Wednesday, March 19, 2025

காதல் செய்ய விரும்பு - முனைவர் புதியவன் - மகஇக நூல் வெளியீடு

 



 

காதல் செய்ய விரும்பு அணிந்துரை

 

தோழமையுடன்,

கோவன் 

மாநிலச் செயலாளர்,

மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

 

பேராசிரியர். முனைவர். சிவக்குமார் (புதியவன்) எழுதிய காதல் செய்ய விரும்பு என்கிற இந்த நூல்  இன்றைய  இளைஞர்களின் மனநிலையை எதிரொளிப்பதாய் உள்ளது. இந்த தலைமுறையினரில் காதல் வயப்படாதவர்கள் அரிதினும் அரிது. ஒரு காலத்தில் பெற்றோர் - உறவினர் பார்த்து செய்து வைப்பதே திருமணம் என்பது பொது விதியாகவும், காதலிப்பது என்பது விதிவிலக்காகவும் இருந்த நிலை வேகமாய் மாறி வருகிறது

 

இதை இப்படியும் கூறலாம் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் திருமணம் குறித்த பார்வையும், கட்டுப்பாடுகளும் குறிப்பிட்ட சாதிக்குள் இணையைத் தேடுகின்ற அகமண முறையை ஊக்குவிப்பதாக இருந்தது. சமூகம் அதிலிருந்து முதலாளித்துவத்தை நோக்கி வளர வளர திருமண உறவுகளின் பார்வையும் மாறி வருகிறது.

 

கற்காலந்தொட்டு இன்றைய கணினி காலம் என்று காலங்காலமாய் காதல்  இருந்தே வருகிறது.

 

காதல் குறித்த தீண்டாமை   இருந்த காலமும் மாறி வருகிறது. அன்று எதிர் பாலினத்தவர் இருவருக்கு இடையில் மட்டும் இருந்த காதல்  

இன்று, தனக்கு பல பெண் நண்பர்கள் உள்ளனர் என்று ஒரு இளைஞனும் தனக்கு பல ஆண் நண்பர்கள் இருக்கின்றனர் என்று ஒரு யுவதியும் பெருமை கொள்கிற ஒன்றாய் காதல் புதிய பரிமாணத்தையும் எட்டிவிட்டது.  

 

காதல் எப்பொழுதும் சமூகத்தின் நேர்மறை அம்சம்(positive feature) தான்.

 

"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் "

 

என பாவேந்தர் பாரதிதாசன் காதலுக்கு உள்ள வலிமை குறித்து கூறுவார்.

 

"யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’

 

சங்க காலத்தைய காதலின் சமத்துவம் பற்றி பழந்தமிழ் இலக்கியமான குறுந்தொகை கூறுகிறது.

 

மெய்ப்பொருளில் காதலித்து மனம் புரிவோர் தம்மை அறியாமலேயே சாதிய அடுக்கை  தகர்த்து நெகிழ்வாக்கும் சம்மட்டி ஆகின்றனர்.

 

அதே போல் காலங் காலந்தொட்டு காதலுக்கு பெருந்தடையாய் சமூகம் இருந்தும் வந்துள்ளது.

 

நால்வர்ண பாகுபாட்டை மீறி காதலித்ததற்காக கழுவேற்றப்பட்ட காத்தவராயன் , கொலை செய்யப்பட்ட முத்துப் பட்டன் என 

நமது நாட்டார் வழக்காற்றில் பல வர்ண சாதி படுகொலைகளில் பதிவுகள் காணக்கிடக்கின்றன.

இன்றும் அவை ஆதிக்க சாதி வெறியர்களின் ஆணவப் படுகொலைகளாக தொடர்கின்றன.

 

இன்றைய நுகர்வு வெறி சமூக சூழலில் காதலிக்க மறுத்தற்காக அமிலத்தை  பெண்ணின் முகத்தில் ஊற்றுவதும், குரூரமாக கொலை செய்வதும் என்பதாக சுயநல நுகர்வு வெறியின் மூர்க்கத்தனமாகவும் மாறிவிட்டது.

 

காதல் பயிர் சமூகத்தில் முளைப்பதும் காலம் நெடுகிலும்  ஆதிக்க சாதி அரிவாள்கள் அதை வெட்டி எரிந்தும் வருகின்றன

 

பல வலிமையான காதல் கூட ஆணவ கொலைகளில் முடிகிறது ஏன்?

