுவைக் குறிக்கின்றது. மேலும் பொதுவான பெயரையும், குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் தன்மையையும் ஒரு மொழியைப் பேசும் இயல்பையும் திருமணம், செய்யும் தொழில் அல்லது பணியில் சில விலக்குகளைக் கொண்டு விளங்கும் தன்மையுடையவராய் ஒருவருக்கொருவர் கட்டுப்பாட்டுடனும் பொருட்களைப் பரிமாறிக் கொண்டும் வாழும் பல குடும்பங்களில் தொகுதியே பழங்குடிகள் என்று பக்தவத்சலபாரதி கூறியுள்ளார். (பக்தவத்சலபாரதி.1990:303-305). பண்டைக் காலத்தில் கொள்ளைக்காரர்களும் சிற்றரசர்களும் இந்தியா மீது படையெடுத்து மக்களைக் கொன்று துன்புறுத்தி அடக்கி, அவர்களுடைய பூமிகளைக் கைப்பற்றியதோடு அவர்களை அடிமைகள் போல் நடத்தினர். இக்கொடுமைக்குப் பயந்து அநேகக் குடும்பங்கள் நாட்டை விட்டு விலங்குகள் வசிக்கும் காட்டிலும் மலைகளிலும் குடியேறி வேட்டையாடியும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு இவர்கள் நாட்டின் பொதுமக்களோடு எந்த விதமான தொடர்புமில்லாமல் தனித்தே காட்டிலும் மலையிலும் கிடைக்கும் காய், கனி, கிழங்கு, விலங்குகள் இவற்றைக் கொண்டு வாழ்ந்துவந்தனர். இவர்களைத்தான் இப்போது பழங்குடிகள் என்று அழைக்கிறோம் என்று எஸ்.ஆர். வேங்கடராமன் கூறியுள்ளார். (ரஞ்சன்,ம.2008:13)
பண்டைக்கால மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் மேய்ச்சல் நிலங்கள் பெருகிய நதிக்கரையோரங்களைத் தேர்ந்தெடுத்து அக்கால மக்கள் பல குழுக்களாகச் சென்று அங்குக் குடியேறி நதிக்கரையோரப் பண்பாட்டினை வளர்த்து வந்தனர். அவ்வாறான பண்பாட்டு வளர்ச்சி பெற்ற நகர மக்களும் அவர்களோடு நெருங்கிய தொடர்புடைய கிராமமக்களும் பலவகையான இயற்கை உந்துதல்களாலும், வசதிகளாலும், நாகரிகநிலை பெற்றிருந்தனர். புவியியற்சூழலில் ஒதுக்கப்பட்ட சில இனத்தார் மட்டும் இனக்குழு வாழ்விலேயே பின்தங்கிவிட்டனர். அறிவியல் உலகம் பல வித அதிசய சாதனைகளை நிதழ்த்திவரும் இக்காலகட்டத்திலும் கல்வியறிவற்ற நிலையில் பழமையெனும் மூடுபனியில் மூழ்கிப் புதுமையினைக் கண்டு மருளும் இப்பழங்குடிகளும் வாழ்ந்து வருகின்றனர் என்று டாக்டர். பீ. நசிம்தீன் கூறியுள்ளார். (ரஞ்சன்,ம.2008:13) ஓர் அரசன் வேறு அரசனின் ஊர்களைப் பிடித்துக் கொண்டதும் தங்களுடைய ஊர்களை விட்டுவிட்டு இந்திய அரசனுக்குப் பயந்து நாடோடிப் பிச்சைக்காரர்களாக ஆனார்கள் என்கிறார் பிலோஇருதயநாத். (ரஞ்சன்,ம.2008:13)
காட்டில் கிடைக்கும் இலைதழைகளை ஆடையாக அணிந்து காட்டுப்பன்றிகளையும்
கரடிகளையும் போல கிழங்கு, தேன் முதலிய காட்டில் கிடைக்கும் இயற்கைப் பொருள்களையே உண்டு, காடுகளில் கண்காணாத வகையில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் இப்பொழுது ஐரோப்பியர்களோடு கொண்ட தொடர்பின் செல்வாக்கால் நாட்டு மனிதர்களாக மாறி வாழ்க்கை நெறி, ஒழுக்கமுறை ஆகியவற்றை மாற்றிக்கொண்டதோடு பேசும் மொழியிலும் கூட மாறுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர் என்று எட்கர் தர்ஸ்டன் கூறியுள்ளார். (ரஞ்சன்,ம.2008:13) தொல் குடிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் அவர்களுடைய சமூக மற்றும் பண்பாட்டின் எச்சத்தினையும் கொண்டிருப்பவர்களே இன்றுள்ள பழங்குடிகள் ஆவர் என்று இரா. முருகன் கூறியுள்ளார். (முருகன்,இரா. 