Wednesday, May 7, 2025

நால்வர் ஓடும் உலகம்

 

நால்வர் ஓடும் உலகம்

புதியவன்

ஒரு குழுவில் நான்கு ஓட்டக்காரர்கள் சமூக மேன்மைக்காக ஒடுகிறார்கள். வாழ்வா சாவா போராட்டத்தில் மனித குலத்தை வீழ்த்த முயல்கின்ற சமூக தேக்கத்திற்கு எதிரான RELAY ஓட்டம்.

சாதிவெறி, மதவெறி, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பண்பாட்டுச் சீரழிவு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சொத்தாதிக்க வெறி, இலாபவெறி, உரிமையற்ற அடிமைநிலை, பொறுப்பின்மை, கடமையின்மை, மகிழ்ச்சியின்மை, நிம்மதியின்மை, செயல் மற்றும் சிந்தனை திறனின்மை ஆகிய அனைத்தும் வெற்றியடைவது சமூக தேக்கத்தின் இலக்கு. இலக்கின் இறுதியில் மனிதகுலத்தைக் கொலை செய்வது நோக்கம். எண்ண முடியாத சித்திரவதைகளைத் தொடுத்து சமூக மேன்மையைப் பூமிப்பந்தோடு வெட்டி புதைப்பது சமூக தேக்கத்தின் நோக்கம்.

இந்த பூமிப்பந்தை மனிதகுலத்தின் அரவணைப்புடன் வாழ வைப்பதற்காக சமூகமேன்மை குழுவினர் வெற்றியை நோக்கி ஓடுகிறார்கள். மனிதகுல முன்னேற்றம், இயற்கை பாதுகாப்பு, உலக ஒற்றுமை, சமத்துவம், சமூகநீதி, பொருளாதார உயர்வு, பண்பாட்டு முன்னேற்றம், பொதுவுடைமையை நிறைமாதமாக சுமந்திருக்கும் மக்களதிகார பேரரசு அனைவரும் சமூக மேன்மையின் வெற்றிக்காக ஆர்பரித்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். மகிழ்ச்சியும் நிம்மதியும் புகழும் பெருமிதமும் வண்ணத்துப்பூச்சிகளாக அவர்களைப் பரவசப்படுத்துகின்றன. அனைவருக்கும் இந்த பூமி சொர்க்கமாக சாத்தியப்பட வேண்டும்.

சமூகத் தேக்கத்தின் கொலை வெறியில் பூமிப்பந்து தன் மூச்சை நிறுத்திவிடக் கூடாது. சமூக மேன்மையின் குழுவினர் பூமிப்பந்தின் சுழற்சியைப் பாதுகாப்பார்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன், ஒற்றுமையும் மகிழ்ச்சியும் பொங்க ஆர்பரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றியே இலக்கு என்ற நோக்கத்தில் வேகம் குறையாத பெரும் ஓட்டத்தை தீர்மானித்துள்ளார்கள் சமூக மேன்மையினர். நால்வரும் ஒவ்வொரு எல்லையில் நிற்கிறார்கள். முதலாவது வீரர் தயாராகிரார். சமூகமேன்மை இலக்குகளைப் பிரகாசித்துக்கொண்டு தீபச்சுடர் ஏற்றப்படுகிறது. முதலாவது வீரர் தீபச்சுடரை ஏந்திக்கொண்டு ஓட்டத்தைத் தொடங்கி வைப்பார். ஒவ்வொருவரது எல்லையிலும் இலட்சியச்சுடர்  கைமாற்றப்படும். நான்காம் வீரர் மனிதகுலத்தின் கையில் ஒப்படைத்தாக வேண்டும்.

சமூகமேன்மையைத் தோற்கடித்து சமூகத் தேக்கம் முந்திக்கொண்டால் உலகம் அச்சப்படும்படி மனிதகுலம் எரித்துக்கொல்லப்படும். அந்த மைதான வெளியில் காண்போர் பதைபதைக்கும்படி மனிதகுலத்தின் உடல் நெருப்பிடப்பட்டு வேதனை தாங்காது வெளியெங்கும் அலறித்துடித்து ஓலமிடும். மனிதகுலத்தின் துயரம் தாங்காது இயற்கை கண்ணீர் முட்டும். மனிதகுலத்தின் கருகிய உடல் நம் சுவாசத்தில் எரியும். அடுத்து ஒவ்வொருவராக கொலை செய்யப்படுவோம்.

இந்த துரோகத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவே சமூக மேன்மை குழுவினர் ஒவ்வொருவரும் தனது எல்லைவரை வேகம் குறையாத தீர்க்கமான ஓட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளார்கள்.

ஓட்டத்தைத் தொடங்கும் முதலாவது வீரர் உழைக்கும் மக்களின் பிரதிநிதி. ஓட்டம் தொடங்குகிறது.