 

 

இவ்வாறு காதல் குறித்த வரலாறு, எது காதல், எது தடை? எப்படி அது உடைத்தெறியப்படும் என்பது குறித்த  சமூக விஞ்ஞான வரலாற்று பார்வையோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

 

காதல் தன் உறுதிப்பாட்டால் அல்ல அதை சமூக மாற்றத்திற்கான கருவியாய் உயர்த்தி பிடிக்கும் முயற்சியின் வழியில்தான்  வெற்றியை எட்டுகிறது என்பதை பதிவு செய்துள்ளது

 

உலகப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான உயர்ந்த தத்துவத்தை உருவாக்கிய காரல் மார்க்ஸ் ஜென்னியை  மிக ஆழமாக நேசித்தார். என்றாலும் அவர்கள் இருவருமே உலகப் பாட்டாளி வர்க்கத்தின் தத்துவத்தை உருவாக்கும் பணியில் சுயநலத்தை முன்னிறுத்தும் குடும்ப வாழ்க்கையை புறக்கணித்தனர். வாட்டி வதைத்த வறுமையில் இருந்து தன் குழந்தைகளை காப்பாற்ற நேரமின்றி தவித்தனர்.

 

காதல் என்பது சுயநல மறுப்பின் வெளிப்பாடு என்பதற்கு கார்ல் மார்க்ஸும், ஜென்னியும் இன்றும் காதலர்களுக்கு கலங்கரை விளக்கமாய் வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்

அந்த வகையில் காதல் என்பது அடிப்படையில் சுயநல மறுப்பு, பொதுநல நோக்கு, அக்கறை என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளது இந்த நூல்.

 

இந்த நூலில்  மனித குல வரலாற்றில் காதல் எப்பொழுது தோன்றியது என்பது பற்றியும், இன்று ஆணாதிக்கத்தால் பெருமளவு சிதைக்கப்படுகின்ற காதல் சுதந்திரமாய் வளர்ந்து விளைந்த ஒரு சமுதாய காலகட்டம் இருந்தது. அது தாய் வழி சமுதாயம் என்பது குறித்தும் இந்த நூலில் வரலாற்று ரீதியான ஆய்வின் அடிப்படையில் பதிவு செய்துள்ளார். குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் குறித்த ஏங்கெல்ஸ்ஸின் நூல் மற்றும் தேவி பிரசாத் சட்டோபாத்தியாவின் நூல் ஆகியவற்றிலிருந்து தரவுகளை எடுத்துக் கொண்டும் விளக்கியுள்ளார்.

 

ஒரு பெண் எந்த ஆணுடன் பாலுறவு உரிமையில் ஈடுபட வேண்டும் என்பதைத் தந்தை அதிகாரச் சமூகமே தீர்மானித்தது.

இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் உருவாகின்ற சமூக அங்கீகாரமே திருமணம் என்றானது.

 

மனித வரலாற்றில் காதலும் திருமணமும் வெவ்வேறு துருவங்கள்.

தாய்த் தலைமை சமூகத்தில் ஆணாதிக்கப் பண்புகளுக்கு எதிராக பெண்களிடம் தோன்றிய விடுதலை உணர்விலேயே காதல் பிறந்தது.

தந்தை அதிகாரச் சமூகத்தில் பெண் விடுதலைக்கு எதிராக ஆண்களிடம் தோன்றிய சொத்தாதிக்க உணர்விலேயே திருமணம் பிறந்தது.

என்று விளக்குகிறார் நூலாசிரியர்.

 

சமூகவிஞ்ஞானக் களமின்றி காதலித்துத் திருமணம் செய்ய விரும்புவது பேராபத்து. இது சமூக அவலங்களை முடிவின்றித் தொடரச் செய்யும். இதற்குப் பதிலாக குல பாரம்பரிய திருமண முறைகளுக்குக் கட்டுப்பட்டு, சகிப்புத்தனமாகவும்  போலித்தனமாகவும் வாழ்வது எவ்வளவோ நல்லது என்று எண்ணும்படியான ஆபத்தும் இருக்கின்றது என எச்சரிக்கிறார்.

 

அடக்குமுறையும் அடிமைத்தனமும் இல்லாத ஓர் உலகில் காதல் செய்வது எத்தனை இன்பமானது

நினைத்துப்பார்த்தாலே நெஞ்சமெல்லாம் இனிக்கிறது

அத்தனை அழகாகக் காதல் செய்வார்கள்

பாலுறவு உரிமை காதலர்களுக்கு முதல் படியாக அமையலாம். ஆனால், முற்றுப் புள்ளியாக நிச்சயம் அமையாது!

பாலுறவு உரிமை காதலுக்கு அளவுகோளாக அமையலாம். ஆனால், வரையறையாக நிச்சயம் அமையாது

காதலர்களின் விவாகரத்து உரிமை அத்தி பூத்தது போலவே பயன்படுத்தப்படும்.

அவர்கள் குழந்தைகளைத் தூக்கி கொஞ்சு மொழியில் இசைப்பார்கள்

சமூக அறிவை உணவோடு ஊட்டுவார்கள்

சமூக அக்கறையை உழைப்போடு விதைப்பார்கள்

எதிர்கால நலனுக்காக ரசனையுடன் உழைப்பார்கள்

திடீரென்று சிலபொழுதில் இறுதி மூச்சை விட்டுவிடுவார்கள்!