2003: 46) பழங்குடிகள் தங்களுக்கெனத் தனிப்பட்ட பண்பாட்டோடும். அடையாளத்தோடும் குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளுடன் சமத்துவ உணர்வுடனும், பகிர்ந்தளிக்கும் எண்ணத்துடனும் வாழ்பவர்கள். பூமியைத் தாயாக நினைத்துப் பொதுநல நோக்குடன் பாரம்பரிய அறிவை பயன்படுத்தி வாழ்பவர்கள் என்று கே. கிருஷ்ணன் கூறியுள்ளார். (ரஞ்சன்,ம.2008:14). இவ்வாறு பழங்குடி என்பதற்குப் பலர் பல நிலைகளில் விளக்கம் கூறியுள்ளனர். பரிணாம வளர்ச்சியின் இறுதிநிலையே மனித இனத்தின் தோற்றமாகும். இத்தகு மனித இனம் சமூகப் படிமலர்ச்சியில் மாற்றம் பெற்று இனக்குழு அமைப்பை அடைந்தது. பின்னர் மனிதர்கள் சிறுசிறு குழுக்களாகவும் பெருங்கூட்டமாகவும் ஓரிடத்தில் நிலையாகவோ நாடோடிகளாகவோ வாழ்ந்துவந்தனர். இவர்களில் சில குழுவினர் பலவகையான இயற்கை உந்துதல்களாலும், வசதிகளாலும் நாகரிக நிலையைப் பெற்றனர். சில குழுவினர் புவியியல் சூழலால் இனக்குழு வாழ்விலே பின்தங்கிவிட்டனர். இவர்களில் பலர் இயற்கை சீற்றத்தில் அழிந்தனர். சில குழுவினர் இன்றும் காடுகளில் வேட்டைத் தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்டு முன்னோர்களின் பண்பாட்டு எச்சத்தினைப் பெற்று, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகக் காணப்படுகின்றனர். இப்பழங்குடிகள் தமிழகத்திலும் புதுவையிலும் பல பிரிவினர்களாக வாழ்ந்துவருகின்றனர்.
1.15.இந்தியப்பழங்குடிகள்
உலக நாடுகளில் தென்னாப்பிரிக்காவிலேயே
மிகுதியாகப் பழங்குடிகள் காணப்படுகின்றனர். அடுத்து இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். “1971 இல் பழங்குடிகள் கணக்கெடுப்பில் அதிகமாகப் பாரதநாட்டில் வசிக்கும் பழங்குடிகளின் சனத்தொகை (3,80,15,162) பாரதநாட்டுச் சனத்தொகையில் ஏழு சதவிகிதத்தினர் ஆவர்” (ரஞ்சன்,ம.2008:14). இந்தியாவில் 27 மாநிலங்களில் 577 வகையான பழங்குடியினர் வாழ்கின்றனர். இந்தியாவில் வாழும் பழங்குடிகளின் இருப்பிடம் மற்றும் மொழியை அடிப்படையாகக் கொண்டு ஓங்கே பழங்குடிகள், நிகோபர்த் தீவுப் பழங்குடிகள், சந்தால் பழங்குடிகள், கல்லொங் பழங்குடிகள், இந்து-மிஷ்மிப் பழங்குடிகள், முரியா பழங்குடிகள், காரோ பழங்குடிகள், போண்டோ பழங்குடிகள், அங்காமி பழங்குடிகள், கிராசியா பழங்குடிகள், அசுரப் பழங்குடிகள், அஸ்ஸாம் காசிப்பழங்குடிகள் என்று பலவகையில் வகைப்படுத்தியுள்ளனர்.
1.16.தமிழகப்பழங்குடிகள்
தமிழகத்தில் 36 வகையான பழங்குடிகள் பல்வேறு மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வாழ்விடங்களாக மலை, காடு, வயல் ஆகியவை அமைகின்றன. 1991 இன்மக்கள் தொகைகணக்கெடுப்பின்படி 36 வகையான பழங்குடியினர்களின் மொத்த மக்கள் தொகை பின்வருமாறு அமைகின்றது. அண்மையில் (ஜீன் 2016) நடுவண் அரசு நரிக்குறவர்களையும் இப்பட்டியலில் இணைக்க இசைவளித்துள்ளது.
பகுதி
|
மொத்தம்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
கிராமம்
:நகரம்
|
5,74,194
|
2,93,012
|
2,81,182
|
கிராமப்புறம்
|
5,05,208
|
2,57,853
|
2,47,355
|
நகர்ப்புறம்
|
68,986
|
35,159
|
33,827
|
வ.எண்
|
தமிழ்ப்பெயர்கள்
|
ஆங்கிலப்
பெயர்கள்
|
1.
|
ஆதியன்
|
Adiyan
|
2.
|
ஆரநாடன்
|
Aranadan
|
3.
|
எரவள்ளன்
|
Eravallan
|
4.
|
இருளர்
|
Irular
|
5.
|
காடர்
|
Kadar
|
6.
|
கம்மாரா
(கன்னியாகுமரிமாவட்டம்மற்றும்திருநெல்வேலிமாவட்டத்திலுள்ளசெங்கோட்டைவட்டத்தைத்தவிர்த்து)
|
Kammara (Excluding Kanyakumari
dist., and Shenkottahtaluk of Triunelveli dist.)
|
7.