பசித்த மக்களின் உணவிற்காக…

பிறந்த குழந்தையின் பாலிற்காக…

வளர்ந்த குழந்தையின் கல்விக்காக…

எழுந்த இளைஞரின் வேலைக்காக…

உழைக்கும் மக்களின் உரிமைக்காக…

இயற்கை போற்றும் வாழ்விற்காக…

தீர்க்கமான ஓட்டத்தை பரிபூரணமாக முடிக்கிறார். இரண்டாவது வீரரின் கையில் இலட்சிய தீபம் சுழல்கிறது. இரண்டாவது வீரர் அரசியல் நிபுணர்களின் பிரதிநிதி. ஓட்டத்தைத் தொடர்கிறார்.

உழைக்கும் மக்களின் விடுதலைக்காக…

சுயநல இலாபவெறி ஒழிவதற்காக…

மதவெறி பாசிசம் ஒழிவதற்காக…

சாதி வன்முறை ஒழிவதற்காக…

ஆண் பெண் சமத்துவம் உயர்வதற்காக…

பொருளாதார உயர்வை அடைவதற்காக…

பண்பாடு புதிதாய் மலர்வதற்காக…

கார்ப்பரேட் காவி பாசிச ஒழிப்பிற்காக…

தீர்க்கமான ஓட்டத்தை பரிபூரணமாக முடிக்கிறார். மூன்றாவது வீரரின் கையில் இலட்சிய தீபம் சுழல்கிறது. மூன்றாவது வீரர் இலக்கியம் கலை அறிவியலின் பிரதிநிதி. ஓட்டத்தைத் தொடர்கிறார்.

இலக்கியம் யாவும் சமூக மேன்மைக்கே…

கலையும் அறிவியலும் போரிசையே…

மனிதம் பாடும் நல்லிசையே…

வர்க்கப் போரின் பேரிசையே…

குழந்தைகள் ஆடும் விளையாட்டே…

வாழ்க்கை அனுபவ நாடகமே…

தீர்க்கமான ஓட்டத்தை பரிபூரணமாக முடிக்கிறார். நான்காவது வீரரின் கையில் இலட்சிய தீபத்தை உயர்த்துகிறார்.

நான்காவது வீரரோ போதை வஸ்துவால் கண்கள் சிவந்திருக்கிறார். அவர் பள்ளி சீருடை அணிந்த ஒரு மாணவர். ஆங்கில வழி கல்வி, இந்தி நிர்பந்த கல்வி சூழ்ச்சிகளுக்கு ஆளாகியிருந்தார். தாய்மொழித் திறன் அழிந்து சிந்தனைத்திறனை இழந்திருந்தார். சாராய நாற்றம் வீசுகிறது. அவர் சமூக மரியாதையை இழக்கும் நிலையில் இருந்தான். காட்சி போதையில் செயல் திறனையும் இழந்துகொண்டிருந்தான்.

கையில் ஆன்ராய்டு பேசியில் பப்ஜி வன்முறை விளையாட்டை ஆர்ப்பாட்டமாக விளையாடிக் கொண்டிருந்தான். காட்சி போதையால் அவன் மூழ்கி செத்துக்கொண்டிருந்தபோது மனிதகுலம் ஒரு பிஞ்சுக்குழந்தையின் மரணம் போல பரிதவித்துக்கொண்டிருந்தது. அந்த முகத்தில் நம்பிக்கைச் சுடர் ஏற்ற ஒரு சிறுமி வந்தாள்.

ஓடத் துப்பில்லாதவனே. செல்பேசியில் பப்ஜி ஆடி வாழ்வில் எதை கிழித்துவிடப் போகிறாய். ஓடடா ஓடு என்று அவனைத் துரிதப்படுத்தினாள்.

அவன் ஆபாசம் பொங்க அலட்சியமாக சிரித்தான். அவன் பார்வையில் இரட்டை அர்த்தம் பதிலாக துளிர்த்தது. சினிமா சீரழிவுக் கதாநாயகனின் பாவனையை ஒத்திருந்தான். அவனது இச்சை பார்வைக்கு இலக்காகாதபடி செயல்திறனுக்கு ஏற்ற கன்னியமான உடை அணிந்திருந்தாள். அவன் பார்வைக்கு பதிலாக உள்ளங்கை அதிர ஓங்கி ஓர் அரை.

அறிவில் இலட்சியம் நிறைந்தவர்களின் மெல்லிய உள்ளங்கையும் பாறைபோல் கனத்திருக்கும். இந்த உண்மையை அந்த அரை அவனுக்கு ஓங்கி உணர்த்தியது.

முகவாய் உடைபட கீழே விழுந்தான். உடைந்த தாடையுடன் தலை கிறுகிறுத்தான். மென்மையாக கண் திறந்தான். மண் புழுதி நெருப்பாய் பறந்தது. தீபத்துடன் ஓடிக்கொண்டிருந்தாள் சிறுமி. அவனது திறந்த இமை மூடுவதற்குள் மனிதகுலத்தை நெருங்கியிருந்தாள். 

 

No comments:

Post a Comment