மூச்சு நின்றாலும் கண்களில் நம்பிக்கை ஒளி மின்னும்

இறந்த நிலையிலும் இதழில் புன்னகையே மிஞ்சும்!

இத்தகைய பொன்னுலகை நமது வாழ்நாளுக்குள்ளேயோ அல்லது நமது பிள்ளைகளின் கண்களாலேயோ காணப் போகின்றோம்.

 

காலம் காலம் தொட்டு காதலுக்கு இருந்து வந்த தடையை நீக்குகின்ற அருமருந்தாய் சமூக மாற்றமே விளங்கும் என்பதை விளக்குகிறது இந்த நூல்.

 

இனப்பெருக்க  உந்துதலாகிய எதிர்பாலினக் கவர்ச்சியும்

வாழ்வின் ஒத்துப் போகும் புரிதலுடைய நட்பின் ஆழமும், ஒன்றுகலக்கின்ற உணர்வில் மட்டுமே காதல் முழுமையடைவதில்லைவரலாற்று உணர்வும், எதிர்காலக் கனவும் 

மனிதர்களுக்கு மட்டுமே உரியது

வருங்காலத் தலைமுறைகளின் நல்லுலகக் கனவுகளைச் சுமந்து அக்கறையுடன் உழைக்க வேண்டும்

இதில்தான் காதல் முழுமையடைகிறது!

 

என காதலில் சமூகக் கடமையை சமூக அக்கறையை முன்நிபந்தனையாக்குகிறது இந்த நூல்.

 

காதல் தோன்றியது போல கடவுள் தோன்றியதும் கற்பு கடவுள்கள் உருவானதும், அது ஆணாதிக்கத்தின் நியாயப்படுத்தல்களை கடவுளின் வழியாக செய்ய உருவாக்கப்பட்டது என்றும் விளக்குகிறார். ஆணின் நிர்பந்தத்தால்  அல்லாமல் தாமே விரும்பி பாலுறவுக் கட்டுப்பாடுகளுடன்  வாழ்பவர்களாக பெண்களை உருமாற்ற வேண்டும். இதற்கான  முயற்சியாக ஆணதிகாரத்தால் திட்டமிட்டுக் கற்புக் கடவுள்கள்  உருவாக்கப்பட்டன என்கிறார்.

 

சகமக்கள் நலனிலேயே தனது நலனும்

சகமக்கள் வாழ்விலேயே தனது வாழ்வும்

முழுமை பெற முடியும் என்பதே

சமூக விஞ்ஞானம் உணர்த்தும் பேருண்மை! என்ற பார்வையில் ...

 

இந்த நூல் ஐந்து தலைப்புகளாக அதில் இரண்டு கவிதைகளாக  மற்றவை காதல் பற்றிய சமூக விஞ்ஞான பார்வையை வழங்குவ தாக, ஆய்வாக

எழுதப்பட்டுள்ளது.

 

1.உன்னைக் காதலிக்கக் காத்திருக்கிறேன்

2.காதல் வரலாறு

3.காதல் செய்ய விரும்பு

4.காதலிலிருந்து கடவுள்வரை

5.உள்ளம் சுடும்

6.காதலர்தின கீதம்

 

வாழ்வில் ஒத்துப் போகும் புரிதலுடைய நட்பின் ஆழத்தில்

எதிர்பாலினக் கவர்ச்சி மிகுந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உதயமாகின்ற சமூக உணர்வே காதல்.

 

என வரையறை செய்கிறார்.

 

அந்த வகையில் இன்றைய தலைமுறைக்கு காதல் குறித்து குழப்பத்தை, தப்பெண்ணத்தை போக்குவதாகவும் அது சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகவும் பயன்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையும் உருவாக்குவதாகவும் எழுதியுள்ளார். அவரை வாழ்த்துவோம். உற்சாகப்படுத்துவோம். அது தொடர்ந்து எழுதுவதற்கான உந்துதலைத்தரும். சமூக மாற்றத்தை முன்னிறுத்தி போராடுகின்ற

இத்தகைய புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆர்வமும் பெருமையும் கொள்கிறது.

 

வாழ்த்துக்கள் !

 

 

 

காதல் செய்ய விரும்பு

 நூல் அறிமுகம் 

 நவீன் பாரதி

https://youtu.be/StEGjEOWkpU?si=uR_NjxnK25fNWA7P

 

 

காதல் செய்ய விரும்பு

முகநூல் - https://www.facebook.com/share/v/1UPriCuGZh/?mibextid=qi2

 

நூல் கிடைக்கும் இடம் - கீழைக்காற்று பதிப்பகம் - 89256 48977

சென்னை         -     98419 09673

திருச்சி               -     80569 05898

தஞ்சை             -      94431 57641

கோவை             -    75984 41969

வேலூர்             -      95009 19587  

கரூர்                    -    99446 33347

மதுரை             -       9789523401

 

 

No comments:

Post a Comment