|
காணிக்காரன்,
காணிக்கார்
(கன்னியாகுமரிமாவட்டம்மற்றும்திருநெல்வேலிமாவட்டத்திலுள்ளசெங்கோட்டைமாவட்டத்தில்வாழ்பவர்கள்)
|
Kanikaran, Kanikar (In
Kanyakumari district and Shenakottahtaluk)
|
8.
|
கனியன்
:கணையன்
|
Kaniyan, kanayan
|
9.
|
காட்டுநாயக்கன்
|
Kattunayakan
|
10
|
கொச்சுவேலன்
|
KochuVelan
|
11
|
கோண்டகாபு
|
KondaKapus
|
12
|
கோண்டாரெட்டி
|
Kondareddis
|
13
|
கோரகர்
|
koraga
|
14
|
கோத்தர்
(கன்னியாகுமரிமாவட்டம்மற்றும்திருநெல்வேலிமாவட்டத்திலுள்ளசெங்கோட்டைவட்டத்தைத்தவிர்த்து)
|
Kota (Excluding Kanyakumari
dist., and Shenkottahtaluk of Triunelveli dist.)
|
15
|
குடியா,
மலக்குடி
|
Kudiya, Malakudi
|
16.
|
குறிச்சன்
|
Kurichcham
|
17.
|
குரும்பர்
(நீலகிரிமாவட்டத்தில்வாழ்பவர்கள்)
|
Kurumbas (in the Nilgiris
District)
|
18.
|
குருமன்
|
Kurumans
|
19.
|
மகாமலசர்
|
MahaMalasar
|
20.
|
மலைஅரையன்
|
MalaiArayan
|
21.
|
மலைப்பண்டாரம்
|
MalaiPandaram
|
22.
|
மலைவேடன்.
|
MalaiVedan
|
23.
|
மலக்குறவன்
|
Malakkuravan
|
24.
|
மலசர்
|
Malasar
|
25.
|
மலையாளி
(வடாற்காடுமாவட்டத்திலுள்ளதர்மபுரிமாவட்டம்,
புதுக்கோட்டை,
சேலம்,
தென்ஆற்காடு,
திருச்சிராப்பள்ளிமாவட்டங்களில்வாழ்பவர்கள்)
|
Malayali (in Dharmapuri, North
Arcor, Pudukottai, Sakem, South Arcot and Tiruchirapalli districts)
|
26.
|
மலையகண்டி
|
Malayekandi
|
27.
|
மன்னான்
|
Mannan
|
28.
|
முதுகர்,
முதுவன்
|
Madugar, Muduvan
|
29.
|
முத்துவன்
|
Muthuvan
|
30.
|
பள்ளேயன்
|
Palleyan
|
31.
|
பளியன்
|
Palliyan
|
32.
|
பளியர்
|
Palliyar
|
33.
|
பனியர்
|
Paniyar
|
34.
|
சோளகர்
|
Sholagar
|
35.
|
தோடர்
(கன்னியாகுமரிமாவட்டம்மற்றும்திருநெல்வேலிமாவட்டத்திலுள்ளசெங்கோட்டைவட்டத்தைத்தவிர்த்து)
|
Toda (Excluding Kanyakumari
dist., and Shenkottahtaluk of Triunelveli dist.)
|
36.
|
ஊராளி
|
Uraly
|
1.17.பழங்குடிகள் பற்றிய புதினங்கள் அறிமுகம்
‘தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு’ என்ற தலைப்பின் கீழ் அமைகின்ற இவ்வாய்விற்குரிய ஐந்து புதினங்களின் கதைச் சுருக்கங்கள் கீழ்வருமாறு அமைகின்றன.
1.17.1.சோளகர்
தொட்டி அறிமுகம்
சிவண்ணா என்ற சோளகனை மையமாகக் கொண்டு புதினம் அமைக்கப்பட்டிருக்கிறது. விலங்குகள் தொட்டிக்குள் (ஊர்) வராமல் காவல் செய்கின்ற பொறுப்பில் சிவண்ணா இருக்கிறார். அந்த இரவில் யானைகள் மூங்கில் வேலிகளை முறித்து வந்துவிடுகின்றன. தொட்டியினர் ஒன்றுகூடி வெடியிட்டு விரட்டுகின்றனர். அந்த இரவு முழுதும் தூங்காமல் உக்கடத் தீ மூட்டி ஆட்டமாடி மகிழ்கின்றனர். உக்கடத் தீ என்பது பொது வெளியில் மையமாகத் தீயை மூட்டி சுற்றி அமர்ந்து குளிர்காய்வதாகும். மறுநாள் புட்டனின் மனைவி ஈரம்மாளுக்கு பிரசவவலி கண்டதால் குழந்தை பிறந்து மூன்றாம் நாளில்தான் பாங்காட்டு மூங்கில்களால் வேலியைச் சரிசெய்து கொண்டிருந்தனர். வேட்டைநாய் வனத்திலிருந்து ஒரு மானைத் தொட்டிக்கு விரட்டிவந்தது. அவர்கள் மானை எச்சரிக்கையாக ஒரு திருடனைப்போல வேட்டையாடினார்கள். காட்டில் சுதந்திரம் பறிபோகிக்கொண்டிருக்கும்
சூழலையும், முக்கிய விரோதியாக சீர்காட்டு ராஜீ செயல்படுவதைப் பற்றியும், சீர்காட்டுக்கு உரிமையானவர்களாக சிவண்ணாவின் குடும்பத்தினர் வாழ்ந்த கதையையும் புட்டனுக்கு விளக்கினார்கள். வேட்டையாடிய மான்கறியை ஊர் தலைமையாளாகிய கொத்தல்லிக்கிழவன் சமைத்தபோது சிவண்ணாவின் அப்பனும் தனது கூட்டாளியுமாகிய பேதனின் கதைகளை நினைத்துக்கொண்டிருந்தார். மணிராசன் கோயில் விழாவில் பேதனின் ஆவி ஊட்டியிருந்த பலிவாங்கும் உணர்ச்சியிலிருந்து சிவண்ணா இன்னும் மாறாமலிருக்கிறான். அப்போது மணிராசன் கோயிலுக்குத் தொட்டியின் கோல்காரனாகிய சென்நெஞ்சா பூசாரியாகத் திகழ்ந்தார். கோல்காரர் சென்நெஞ்சாவுக்கு கரியன் சிக்குமாதா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். சிக்குமாதா சிறந்த வேட்டைக்காரன். கரடியை வேட்டையாடிய பெருமையை அவனது மனைவி கெம்பம்மாளைத்தவிர எல்லா தொட்டியினரும் பாராட்டினார்கள். வனத்துரை அதிகாரிகள் விசயம் அறிந்து சிக்குமாதாவை நொய்தாளாபுரத்திற்கு இழுத்துச்சென்று சித்திரவதை செய்கிறார்கள். சிக்குமாதாவை காப்பாற்ற வேண்டி குரும்பூர் மணியக்காரர் மாதப்பாவிடம் தொட்டியினர் சென்றார்கள். மாதப்பா தனது கையாளாகிய புளியம்பட்டி துரையனை உதவியாக அனுப்பிவைத்தார். துரையன் நொய்தலாபுரம் வன அதிகாரிகளிடம் அறுநூறு ரூபாய் லஞ்சம் கொடுத்துச் சிக்குமாதாவை மீட்டதாகக்கூறி தொட்டியினரிடமிருந்த 96ரூபாயைப் பெற்றுக்கொண்டான். தொட்டியினர் மீதி 504ரூபாய் கடனைத் திருப்ப வேண்டியவர்களாகத் தொட்டி திரும்பினார்கள். மழை பொய்த்ததால் கடனைத் திருப்ப முடியவில்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி மணியகாரர் மாதப்பா உதவியுடன் சீர்காட்டின் அருகிலிருந்த கோல்காரனது பூமியைத் துரையன் அபகரித்தான். துரையன் மனைவி சாந்தா மணியகாரருக்கு இணக்கமாக இருந்தது துரையனுக்குச் சாதகமாகவே அமைந்தது. மணியகாரர் தனது செல்வபலத்தாலும் அரசு அதிகாரத்தில் தனக்கிருந்த முக்கியத்துவத்தாலும் சிவண்ணாவின் சீர்காட்டைத் துரையன் அபகரிக்க பட்டா வரி ரசீதை வாங்கித் தந்தார். எதிர்த்துப் போராடிய பேதனும் சிவண்ணாவும் ஆசனூர் காவல்துறையினரின் சித்திரவதைகளுக்கு ஆளாயினர். முடிந்தால் சட்டப்படி முயன்று சீர்காட்டை மீட்டுக்கொள் என்ற அறிவுறுத்தலுடன் விடுவிக்கப்பட்டனர். விவசாயத்தில் அக்கறையின்றி வேட்டையாடித் திரிந்த சிக்குமாதா யானை மிதித்துச் செத்துப்போனான். சிக்குமாதாவின் மனைவி கோல்காரன் சென்னெஞ்சாவுக்கு எதிராகப் பஞ்சாயத்துக்கூட்டி கணவரின் தம்பி கரியனின் விருப்பத்துடன் அவனை திருமணம் செய்துகொள்கிறாள். சென்நெஞ்சா தனது கோல்காரன் பொறுப்பை கரியனிடம் ஒப்படைத்தபின்பு சிறிது காலத்தில் இறந்துபோகிறார். பேதனும் உடல்நலம் தேறாமல் இறந்துவிடுகிறார். ஜோகம்மாள் மகள் ரதியுடன் சோளகனைப் படகல் மாதேஸ்வரன் கோயிலுக்குச் செல்கிறாள். கரைஒந்தனை லிங்காயத்து சிக்கயதம்படியின் மகள் மல்லி ஜோகம்மாளுடனும் ரதியுடனும் இணைந்து கொள்கிறாள். பயணத்தின்போது தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டு இறந்துகிடந்த ஒரு யானையின் சடலத்தைப் பார்க்கிறார்கள். ஒரு சோளகனைக்காரரிடம் யானை இறந்த கதையைக் கேட்டு நடக்கிறார்கள். லிங்காயத்தும் சோளகர்களும் வேறல்ல, இருவரும் சகோதரர்கள் என்பதை விளக்குகின்ற தொன்மக் கதையை ஜோகம்மாள் இருவருக்கும் சொல்லிக்கொண்டே நடக்கிறாள். மாதேஸ்வரனை வழிபட்டுவிட்டுச் சிக்கயதம்படியிடம் நாளை சந்திப்பதாக விடைபெற்று, சோளகனை ஒண்ணன் வீட்டிற்குச் சென்று தங்கினார்கள். ஒண்ணனது மருமகள் கெஞ்சி பற்றிய கதைகளை அறிந்துகொண்டு மறுநாள் இரவு தொட்டிபோய் சேர்கிறார்கள். சிலமைல்களுக்கு அப்பால் காட்டுத்தீ எரிகிறது. வனத்துறையினர் சோளகர்களின் உதவியுடன் தீயை அணைக்கிறார்கள். சிவண்ணாவின் உழைப்பை உணர்ந்து அவனை மாதம் 100 ரூபாய் சம்பளத்திற்குத் தீக்கங்காணியாக நியமிக்கிறார்கள். பாலப்படுகைவரை தீக்கங்காணியாக சுற்றி அலைகிறான். பாலப்படுகையில் ஜவனனின் மனைவியும் சித்தியின் தாயுமாகிய மாதியும் சிவண்ணாவும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள். ஜவணன் கூட்டிய பஞ்சாயத்தை முடித்துக்கொண்டு சோளகர்தொட்டிக்கு அழைத்துவருகிறான். சிவண்ணாவின் மனைவி சின்னத்தாயி மாமியாளிடம் சண்டையிட்டு மகன் ரேசனுடன் பிறந்த ஊரான உருளிகுட்டைக்குப் போய்விடுகிறாள். மாதி கொஞ்சங்கொஞ்சமாக சோளகர் தொட்டியில் ஒருத்தியாக மாறிவிடுகிறாள். ராஜீவின் சீர்காட்டில் வேலைக்கு வந்திருந்த மல்லி ரதியைப் பார்க்க வந்திருந்தாள். மல்லியைத் தேடி மல்லியின் அப்பா சிக்கையதம்பிடி வந்தார். ஏர் செதுக்கிக்கொண்டிருந்த
சிவண்ணாவுக்கு உதவியபடி சிறிது நேரம் பேசினர். பாண்டுரெங்கனின் கருப்புக்கல் குவாரியில் மேஸ்திரியாக வேலை செய்யும் சிக்கையதம்பிடி, காட்டின் கடத்தல்காரர்களால் உருவாகியுள்ள பயத்தின் காரணமாக வேலையிலிருந்து விலக விரும்புவதை விளக்கினான். சந்தனக்கடத்தல் வீரப்பனை நேரில் பார்த்த அனுபவத்தை விளக்கினான். தொட்டியில் அறுவடை முடிந்த ஒரு நாளில் சித்தி பூப்பெய்துகிறாள். மாதியின் விருப்பப்படி அவளது அண்ணன் கெஞ்சனை கர்நாடகம் தொட்டமாரா சென்று, சிவண்ணா அழைத்துவந்தான். கெஞ்சன் தனது மகன் ஜீருண்டைக்கு விரைவில் சித்தியைப் பெண் கேட்டு வருவதாக உறுதியளித்தான். தீக்கங்காணி வேலை முடிந்து பல மாதங்கள் ஆயிற்று. ஒருநாள் காலை பொழுதில் போலிஸ்காரர்கள் ஜீப்பில் வந்து மிரட்டலாக அறிவித்தனர். வீரப்பனைப் பிடிப்பதற்காகத் தமிழ்நாடு கர்நாடக போலீஸ் கூட்டு அதிரடிப்படை அமைச்சிருக்கு. நாங்க சொல்றபடி நீங்க கேட்டு நடந்துக்கணும். வீரப்பன் பற்றிய தகவல் தெரிஞ்சா உடனே தெரியப்படுத்தனும். நீங்க அவனுக்கு உதவி செய்தால் உங்களையும் சுட்டுக்கொல்வோம். வனத்திற்குள் வீரப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நீங்க யாரும் இனிமே வனத்திற்குள் எந்தக் காரணத்திற்காகவும் போகக் கூடாது. மீறினால் சுடப்படுவீர்கள். வீரப்பனைத் தேடுவதாகச் சொல்லி தமிழ்நாடு கர்நாடக காவல்துறையினரின் முகாம்கள் உருவெடுத்தன. எல்லா முகாம்களிலும் வீரப்பனின் பேரைச்சொல்லி அப்பாவி மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். கெட்டவாடி பாதையில் ஒசியூரப்பா தலைமையில் கர்நாடக போலீஸ் முகாம் சோளகர் தொட்டியினரை சித்திரவதை செய்தார்கள். தமிழ்நாடு தலமலை முகாமில் அப்பன் தொட்டபந்தையனும் அவனது மகன் பசுவராஜீவும் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.தொட்டியினர் வைத்திருந்த வேட்டை துப்பாக்கிகளை ஒப்படைக்க நிர்பந்தித்து நிராயுதபாணிகளாக மக்களை மாற்றினார்கள். நிராயுதபாணிகளான பழங்குடிமக்கள் மீது பலவடிவங்களில் சித்திரவதைகளை நிகழ்த்தினார்கள். காட்டுமிராண்டித்தனமாகத்
தாக்குவதில் தொடங்கி ஒர்க்சாப் மின்சாரம் ஏற்றுதல், சித்திரவதைகளுக்கு ஆளாகியப் பெண்களின் உடல்களை வன்புணர்ச்சியால் மேலும் துயரப்படுத்துதல், பிறந்த சிசுவை விச ஊசியிட்டுக் கொல்லுதல், சித்திரவதையின் கடைசி கட்டமாக ஆண்களைக் கொன்று வீரப்பன் படையினரது சீருடைகளை அணிவித்து தேடுதல் வேட்டையில் கொன்றதாகக் கணக்கு காட்டுதல் என ஏராளமான சித்திரவதைகளை நிகழ்த்தினார்கள். சித்திரவதை முகாமிலிருந்து சிவண்ணா தப்பித்துவிடுகிறான். வீரப்பன் படையில் இணைந்து தற்காத்துக்கொள்கிறான். சிவண்ணாவைப் பற்றி விசாரிப்பதற்காக மாதியும் சித்தியும் இழுத்துச்செல்லப்பட்டு
பல துயரங்களுக்குப் பிறகு உயிர் பிழைத்து வருகிறார்கள். சிவண்ணா மாதியின் விருப்பப்படி வீரப்பனை விட்டு விலகிவருகிறான். தலமலை முகாமில் சிக்காமல் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரண் ஆகிய செய்தி நாளிதழ்களில் வெளிவருகிறது. தலமலை முகாமில் சிக்காமல் சிவண்ணா உயிர்தப்பிய செய்தியினால் மாதி மகிழ்கிறாள்.
1.17.2.சங்கம்
அறிமுகம்
கொல்லி மலை மலையாளியான சாவித்திருமனின் மகன் சாவிச்சடையனை மையமாகக் கொண்டு இந்த நாவல் அமைக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாயத்து ஒன்றியம் அலுவலகத்திலிருந்து அதிகாரி தோரணையுடன் இருவர் காரில் மலைக்கு வந்து சாவிச்சடையனை சந்தித்து அவனது அப்பனை அழைத்துவரச் சொன்னார்கள். வந்திருப்பவர்களைப் பற்றிய அச்ச உணர்வுடன் சென்ற சாவிச்சடையன் “சர்க்காரன் வந்திருக்காம்பா” என்று தந்தையை அழைத்தான். சர்க்காரன் என்றாலே கொல்லிமலை வாசிகளுக்கு காவல் இலாக்காவும் வனப்பாதுகாப்பு இலாக்காவும்தான் தெரியும். அவர்களைக் காவல்துறை என்று நினைத்துக்கொண்ட சாவித்திருமன் அஞ்சி சேவை செய்யத் தயாரானார். அவர்களின் கட்டளைப்படி நாலு பலாப்பழம், இரண்டு வாழைத்தாறு, இருப்பத்தைந்து அன்னாசிப்பழம் ஆகியவற்றை விலையின்றி காரில் ஏற்றினார். அதிகாரிகள் வண்டியைக் கிளப்பிச் சென்றனர். திருமனின் மனைவி திருமி பத்துப் பன்றிக்குட்டிகளைக் குடும்பப் பொருளாதார நலன் பற்றிய கனவுகளுடன் வளர்க்கிறார். திருமனின் மகள் பிடாரி சாமைகஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்தாள். கஞ்சி குடித்துவிட்டுத் திருமனும் சடையனும் விவசாய வேலைக்குக் கிளம்புகின்றனர்.
மலை அடிவாரத்திலுள்ள சமவெளிப்பகுதியில் ஒவ்வொரு புதன் கிழமையும் சந்தை கூடும். மலைவாசிகள் இந்தச் சந்தையில்தான் தங்களது உற்பத்தி பொருட்களைச் சுமந்துசென்று விற்பனை செய்வர். சந்தையில் சர்க்கார் தீர்மானித்த வரியைவிட இரண்டுமடங்கு வரிவசூலிக்கின்ற கந்துவட்டிக்காரர்களிடம்
அதிகாரம் இருக்கின்றது. மலைவாசிகள் அவர்களது சந்தையை நாடி வாழ்வதன் காரணமாக காலமெல்லாம் கீழ்நாட்டுக்காரர்களிடம்
அடிமையைப்போல அஞ்சி வாழ்கின்றனர். மலைவாசிகள் தங்களது உற்பத்திப் பொருட்களைக் கீழ்நாட்டு வியாபாரிகள் தீர்மானிக்கின்ற விலையில் விற்றுவிட்டுக் கிடைத்த வருமானத்தில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வருவார்கள். வருமானத்தின் போதாமையால் பல நேரம் கடனுக்குப் பொருளை வாங்கிக்கொண்டு கடன்காரனாக மலைக்கு திரும்புவார்கள். திருமன் சந்தையை முடித்துவிட்டு, மகள் பிடாரி தாய்மாமன் வீட்டு நோம்பிற்குச் செல்வதற்காகப் புதுத்துணியைக் கடன் பெற்று வாங்கி வருகிறார்.
ஊர் தர்மகர்த்தா ஊருக்குத் தலைமையாள் ஆவார். மூன்று நியாயத்திற்காக பஞ்சாயத்துக் கூடியிருந்தது. 1.மாட்டைய கோவாலுவின் மனைவியுடன் சினுப்ப பெரியசாமி வாழ்ந்துவிட்டான். 2.முகூர்த்த ஏர் கட்டியபோது சாவித்திருமன் தனது காட்டில் முள்ளு வெட்டி நெருப்பு வைத்துக் கொளுத்தியிருக்கிறான். 3.கலச வெள்ளையனின் மனைவி கருமாயி வீட்டுக்கு தூரமாகிய போது ஊர் கட்டுப்பாடுபடி கிராம பொதுக் குடிசையில் தங்காமல் வீட்டிலேயே தங்கிவிட்டாள்.
சத்தியச்சடங்கின் மூலமாக பெரியசாமியின் குற்றத்தை நிரூபித்து “எரனூறு ரூவா குத்தமும், ரெண்டு மொடா கேவுரும், ஒரு பன்னியும்” பெரியசாமி கொடுக்க வேண்டும் எனவும், சாவித்திருமனும் கருமாயியின் கணவனும் இருபத்தஞ்சு ரூவா குத்தம் செலுத்தனும் எனவும் தர்மகர்த்தா தண்டனை வழங்கினார்.
மலைவாசிகள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்லமாட்டார்கள். ஓடையில் சென்று சுடுநீர் வைத்துக் குளித்துத் துணிதுவைத்துத் தங்களைப் புதுப்பித்துக்கொள்வார்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று தோட்டக்கலை காய்கறி அபிவிருத்தி அலுவலர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். கூட்டத்தில் ஒரு அதிகாரி பேசினார். சர்க்கார் நிறைய உதவி செய்யவிருப்பதை விளக்கினார். இலவசமாகப் பழச்செடிகள், காபி, ஏலக்காய் செடிகள் கொடுக்கப்படும் என்பதையும் உரம், உழுபடை கருவிகள் பாதி விலையில் கொடுக்கப்படும் என்பதையும் விளக்கினார். பின்னாலிருந்து திட்டமிட்டபடி ஒரு அதிகாரி கையை உயர்த்தியபோதெல்லாம் மக்கள் பேச்சைப் புரிந்துகொண்டதைப்போல
கைதட்டி நடித்தார்கள்.
மழை பொய்த்ததால் மழைவேண்டி சாணிவெட்டுவிழாவிற்கு
நாள் குறித்துக் கொண்டாடினார்கள். பிறகு லேசான மழை பெய்ததும் பன்றி வேட்டைக்கு உகந்த பருவமென்று ஊரே ஒன்றுபட்டு தர்மகர்த்தா பூசாரி தலைமையில் பன்றிவேட்டைக்குச் சென்று வேட்டையாடினர்.
கந்துவட்டிக்காரன் அஜீஸ்சாயபுவின் கையாள் சுக்கரப்பள்ளன் வட்டி வசூலிக்க வரும்போதெல்லாம் உரிய தேதியில் பணம் செலுத்தாதவர்களைத் தண்டித்து வந்தான். சாட்டையால் அடித்துத் துவைப்பதிலிருந்து வீட்டுப்பெண்களை இழுத்துச்செல்வதுவரை கொடுமைகளை நிகழ்த்தினான். மலைவாசிகள் அந்தக் கொடுமைகளை எதிர்க்க இயலாதவர்களாக இருந்தனர். வெள்ளையனை வட்டியைச் செலுத்திவிட்டு திருப்பிக்கொள்ளுமாறு
கட்டளையிட்டுவிட்டு அவனது மனைவியை ஊரே பதறும்படி இழுத்துச் சென்றான்.
சிலோன் சீரங்கன் இலங்கை தேயிலைத் தோட்டத்தொழிலாளியாக வாழ்ந்து வந்தவன். தொழிலாளர் நல போராட்டங்களுக்கான சங்கத்திலிருந்து பிரச்சனைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வது பற்றிய அனுபவங்களைப் பெற்றவன். கந்துவட்டிக்காரர்களின்
அடாவடித்தனத்தை எதிர்க்க முயற்சித்தான். மலைவாசிகளின் எதிர்ப்பு உணர்விற்கு வழிகாட்ட முன்வந்தான். வெள்ளையனை அழைத்துச்சென்று கந்துவட்டிக்காரர்கள்
மீது போலீஸில் புகார் செய்தான். போலீஸ்காரர்கள் கந்துவட்டிக்கார சாயுபை அழைத்து அவர் முன்னாலேயே வெள்ளையனையும் சீரங்கனையும் சித்திரவதை செய்தார்கள். பிரச்சனைகளுக்கு எதிராக மலைவாசிகள் சங்கமாக ஒன்றிணையாமல் பிரச்சனைகளை எதிர்கொள்வது கடினம் என்பதை சீரங்கன் உணர்ந்தான்.
சேலத்திற்குச் சென்று சங்கத் தலைவர் வேலுச்சாமியை சந்தித்து கொல்லிமலையில் சங்கம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சடையன் உறுதுணையாகச் செயல்பட்டான். ஊரில் நிகழும் தவறுகளை எதிர்த்து மக்களை சங்கமாக்குவதற்காக இருவரும் முயற்சித்தனர். வனத்துறையினர் ஒரு பொய்புகாரை சுமத்தி சடையனையும் சீரங்கனையும் ஒரு வருட சிறைதண்டனைக்கு ஆளாக்கினார்கள். தோழர் வேலுச்சாமி வெள்ளையனை கந்துவட்டிக்காரன் சாயபு வீட்டிற்கு அழைத்துச்சென்று சாயபுவை மிரட்டி கருமாயியை விடுவித்தார். பணம் கொடுக்காமலேயே வெள்ளையன் மனைவி விடுவிக்கப்பட்டதால் ஆச்சரியமடைந்த மலைவாசிகளிடம் சங்கத்துக்காரர்கள் மீதான நம்பிக்கை உருவெடுக்க ஆரம்பித்தது. வெள்ளையன், பெரியசாமி, ஆண்டி, பொன்னம்மாள் போன்ற பலர் சங்கம் உருவாக ஆதரவாக உருவாகினர்.
கீழ்நாட்டுச் சந்தையைச் சார்ந்திருப்பதுதான் நமது பலவீனம் எனில் சந்தையை மலையிலேயே உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த முயற்சிக்குச் சங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று வேலுச்சாமி உறுதியளித்தார். சிறையிலிருந்து சீரங்கனும் சடையனும் வந்ததும் முயற்சி செய்வதாக வெள்ளையன் தெரிவிக்கிறார்.
சிறையிலிருந்து இருவரும் விடுதலையாகி வருகிறார்கள். சிறையில் வாழ்ந்தபோது தோழர் குமார் அவர்களிடம் சங்கம் பற்றியப் பாடங்களை அதிகமாகக் கற்றுக்கொண்டு வந்திருக்கிறார்கள். தோழர் வேலுச்சாமியின் வழிகாட்டுதல்படி மலைவாசிகளின் சங்கத்தை இருவரும் உருவாக்குகிறார்கள். சீரங்கன் சங்கத்தலைவராகவும் சடையன் செயலாளராகவும் பொறுப்பேற்று சங்கத்தை வளர்த்தெடுக்கிறார்கள். இவர்களது புதிய முயற்சிக்கு ஊரில் ஆதரவும் எதிர்ப்பும் பலவாறாக உருவாகி வந்தன. சடையனின் குடும்பம் அவனது சங்க நடவடிக்கைகளுக்கு எதிராகவே இருந்தது. ஒவ்வொரு திட்டங்களையும் சங்க உறுப்பினர்கள் குழுவாகக் கலந்துரையாடி முடிவெடுக்கின்றார்கள்.
சங்கம் இரண்டு பிரச்சனைகளை எதிர்கொள்ள உறுதியாக முடிவெடுத்திருந்தது. 1.கீழ்நாட்டுக்காரர்களின்
அனைத்துத் தடைகளையும் முறியடித்து சந்தையை மலையிலேயே கூட்டுவது. 2.தைல மரங்கள் நடுவதற்காக கொல்லிமலை வாசிகளின் நிலங்களை அபகரித்துக்கொண்டு மலையிலிருந்து அகதிகளாக மக்களை வெளியேற்றுவதற்கான சர்க்காரின் திட்டத்தை முறியடித்து வெற்றிகொள்வது.
திட்டமிட்டபடி கலெக்டரின் தலைமையில் சந்தையை மலையிலேயே உருவாக்கி வெற்றிபெறுகிறார்கள். அடுத்ததாக சர்க்காரின் நிலஅபகரிப்பில் சாவித்திருமனின் நிலமே முதலாவதாக இடம் பெற்றிருந்தது. திருமன் நிலத்தைப் பாதுகாக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பயனளிக்கவில்லை. அதிகாரிகளின் கொடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக ஏதும்செய்ய முடியாத நிலையில் கர்ஜித்துக்கொண்டிருந்தான். இறுதியாக அவன் சங்கத்தின் செயலராகிய தனது மகன் சாவிச்சடையனை கூவி அழைத்தான். சடையனும் சங்கத்தினரும் படை சூழ நிலஅபகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தினர். ஒன்றுதிரண்ட மக்கள் கூட்டத்திற்கு அஞ்சி அதிகாரிகள் பின்வாங்கித் திரும்பிச் சென்றனர். நிலஅபகரிப்பிற்காக நடப்பட்டிருந்த சர்க்காரின் அதிகாரப்பூர்வமான பலகையைப் பிடுங்கி எறிந்தார்கள். சர்க்காரின் அடுத்தக்கட்ட ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ள மலைவாசிகளின் சங்கம் தயாராகத் தொடங்கியது.
...
...
No comments:
Post a Comment